சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

நியோகா- கமராவுக்குள் தொலைந்துபோன கதை

04 அக்டோபர், 2015


யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் செப்பரம்பர் 20 இரவுக் காட்சியாக கைலாசபதி கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘நியோகா’ இளவயதில் யுத்தத்தில் தன் கணவனைத் தொலைத்த ஒரு பெண்ணின் கதையாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. இதன் இயக்குநர் சுமதி பலராம் ஆவார். ஏலவே இவரின் ‘உறையும் பனிப்பெண்கள்’ சிறுகதைத் தொகுதியில் உள்ள கதை ஒன்றையே அவர் திரைப்படமாக எடுத்திருந்தார்.
திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது சுமதியின் குறித்த சிறுகதையில் காணப்பட்ட வலுவும் வீச்சும் திரைப்படத்தில் காணப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. நேர்த்தியான கதையை திரைப்படத்துக்காக அவர் மாற்றியமைத்திருக்கின்றார். சிறுகதைக்கும் திரைக்கதைக்குமான வேறு பாடு புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான். எனினும் சிறுகதை ஏற்படுத்திய அனுபவத்தை திரைப்படம் தரவில்லை என்னும் போது அது கலையாக்க உத்தியின் மீதான கேள்வியாக அமைந்துவிடுகின்றது.
பாத்திரங்களின் நீண்ட உரையாடல்கள் திரைப்படத்தின் வலுவை இழக்கச் செய்வதாகக் காணப்பட்டன. உரையாடல்களை தவித்திருக்க வேண்டிய இடங்களில் உரையாடல்களால் திரைக்கதையை சுமதி வலுவிழக்கச் செய்திருக்கின்றார். புலம்பெயர் வாழ்வில் ஏற்படத்தக்கதான பண்பாட்டு எதிர்கொள்ளலின் சிக்கல்களை நுண்மையாக பதிவு செய்ய எத்தணிக்கும் சுமதி கதையின் மையக் கருத்துக்கு இயையத் தக்கவகையில் பதிவு செய்வதில் தவறியிருக்கின்றார். ஆனால் திரைக் கதைக்கமைவாக பாத்திரங்களை தெரிவு செய்திருப்பது பாராட்டத் தக்கதே தந்தையாராக வருபவரின் நடிப்பும் படத்தின் மையப் பாத்திரத்தின் நடிப்பும் மெச்சத் தக்கன.
உடல் தாகத்தினால் கட்டிலிருந்து புரண்டு கொண்டிருக்கும் பெண்ணின் அசைவுகளுடன் ஆரம்பிக்கும் திரைப்படம், இறுதியில் தன் பிள்ளையுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருப்பதுடன் முடிகின்றது. புனிதத்தின் பெயரால் தமிழ்ச் சமூகம் ஒரு பெண்ணுக்கு இயல்பாக இருக்கக் கூடிய காமத்தை ஏக்கத்தை புரிந்துகொள்ளாது போலியான சமூக ஆசாரங்களால் அவளை சிறுமைப்படுத்தி ஒடுக்குகின்றது என்பதுதான் திரைப்படத்தின் மையக்கதை.
வயதுபோன நிலையிலும் காமத்தில் களிப்படையும் தந்தையும் தாயும் கூட, இளவயதில் தன் கணவனை இனந்தெரியாதவர்களிடம் தொலைத்துவிட்டு அவஸ்தையும் பெண்ணின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் சாத்திரக்காரிடம் அவளின் வாழ்வை எதிர்வு கூற வேண்டி நிற்பது அபத்தமே. தம்பியின் மனைவியால் சுமதியின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் தம்பியால் அவளின் புரிதலும் நிராகரிக்கப்படுகின்றது. இவற்றை மீறி பெண்ணின் மனவுணர்வு அலைபாயும் தருணங்களை திரைபடம் காட்சிப்படுத்துகின்றது. மையப்பாத்திரைத்தை நோக்கி குவியப்படுத்தப்பட;டிருக்கும் தொலைபேசி வாயிலாக அறிமுகமாகும் ஆண், சாமியாராக வருபவர், பூங்கொத்தோடு அலைபவர், உறவினராக வந்து வீட்டில் தங்கியிருப்பவர் என நான்கு பாத்திரங்களும் பெண் பொதுப்பரப்பில் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளை பதிவு செய்வதற்காக பின்னப்பட்ட பாத்திரங்கள். இவற்றில் உறவினராக வரும் பாத்திரத்தை சிறுகதையில் வலுவாக காட்டியிருக்கும் சுமதி திரைப்படத்தில் நீத்துப்போகச் செய்துவிட்டிருக்கின்றார். அந்த பாத்திரத்துக்கும் மையப்பாத்திரத்துக்குமான முக்கியத்துவத்தை திரைக்கதையில் வலுவாக்கியிருந்தால் சிறுகதையப் போல திரைப்படத்தையம் கனதியாக காண்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
திரைப்படத்தின் முடிவில் மையப்பாத்திரம்.’’ கற்பமாக இருக்கிற நான் சாப்பிடாமல் இருக்கக் கூடாது’’ என சொல்லி விட்டு சாப்பிட்டு எழுந்துபோகிறாள். பின்னர் சிறிது காலத்தின் பின் என காட்சிப்படுத்தி விட்டு பூங்காவில் தன் பிள்ளையுடன் விளையாடுவதாக மையப் பாத்திரம் காணப்படுகின்றது.
