சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

வீரனாக்கப்பட்டவனின் மரணம்

24 செப்டம்பர், 2009


சித்தாந்தன்
.................................................................
துப்பாக்கிகளின் மீது நம்பிக்கையில்லாத உன்னை
யுத்தத்திற்கு இழுத்துச் சென்றார்கள்

உன் கழுத்தில் தொங்கிய சிலுவையை அறுத்தெறிந்துவிட்டு
சயனைட் குப்பியைத் தொங்கவிட்டனர்
உன்னை அவசர அவசரமாக வீரனாக்கியபடி
அவர்கள் கோழைகளாகிக் கொண்டிருந்தனர்

உன் மனைவியின் முகத்தில்
சூரியன் குருதிச் சகதியில் மூழ்கிக்கிடந்தது
நம்பிக்கை தரும் எந்தச் சொற்களையும்
கடைசியிரவில் நீ அவளுடன் பரிமாறியிருக்கவில்லை
அதற்குள்
உன்னை இழுத்துச் சென்றுவிட்டனர்

யுத்தத்தின் தீவிரம் துரத்தத் துரத்த
அவர்கள் வீரர்களைத் தயாரித்துக்கொண்டேயிருந்தார்கள்
சவப்பொட்டிகளும்
புதைக்குமிடாங்களும் அருகிப்போயின

போரின் அதிர்வுகளால் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருந்த
நாட்களின் ஒரு பொழுதில்
பொலித்தின் உறையால் முடிச்சிடப்பட்ட
உன் பிணத்தை
உன் மனைவியிடம் ஒப்படைத்தார்கள்

இறுதிப் பாடல் இசைக்கப்படாமலும்
மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படாமலும்
உன்னைப் புதைத்த மண்மேட்டிலிருந்து
கதறியழுதபடியிருந்த அவளின் மடியில்
கண்ணீரில் நனைந்துகொண்டிருந்தது குழந்தை

சிதைவுண்டுபோன வாழ்வின்
மீளவியலாத் துயரம் படிந்த நிலத்தில்
குழந்தைகளையும் வீரர்களாக்கிக் கொன்ற பின்
மகாவீரர்கள்
துப்பாக்கிகளை கடற்கரை மணலில் எறிந்துவிட்டு
சரணடைந்தனர்
உனது மரணமோ
அவர்களின் கோழை முகத்தின் மேல்
காறியுமிழ்ந்தபடியிருக்கிறது

#இறுதிப் போருக்காக புலிகளால் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்பட்டு பலியிடப்பட்ட நண்பன் அருள்தாஸின் நினைவாக.

கதை வியாபாரிகளின் நகரம்

23 செப்டம்பர், 2009

சித்தாந்தன்
.......................................................
உடலெல்லாம் பூசப்பட்ட மாய நறுமணப்பொடிகள்
நாறத்தொடங்கிய பின்
எந்தக் கூச்சமோ அருவருப்போவின்றி
கதைகள் வாசிக்கப்படுகின்றன தெருக்களில்

கதைகளில் உறங்குபவனின் தேகத்தில்
அச்சிடப்பட்டிருக்கின்றன எண்ணற்ற கதைகள்
உடல் பொசியும் மணத்துடன்
அலையும் கதைகளின் வியாபாரி
“கடனில்லை” என்ற அட்டையைக்
தூக்கிக் கொண்டு திரிகின்றான்

வாசிக்கப்படாத கதைகளுக்காய்
வாசித்தவற்றை மறந்துபோன மனிதர்கள்
மிதக்கும் ஓரிரு உரையாடல்களையும்
கதையென நம்பிக் கவ்வித் தின்கிறார்கள்

கணம் பிந்தி வந்த புதிய வியாபாரி
கதைகளை அவிழ்க்கிறான்
முண்டியடிக்கும் மனிதர்களிடையே
தன்குறியை உயர்திக் காட்டுகின்றான்

ஊனமும் சிதழும் வழியப் புழுக்கள் நெளியும்
அவன் குறி வழி பெருகும் கதைகளை
அவசர அவசரமாக் அள்ளிக் கொண்டு
கலைகின்றனர் மனிதர்

மேலும் ஒருவன் கதைகளைக் கூவி விற்றபடி
தெருவில் வருகின்றான்

விடுபட்டுப்போன காலத்தின் வார்த்தைகள்

12 செப்டம்பர், 2009

சித்தாந்தன்
............................................................
1
சட்டம் உடைந்த கண்ணாடியை
காவித்திரிகிறேன்
பிரதிபலிப்புக்களுக்குள்
மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது அழகிய தருணங்கள்

ஏதிரெதிர்முகங்களிடையே
காற்று ஒரு பயணியைப் போலலைகிறது
2
வார்த்தைகளுக்கு வர்ணமிட்டு
வரையப்பட்ட ஓவியப்புதிரை
வழிபடும் மனிதர்களிடை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
நொந்த மனதுக்கு
இரவின் சிறகைக் கட்டியபடியிருந்தாயா
அல்லது மாயக் கனவுகளின்
சிறகுகளைக் கத்தரித்தபடியிருந்தாயா
3
பாதைகளற்ற நிலம் எப்படியிருக்கிறது
மந்தைகள் வெறுந்தரை தின்னுகையில்
மேய்ப்பனின் மந்தை ஓட்டும் தடியில்
எந்தக் களிப்பிற்காக கொடி பறந்துகொண்டிருந்தது
4
கடலின் அலைகளில்
மனிதர்கள் புதைகையில்
வீறிட்டுக் கதறிய குழந்தை
உடைந்து சிதறிய நட்சத்திரத் துண்டுளை
என்ன செய்தது அலைகளில் வீசிற்றா
தன் கனவின் வெளியில்
எறிந்து விளையாடியதா
5
கேள்விகளுக்கேதும்
இடமில்லாத நிலத்தில் அடவிகளில்
மூண்ட பெரு நெருப்பை ஊதி வளர்த்தவர்கள்
எங்குள்ளார்கள் அறிய ஆவல்

கைவிடப்பட்ட நிலத்தில்
கற்களாய் எஞ்சியவர்களின் தீபங்கள்
எப்படி அணைந்து போயின
6
கடைசியில் செய்யப்பட்டதெல்லாம்
பசித்த வயிறுகள்
பால் வற்றிய முலைகள்
கதறல்
கண்ணீர்
மௌனம்
ஏமாற்றம்
எப்போதும் நீங்காத அடர்ந்த இருள்
7
உன் சிலுவை எங்கே
தவிர
அவரவர் சிலுவைகளும்
8
உயிர் சுமந்து இடந்தேடி அலையும் போதும்
எதையுணர்ந்தாய்
வெறுமைமீது கரைந்து கொண்டிருக்கும்
ஒளிவட்டம் சூடிய மனிதரின்
சொற்களில் தெறித்த வன்மத்தின் நெடியையா
9
எரியும் நிலத்தின்
கடைசிப் பசுமைத்துளிரும் கருகியபின்
எதை எடுத்து வந்தாய்
எதை விட்டு வந்தாய்
உயிர் காவிச் சலிப்புற்று
நடை தளர்ந்த
உன் மனைவிக்கும் மகவுக்கும்
என்ன சொன்னாயோ
10
காலத்தின் ஈரம்
வற்றிக் காய்ந்த பிறகு
நீ எதைத்தான் எழுத முடியும்
(தானா. விஷ்ணுவுக்கு)

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்