சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மாயத் திரைகளில் வரைபடம் -1

25 அக்டோபர், 2008

அல்பங்களிலிருந்து முகங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
..........................................................................................
சித்தாந்தன்
புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் தெருவில் அலைந்தபடியிருக்கிறார்கள்.கண்ணாடிகளாலான கட்டடங்கள் சூழ்ந்த நகரத்தில் எல்லோருடைய அந்தரங்கங்களும் பரிசோதிக்கப்படுகின்றன.நகரத்தின் கண்காணிப்பாளர்கள் இரவுகளின் சருகுகளை மிதித்தபடி திரிகிறார்கள்.புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் அல்பங்களிலிருந்து முகங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.நேற்றுப் புன்னகையோடு விடைபெற்றவன் காலையில் பிணமாகத் தெருவில் கிடந்தான்.சனங்கள் யார் யாரையோவெல்லாம் சபித்தனர்.
மரணத்தின் குறிப்பேடுகள் ரகஸியங்கள் நிரம்பிய தாள்களாலானவை.ஊகங்களால் மட்டும் புனையப்படும் மரணக்கதைகளை புராதன சரித்திரங்களின் குப்பைத்தொட்டிக்குள்ளிருந்து கொண்டு காலம் வாசிக்கின்றது
முகங்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் அல்பங்கள் எல்லோர் வீடுகளிலும் இருக்கின்றன.அவை கண்ணீரின் சலனத்தில் மிதந்து திரிகின்றன.குருதியின் வெம்மையில் உலர்ந்துபோகின்றன.
குழந்தைகள் வீரிடும் நடு இரவுகளில் யன்னல்களின் பின்னும் கதவுகளின் அருகாமையிலும் கேட்கின்றன காலடிகள். மரணத்தின் மணம் எங்கும் பரவிவருகிறது. நிசப்தங்களால் பூட்டப்பட்ட சாலைகளை பூட்ஸ் கால்கள் உதைக்கின்றன. கனவுகளை வனைந்து கொண்டிருக்கும் பின்னிரவை நொருக்கியுடைக்கின்றன அவலங்கள் நிரம்பிய குரல்கள்.


குழந்தைகள் அல்பங்களுக்குள் என்னத்தைத் தேடுகின்றன?


குழந்தைகள் தயாரித்து வைத்pருக்கும் விளையாட்டு அல்பங்களுக்குள் வரையப்பட்ட பொம்மைகளின் படங்கள் பூக்களின் படங்கள் சாமிகளின் படங்கள்.இன்னும் தான் விரும்பாத நபரையோ விலங்கையோ கோடூரமாக வரைந்து வைத்திருப்பார்கள்.குழந்தைகளின் அல்பங்கள் வளர்ந்தவர்களின் அல்பங்களைக் போன்றிருப்பதில்லை.
நான் சந்தித்தேன் தன் நள்ளிரவுப்பயங்களை அல்பத்தில் வரைந்து வைத்திருக்கும் குழந்தையை.; அவள் தன் அல்பத்தில் தன்னால் குழந்தையாக வாழ முடிந்ததில்லை எனச் சொன்னாள்.தன் தெருக்கள் தனித்துப்போனதை தனது முற்றத்தில் அச்சமூட்டும் காலடிகள் முளைத்துப் பெருகியதை தன் நணபர்கள் வீட்டுக்குவராத நாட்களில் தான் தனித்துப்போக்கிய பொழுதுகளை சில நாட்களுக்கு முன் காணாமற்போன தன் தந்தையின் புன்னகிக்கும் முகத்தை தாயின் கண்ணீர் பெருகிய முகத்தை அல்பத்தில் இட்டு வைத்திருந்தாள்
அவளது அல்பத்தில் இரவுகள் மண்டிக்கிடந்தன சூரியன் ஏதோ தொலைவில் சேற்றிடைப் புதைந்து கிடந்தது.நிலவு வராத வானம் நட்சத்திரங்களையும் இழந்து கிடந்தது. நிலவுருக்கள் சிதறியபடியிருந்தன.
தான் வரைந்த வெள்ளைச் செவ்வரத்தம் பூவின் இதழ்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் படத்தைக் காட்டினாள். அதைத் தன் தாய் என்றாள். தன் மாட்டுத் தொழுவத்தில் காணாமல் போயிருந்த பசு மாட்டை கசாப்புப்புக்கடையில் தோல் உரிக்கப்பட்டு தலைகீழாகத் தொங்குவதாக வரைந்திருந்தாள்.அது தன் தந்தை என்றாள்.
குழந்தைகள் நினைவுகளை அல்பங்களில் சேமிக்கின்றன.கனவுகளின் நிறங்களால் தம் இயலாமைகளையும் சிதறடிக்கப்பட்ட வாழ்வையும் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உலகங்களையும் வரைகின்றன.
குழந்தைகளின் அல்பங்களில் குறுந்தெருக்கள் நெஞ்சாலைகளைக் குறுக்குறுப்பதில்லை.தொலைவுகளை அவர்கள் வார்த்தைகளால்த் தாண்டுகிறார்கள். சொற்களில் உறங்கிக் கொண்டிருக்கும் உலகம் காட்சிகளில் இயல்பு குலைந்தும் வர்ணங்கள் சிதைந்தும் வெளிப்படுகின்றன.
ஒரு அல்பத்துக்கான படங்களை சேகரிக்கத் தொடங்கும் குழந்தைகள் அவற்றை தங்கள் கனவுகளிலிருந்தும் தங்கள் பயங்களிலிருந்தும் வரையத்தொடங்குகின்றன.