சுமதி இதை ஒரு உச்சக்கட்ட காட்சியாக காட்ட முயற்சித்திருக்கின்றார் போல இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான உணர்ச்சி வெளிப்பாட்டையும் முகத்தில் வெளிப்டுத்தாது இயந்திரத்தனத்துடன் அந்த வார்த்தைகள் நின்றுவிடுகின்றன. பார்வையாளரின் மனதில் ஏற்படுத்தக் கூடியதான அதிர்வுக்கான சாத்தியங்களையும் அது தந்துவிடாமல் பொருளற்ற வார்த்தை போல புதைந்துவிடுகின்றது.
திரையிடலுக்குப் பின்னரான உரையாடல்களில் பார்வையாளரினால் கேட்கப்பட்ட கேள்விகள் அந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பதுதான். மையப்பாத்திரத்துடன் தொடர்புபடும் நான்கு ஆண்பாத்திரங்களில் யாருக்கு பிறந்த பிள்ளை அது அல்லது நான்கு பாத்திரங்களையும் விட வேறு ஒருவருக்கு பிறந்த பிள்ளையா? என்ற விதமாக கேள்விகள் இருந்தன. பேசாமல் யாராவது ஒருவரை அப்பிள்ளைக்கு அப்பாவாகக் காட்டியிருக்கலாம் போலத் தோன்றியது. கடைசியில் அப்பா யார் என்பதை தேடுவதாக திரைப்படத்தின் முடிவு அமைந்துவிட்டதோ என்று தோன்றியது. திரைக்கதையில் யாவற்றையும் சொல்ல வேண்டுமா? என உரையாடலின் போது சுமதி பார்வையளர்களிடம் கேட்டார். தான் முடிவை திட்டமிட்டே அமைத்ததாகவும் குறிப்பிட்டார். அவரது கேள்வி நியாயமானதுதான்.
பெண்ணின் உடல் வேட்கையை காமத்திற்கான ஏக்கத்தை ஆரம்பத்தில் காட்டி படத்தை ஆரம்பித்த சுமதி, வெறுமனே உடற்சுகத்தின் விளைபொருளா அந்தப்பிள்ளை என்ற கேள்வியையும் கூடவே எழுப்பச்செய்துவிடுகின்றார். அரங்கில் ஒருவர் அப்பன் பெயர் தெரியாத பிள்ளை எவ்வளவு சிரமத்தை சமூகத்தில் எதிர்கொள்ளும் என்ற களிவிரக்கமிக்க கேள்வியையும் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பிரார்த்தனையாக அப்பிள்ளை போலிச் சாமியாருக்கோ அல்லது தொலைபேசியில் உரையாடுபவருக்கோ பிறந்திருக்கக் கூடாது எனவும் பூக்கொண்டு திரிபவருக்கோ அல்லது உறவினராக அறிமுகமாகும் பாத்திரத்துக்கோ பிறந்திருக்க வேண்டுமென இருந்திருக்கக் கூடும். ஆனால் சுமதியின் சிறுகதை இத்தகைய கேள்விகளுக்கு இடந்தராது நேர்த்தியாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
அரங்கில் இத்திரைப்படம் குறித்து கவிஞர் ஒருவர் கவித்துவமான விளக்கத்தை தெரிவித்திருந்தார். அந்த பெண்ணை பூச்செடிகளை விரும்பும் பாத்திரமாக சுமதி காட்டியிருப்பது. மலரத்துடிக்கும் ஒரு பெண்ணை சமூகம் எவ்வாறெல்லாம் திரையிட்டுத் தடுக்கிறது என்பதை திரைப்படம் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான். எனினும் திரைப்படம் என்று வரும் போது ரசிகநிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.
என்னைப் பொறுத்தவரையில் ‘நியோகா’ கமராவுக்குள் தொலைந்துபோன கதையாகவே தெரிகின்றது.

பூனைப் பதிகம்-1


ஆழ இறங்கிச் செல்கின்றேன்
காலங்கடந்து வந்து சேர்ந்த புத்தகங்களுக்குள்.
மொழியே ஒரு சிலந்தியாகி
மூளையில் வலை பின்னுகிறது.
எழுத்தும் சொல்லும் பொருளுமென
விரியும் அதிகாரங்களில்
மனனம் செய்யவியலா வார்த்தைகள் தொங்குகின்றன.
ஆதி புனைவுகளின் கதைகளில்
பெரும் படைசூழ உலாப் போகும்
அரசர்களின் பின்னே என்னால் தொடரமுடியவில்லை.
காதலும் காமமும் நிரம்பிய
கவிதைகள் யாவிலும் அருவமாய் ஊர்கின்றன
ஆயிரமாயிரம் பொய்த்தேள்கள்.
விடுபடலாம்
ஒரு வார்த்தையை விடவும் சிறியது
பெருங்கடல்.
பெருங்கடலை விடவும் சிறியது
பெருவெளி.
இதற்கு மேல் எதுவுமில்லை.
ஊர்கின்றேன்
ஊர்ந்து ஊர்ந்து
ஊள்ளொளி பெருக்குகின்றேன்.
உள்ளொளி பெருக்கி
யாவுமற்று வீழ்கின்றேன் பாற்கடலில்
ஒரு பூனையாய்.
02.03.2014
00
இன்றுதான் புதைகுழிகளிலிருந்து
மனிதர்கள் மீண்டெழுந்தனர்.
இரத்தமும் சதையுமற்று
தாடைவரைவிரிந்தபற்களில்
அவலத்தைச் சூடியிருந்தனர்.
கண்ணீர் இருக்கவில்லை
வார்த்தைகள் பேசவில்லை
ஆனபோதும்
கரியாய் உறைந்தகாலத்தின் வடுக்களை
மொழிகடந்தசொற்களில்
சொல்லத் தொடங்கினர்.
காலம்
கழிவறைக் குழியில் நாறத்தொடங்கியபின்
நாவற்ற இலட்சம் ஆன்மாக்களின்
கதைகளிலிருந்து
ஒருமலரைத்தானும் பறிக்கமுடியவில்லை.
யாவுமேகதைகளானபின்
புதைகுழிகளின் மேல்
மழைபெய்தாலென்ன
சூரியன் படுத்துறங்கினால் என்ன
ஆனபோதும்
கள்ளிச் செடிகளும் மலராக் காலத்தில்
சொற்களையும் கடந்து நீள்கின்றது
கதைகளின் துயரம்.
00
வெறுமையின் மீது வலி நெய்யும் பாடல்.
.......................................................................
எதைக் கொண்டு
இந்த வெற்றிடத்தை நிரப்ப
எல்லா இன்மைகளிலும்
தனித்தலையும் பறவையின்
சிறகொலியினாலா
இரவின் கருமை தடவிய கணங்களில்
மௌனித்திருக்கும் இலைகளின்
பரிபாஷையினாலா
வெறுமனே கல்லிடுக்குகளுக்குள் இருந்தவாறு
கத்தித் தொலைக்கும் தவளைகள்
மழையின் அழகிய தருணங்களையும்
பசை நாக்கினால் இழுத்து ஒட்டுகின்றன
இது காலத்தின் வெற்றிடமாய்
எஞ்சியருக்கிறது
யாரோ ஒருவன்
இதன் வெறுமையின் மீது
வலி நெய்யும் பாடலை மீட்டுகின்றான்
வெற்றிடத்தின் மேலாய்
பறக்கும் பறவைகளின் நிழல்கள்
அசையும் கருந்துயராய் நீள்கின்றன
நிரவி அடைக்கவியலா வெற்றிடத்தை
சொற்களால் துயரெழுப்பிச் சூழ்கின்ற
எண்ணற்ற குரல்களையும்
கௌவித் தின்கின்றது காத்திருந்த மிருகம்.