வளர்ந்தவர்களின் ஆல்பங்கள் அல்லது வரையப்படாத நிழலுருக்கள்


நான் கூறுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனது கனவுகளின் சாயங்கள் பெயரத் தொடங்கிவிட்டன. மலைகள் இல்லாத நிலத்தில் வளர்ந்திருக்கின்றன மாபெரும் கற்சுவர்கள்.நண்பர்களை இழந்த நெடுநிலம் என்னுடையது. பறவைகளுக்கு கூடுகளுமில்லை குரல்களுமில்லை. நிராகரிக்கப்பட்ட வானத்தில் வரையறுக்கப்பட்ட கனவுகளுடன் பறந்து திரிகின்றன.
பறத்தல் என்பது உணவுக்காக அலைதலும் துயிலுக்காக கூடடைதலும் மட்டுமே. நெடுநிலம் சிறகுகளை உறிஞ்சுகிறது.
எனது அல்பங்களை இறந்த காலங்களின் பிணங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். காரணம் நிகழ்காலத்தில் யாரும் கனவு காண்பதில்லை நினைவுகளை சேமிக்கும் மனவெளியும் காயங்களால் நிரம்பிக்கிடக்கின்றது. கண்ணீரால் வரையப்பட்ட சித்திரங்களைப் பார்த்து எரிந்து கொண்டிருப்பவர்களிடம் என்னால் கையளிக்க முடியுமானதெல்லாம் பிணங்களை இட்டு வைத்திருக்கும் மரணத்தின் குறிப்புக்களைதத்தான் அல்பங்களையல்ல

2 comments:

சாந்தி நேசக்கரம் சொன்னது…

"முகங்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் அல்பங்கள் எல்லோர் வீடுகளிலும் இருக்கின்றன.அவை கண்ணீரின் சலனத்தில் மிதந்து திரிகின்றன.குருதியின் வெம்மையில் உலர்ந்துபோகின்றன"

யதார்த்தம் உரைக்கும் வரிகள் சித்தாந்தன்.

தங்கள் கவிதைகள் சில எனது வானொலி நிகழ்ச்சிகளில் சேர்த்திருக்கிறேன்.

- சாந்தி -

8 நவம்பர், 2008 அன்று AM 8:10
சித்தாந்தன் சொன்னது…

சாந்தி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்வின் யதார்த்தம் என்பதே வன்முறைகளுக்கிடையில்தான் வேறு எதை எழுத முடியும். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் வானொலி பற்றி எனக்குத் தெரியப்படுத்த முடியுமா

13 நவம்பர், 2008 அன்று AM 12:07

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்