00
வலியுணர்தல்
.......................................
சரி செய்யப்படாத பிரச்சினைகளால்
நிறைந்திருக்கும் அறையில்
நீயும் நானும் தனித்திருக்கின்றோம்
புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலைக்கண்ணாடி
பலமுறையும் புறக்கணிக்கிறது என் பிம்பத்தை
முழுமையும் சிதறிய குளிர் நீர்
ஆவியாகத் தொடங்கிவிட்டது
உஷ்ணமான மூச்சால் நிறைகிறது அறை
நீ சூசகமாய்த் தவிர்க்கும்
என்னுடலின் தவிப்பைத் தின்று தொலைக்கின்றன
சுவரில் புணரும் பல்லிகள்
உனது ஆழ்ந்த உறக்கத்தின் மூச்சொலி
துரத்திச் செல்கிறது
விடுபட்ட நாட்களின் வார்த்தைகளை
அறையை மூடியிருக்கிறோம் நாம்
அல்லது
நம்மை மூடியிருக்கிறது அறை
சாவித் துவாரத்தின் வழி
வெளியேறிச் செல்கிறது காற்று
புணர்ந்து களைத்து நகர்ந்த பல்லிகளின்
வெறுமையினிடத்தில்
தெறித்து வழிகிறதென் சுக்கிலம்
00
நினைவையுறுத்தும் ஒற்றைச்சொல்
........................................................................
விலக்கப்பட்டவனின் இரவு
முட்களில் வீழ்ந்துகிடக்கிறது
அவன்
தனது நூறாவது கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறான்
பறவைகளின் தாகம்
அதில் வற்றிப்போயிருக்கிறது
பிளவுண்ட ஆறுகளின் சுனைகள்
அடைபட்டிருக்கின்றன
அவன் எழுதிக்கொண்டேயிருக்கிறான்
பகலின் நிர்வானம்
கவிதையில் மிதக்கின்றது
ஆயிரக்கணக்கான பிணங்களை
இழுத்துக் கொண்டு
ஒரு காலம் ஊர்ந்து கடக்கிறது
அவனின் நூறாவது கவிதை
மௌனங்களைத் தின்று
ஒரு சொல்லடுக்காய் நீள்கின்றது
கருணைகூர மறந்த நாட்களை
இன்னும் நினைவுகளில் தேக்கிக்கொண்டு
ஒரு சருகைப் போல
வெளி முழுதும் படர்கிறது
கவிதையிலிருந்து தவறிய ஒற்றைச்சொல்
00

சித்தாந்தன் கவிதைகள்


என் நினைவுகளில்
நட்சத்திரங்களைப் பயிரிட்ட படி
கடந்துபோகிறது ஒரிரவு.
மின்னும் தாரகைகளின் நடுவில் யாரோ
கைவிட்டுச் சென்ற தனிமையின் கரியநிறத்தை
வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.
நிலவு பற்றிய நினைவுகளற்ற
இரவின் விசுவாசிகளின் கவிதைகள்
என்னை சலிப்படையச் செய்கின்றன.
இரத்தத்தின் வர்ணங்களை
காலைச் சூரியன் பெய்வதற்கிடையில்
நான் கடந்து போய்விட வேண்டும்
காயாத நினைவுகளின் வெளியை.

00
என்னை நீ நேரிய கோடுகளால் வரையலாம்
வளைந்த கோடுகளால் வரையலாம்
வட்டமாக சதுரமாக
நீள்வட்டமாக முக்கோணமாக
எப்படியும் வரைந்துவிட்டுப் போகலாம்.
நான் எப்போதும் கோடுகளாகவே இருக்கிறேன்.

இருத்தலுக்கும் இன்மைக்குமிடையில்
நீளும் வெளியில்
பறந்துகொண்டிருக்கும் பட்ஷியின் பாதை
என் கோடுகளால்த்தானானது.
அதிகாலையிலெழுந்து
அந்தியில் படும் சூரியனின் பாதையும்.
சில நேரங்களில் வண்ணங்களில் குழைகின்றேன்
பலபோதுகளில் கருமையில் நிரம்பித் ததும்புகின்றேன்.
அதோ ஒரு குழந்தை
என் கடந்த கால்த்தின் நினைவுகளை
தன் பிஞ்சுப் பாதங்களால் வரைந்து செல்கிறது.
அதோ காலத்தின் சாட்சியாக
யாசித்துக்கொண்டிருக்கும் முதியவனின் முகத்தில்
படர்ந்திருக்கும் கோடுகளில்
அதே யாசிப்பின் வார்த்தைகளோடு
நானேயிருக்கின்றேன்.
நான் கோடுகளில் லாவகமாக வசப்பட்டுவிடுகின்றேன்
நீ எப்படியாவது வரைந்துவிட்டுப் போ.
00
இந்த இரவை யன்னலாக்கி
திறந்து வைத்திருக்கின்றேன்.
என் இமைகளின் வழி நுழைகின்றன
நட்சத்திரப் பறவைகள்.
முன்பு பறவைகளைப் போலத்தான்
பறந்துகொண்டிருந்தது இந்த இரவும்
சற்றுமுன்புதான்
அதன் மீது சட்டங்களை அடுக்கி யன்னலாக்கி
உலராத காற்றின் வழியில்
திறந்து வைத்திருக்கின்றேன்.
அதன் மீது
உதிர்ந்த இறகுளை
திரைச் சீலைகளாய் நெய்கிறது காற்று.
தீராப் பகையாளியாய்
காற்று நுழையும் கணங்களில்
எதிர்கொள்ளத் தயங்கும் கடனாளியாக
நான் வெளியேறிவிடுகிறேன் இரவைவிட்டு.
இரவு என் மீதுதான்
தன் வலிநிரம்பிய கானத்தை இசைக்கிறது.
நானோ கானங்களைத் தின்னாச்
செவியுடையவனாகச் சபிக்கப்பட்டிருக்கின்றேன்
ஈரமற்ற காலத்தால்.
யன்னல்களே சிறகுகளாக விரிகின்றன
வானமோ தூர ஏகிச் செல்கின்றது.
தனித்தொலிக்கிறது
இரவின் கானம்.
00
என் சயனத்தின் நீர்ப்பரப்பில்
நீந்துகின்றன மீன்கள்.
நான் கணத்தில்
என்னை மீனாகப் பாவனை செய்தவனாய்
நீர்ப்பரப்பின் அடியாளம் வரை
மூழ்கியெழுகின்றேன்.
மீன்கள் என்னை ஏளனம் செய்கின்றன.
ஒரு சருகென மேலெழுந்து மிதக்கின்றேன்
கைகளைத் துடுப்பாக்கத் தெரியாத
என் கனவுகளில்
இன்னும் மீன்கள் நீந்தியபடிதானிருக்கின்றன.
ஓளிரும் அவற்றின் செதில்களும் செட்டைகளும்
என்னைப் பைத்தியக்காரனாக்குகின்றன.
நீர்ப்பரப்புக்கு வெளியே மீன்களில்லை
நீர்ப்பரப்பினுள்ளே நானும் மீனாக இல்லை.
இன்னும்
என் சயனத்தின் நீர்ப்பரப்பில்
நீந்துகின்றன மீன்கள்.
00
என் சுவர்களில்
மரங்களை வரைகின்றேன்.
முட்களாலான கிளைகளையும்
பசி போக்காத நச்சுக் கனிகளையும்
நிழலைப் பெய்யாத இலைகளையுமுடைய
மரங்களை.
அவை
காடுகளை ஏளனம் செய்தவாறு
மேலும் மேலும் ஓங்கி வளர்கின்றன.
கிளைகளில்
வந்தமரும் பறவைகளோ
பசியுடன் விழித்திருக்கின்றன.
மரங்களில் மேலும் கீழுமாய்
ஊர்ந்து திரியும்
ஒரு நூறு எறும்புகளும்
கண்டடைந்ததாக குதூகலிக்கும் பாதைகளில்
சுனைகளில்லை
நச்சுச் சுவறாத கனிகளில்லை.
பசித்திருக்கும் பறவைகளிடம்
நச்சுக் கனிகள் பசியை போக்கிடாதா? என்று
நான் கேட்கவில்லை.
நான் மரங்ளைச்
சுவரிலிருந்து அழித்துவிட்டு
உணவருந்தச் செல்கிறேன்.
பறவைகளும் பசித்தவயிறுகளுடன்
எழுந்து பறந்துவிட்டன.
எறும்புகள்தான் இன்னும் சுவரில் ஊர்கின்றன
சுனைகளையும் கனிகளையும் தேடியபடி.
00
கடற்கரை வெளி
....................................................
1
சாவுகளால் ஓலமிடும்
கடற்கரை வெளியில் முளையிடுகின்றன
குழந்தைகளின் விரல்கள்.
2
காகங்களும் கரையாது
வெறித்து நீளும் கடலில்
அலைகளும் செத்தபின்
துயரங்களால் நிறைந்த காற்று
மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.
3
பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது
அந்திச் சூரியன்.
குருதியின் நிறத்தை காறியுமிழ்ந்து போயின
நாட்கள்
போர் நாட்கள்.
4
சுட்டுவிரல் துண்டிக்கப்பட்டவனின் துப்பாக்கி
துருவேறித் துருவேறி
உப்பு மணலில் புதைகின்றது.
5
மரணம் நிரம்பிய கடற்கரை முற்றத்தில்
கால்களுக்குள் மிதிபட்டுச் சிதைந்துபோயிற்று
அவசரத்தில் மணமுடித்தவனின் கனவுகள்.
6
மாபெரும் பறை
தோல் கிழிந்து கிடக்கிறது.
வெற்றிக் களிப்பின் கீதங்களை
முணுமுணுக்கவியலாது
வயிறு பொருமித் துடிக்கிறது காற்று.
7
இலைகள் புலுண்டி மணக்க
மரங்களில் செத்துத் தொங்குகின்றன பறவைகள்.
பிணங்களை எரியூட்டிய தீயில்
புகைப்பிடிக்கிறான் படைவீரன்.
8
ஒப்பாரிகளும் ஓலங்களும் அடங்கிய நிலத்தில்
கொலையாளிகளின்
வெற்றிக் கூச்சலென இரைகிறது கடல்.
9
யாரும் திரும்பாத நிலத்தில்
பாலையை விரித்தபடி
கோபுரங்கள் உயர்கின்றன.
நினைவுகளை அழிக்க முடியாதவனின் குரலோ
அந்தரத்தில்…
10
சிதம்பிய கடலின் நுரைகளிலெல்லாம்
புழுக்கள்.
11
வானம்
கடல்
தரை
யாவுமே
கைகளற்றவனின் கனவுகளுக்கும் தொலைவில்.
12
கள்ளிகளும்
இன்னும் முட்செடிகளுமாய்
நினைவுகளின் புதரடர்ந்த நிலம்.
00
பறவைகளை அள்ளி வந்து 
என் அறை முழுதுமாக கொட்டியிருக்கிறது காற்று.
என் அறையின் கரிய சுவரெங்கும்
நான் வரைந்து வைத்திருந்த பறவைகள்
காற்றிடம் இறைஞ்சுகின்றன
அறைக்கு வெளியே விரிந்திருக்கும் வானத்தை காட்டுமாறு.
நான் கத்தரித்து வைத்திருக்கும்
அவற்றின் சிறகுகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுத்ததில்லை
விரிந்த வானத்தைப் பற்றி சித்திரத்தை விதைக்கவில்லை
ஆயினும் பறவைகள் அறிந்துவிடுகின்றன
பறத்தைலையும்
வானத்தையும்.
என் அறைக்கு வந்து சேர்ந்திருக்கும் புதிய பறவைகளை
என் கரிய சுவர்களில் தொங்கவிடுகின்றேன்.
அவை வானத்தின் கருமையில் தடுமாறி
மீண்டும் மீண்டும் சுவர்களில் மோதுகின்றன.
யன்னலினை மேவி மேலெழும் எனது பறவைகள்
வானத்தின் நீலத்தில் மிதக்கின்றன.
இன்னும் அறையில் மிதமான கறுப்பு நிறம்.
நான் புதிய சிறகுகளைச் சேகரிக்கின்றேன்.
00
தயக்கங்களை சொற்குறிகளுடன் கடந்தேன்
நிராதரவாய் காற்றில் அலைந்தன பொழுதுகள்.
மயிர்க்கொட்டியின் அசைவுகளுடன்
பழியுணர்ச்சியின் கரங்களில் புன்னகையைச் சூடிக்கொண்டு
எதிர்ப்படுகின்றனர் மனிதர்.
நீலம் கரைந்த என் கண்களில் சலனமுறும் காட்சிகளை
அடுக்குகளாக்கி ஒழுங்குபடுத்துகின்றேன்.
நினைவுகளில் உதறமுடியாத வடுக்கள்
சிறகு கிளர்த்திப் பறக்கவில்லை கடைசிவரை.
சாமங்களும் மதியங்களும் கலையாத என் பொழுதுகளை
சூரியனோ நிலவோ தாண்டவில்லை.
வெறும் பிரமைகளாலான ஒரு வனாந்தரத்தின் அந்தியில்
சிறு கல்லென கிடக்கின்றேன்.
00
இந்த எச்சில் பாத்திரத்தைக்
கழுவி வையுங்கள்
குருதியையும் நிணத்தையும் 
சமைத்துண்டவர்கள்
இதை எறிந்துவிட்ட போயிருக்கிறார்கள்.
தங்களின் கைகளை
வாசனைத் திரவியங்களில் தோய்த்தெடுத்துவிட்டு
புலால் நாறும் வாய்களால்
மலர்களின் மகத்துவம் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும்.
பழுப்பிலைகளில் துளிர்விடும்
யந்திரச் சொற்களால்
காலத்தின் ஊனத்தில்
பறக்கவிடுகிறார்கள் மகிமைக் காலத்தின்
வெண்ணிறத் துகிலை.
புரவிகளின் கொதிப்படங்காத் தெருவில்
இந்தப் பாத்திரம் கிடக்கிறது.
தனிமையின் நிமிடங்களில்
கரையேறாது கழிகின்றன
ஞாபகங்களின் திசுக்கள்.
யாராவது
இதைக் கழுவி வையுங்கள்
00
நான் விட்டுச் செல்கின்றேன்
சிறகுகளற்ற ஞாபகங்களை
மற்றும்
இலைகளற்ற பெருவிருட்சத்தை
இன்னும்
குளிர்மையற்ற மழையை
ஒலியற்ற எனது குரலை
இந்த வானம்
வனாந்தரத்தின் சாயலுடன்
மேலும் மேலும் விரிகின்றது.
யாராவது
எடுத்துச் செல்லுங்கள்
ஒரு பறவைக்கு
பறத்தலிலும் மேலானதாக
எதுதான் இருக்க முடியும்.
ஞாபகங்கள்
நீரூறிய பஞ்சாய் கனக்கின்றன. ்
நான் செல்ல விரும்புகின்றேன்
ஞாபகங்கள் அழிந்த பெருவெளிக்கு.
யாராவது எடுத்துச் செல்லுங்கள்
என் சிறகுகளற்ற ஞாபகங்களை.
00
கடைசிச்சொல்
....................................................................
நான் விலகிச் செல்லவே விரும்புகின்றேன்
தீயின் நர்த்தனத்தில்
அலைவுறும் காலத்தை
எழுதித் தீர்த்துவிட முடியாத சொற்களோடு
வாழ்வு கழிகிறது.
என் பிரிய நண்பர்களே
நாம் நிரப்பி வைத்திருக்கும் மதுக்குவளைகளில்
காலத்தின் சீழாய்
நுரைகள் ததும்புகின்றன.
இந்த யுகத்தின்
இறுதியில் புயலைக் கைகளால்
தீண்டிக் களித்த சிறுவனை
நான் முத்தமிடுகையில்
அவனது உதடுகளில் குருதியின் வீச்சமடித்தது.
போதும் நண்பர்களே
மணல் ஈறுகளில்
உறைந்து போயின் மிக நீண்ட துயரத்தின்
தடயங்கள்.
நாங்கள் எதைப் பேசுவது?
கனவுக்கும் வாழ்தலுக்குமிடையில்
இளமையின் சிறகுளில் ஒளிரும்
ஓராயிரம் வர்ணங்களின் அழகையா?
தவிர
சூரியன் வடிந்திறங்காத கடல்களின் மேலே
துள்ளியெழும் ஒளிக் கற்றைகளையா?
முழுமையும்
எரிந்தடங்கிய வெளியில்
முளைக்காத ஈச்சம் மரங்களைப் பற்றியா?
அல்லது
ஒரு சொட்டும் உப்பின் சுவைபடராத
துளி நீருக்காக அலைந்ததையா?
என் பிரிய நண்பர்களே
காலத்தின்
அதியுன்னதமான விஷத்துளியை
நாம் பருகிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த விஷத்தின் கனத்தோடு
நான் இனி விலகிச் செல்வதுதான் நல்லது.
இறுமாப்பின்
கடைசிச் சொல்லிலும்
குருதிதான் மீந்திருந்தது
போதையின் கட்டுக்கடங்காத் தினவோடு.
00
தீராப் பெருங்கடல்
............................................
யௌவன விருட்சம்
இலைகளை உதிர்க்கும் காலத்தில்
கடலை அழைத்துக் கொண்டு நீ வருகிறாய்.
யுத்த சந்நதம் படரும் விழிகளில்
தாண்டவமாடுகிறது
இழை பிரியும் மின்னலின் ரேகைகள்.
துளியும் அமிர்தமற்ற ஒரு கிண்ணத்தை
வெறுமையால் நிறைக்கிறேன்.
நீ யௌவன விருட்சத்தின் இலைகளைச் சுருட்டி
குழலுாதுகிறாய்.
கசியும் இசையில் ததும்பும்
போதையின் நெடியில் உலர்கின்றன
ஈரித்த இரவுகள்.
இன்னும்
எதன் மீது
தாகம் சுனையைத் திறக்கிறது.
மஞ்சள் வெய்யிலில்
பூத்தபடியிருக்கும் பகலின் பிரகாசம்
ஏன் சுடர் சுருங்கி அந்திமமாய் அவிகிறது?
தினவடங்கிய முதுமையில் மலர்வது
காமத்தின் முட்களோ
காதலின் மலர்களோ இல்லை.
இரண்டுக்ககுமிடையில்
தேகத்தை கடந்து செல்லும் ஏதோவொன்று
அது
முத்தங்களாலோ
புணர்ச்சியினாலோ தீர்வதில்லை.
தீராப் பெருங்கடல்.
00
ஊழி
..............................................
எனது அன்புச் சகோதரி
ஒரு பிரளயத்தைப் கடந்து வந்தவர்களிடம்
எதைப்பேச
கருணையின் மகத்துவத்தையா?
அல்லது
கைவிடப்பட்ட ஒரு குடிசையாய்
காலம் எஞ்சிக் கிடந்ததையா?
எச்சிலிலிருந்துதான் சிலந்தி வலை பின்னுகின்றது
தோல்வியின் ஊழிப்பிளவில்
நாங்கள் மனிதர்களைத்தான் இழந்தோம்
அதே குருதியும் தசையும் போர்த்திய
தேகமுடைய மனிதர்களை.
பிரார்த்தனைகள் யாவும்
கடவுளர்களைப் பழித்துரைப்பதாயின
கேடயங்கள் யாவும்
வாள்களாயின.
எனது அன்புச் சகோதரி
துக்கிக்கவும் முடியாக் கணத்தில்
தாகித்த நாவுகளை
குருதியிலா நனைக்க முடியும்?
கடைசிவரை
ஒரு சாமகானப் படகுக்காகக் காத்திருக்கையில்
கடல் ஏன் பின்னேகிற்று?
00
கடவுளின் நாள்
.....................................................................
மின் விளக்குகளால் ஒளிரும் நாளை
கடவுளின் நாளாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.
இருள் மண்டிய பொழுதுகளில்
கடவுளை அதிகாரத்தின் குறியீடாக
மூலைகளெங்கும் நாட்டியவர்கள்
இன்றைய நாளை
அதியுன்னதமென சுவர்களில் எழுதிச் செல்கிறார்கள்.
நாவுலர்ந்தவர்களின் குரல்வளைகளை
அறுத்தெறிந்தபடி
இதனை கருணையின் நாளென்கிறார்கள்.
கடவுளே சொல்லும்
இந்த இரவில் உம்மால் பாதிவிழி மூடமுடிகிறதா?
சாவின் ஓலம் மிதக்கும் வெளியில்
கருணையின் குரலில் பாட உம்மிடம் ஏதிருக்கிறது?
நாங்கள் வைத்திருக்கிறோம்
இருளில் கரைந்துபோன ஆயிரமாயிரம் மனிதர்களின்
ஓலங்களை.
மணற்தரவைகளில் புதையுண்டுபோனவர்களின்
அழுகைகளை.
நீர் நிஷ்டையில் விழி தாழ்த்தும் இடமெங்கும்
அந்தரிக்கின்றன எண்ணற்ற ஆத்மாக்கள்.
கடவுளே
சாந்தம் புதைக்கப்பட்ட நிலத்தில்
புறமெல்லாம் கேட்கும்
தெய்வ கீதங்களைத் தின்று பசியாற முடியாத சிறுவன்
மழைக்குடில்களின் கீழ் படுத்துறங்குகிறான்.
கடவுளே
இந்த நாளை உமக்கானதாக உணருகிறீரா?
29.05.2010
00

சித்தாந்தன் கவிதைகள்



எப்போதுமே சலிப்பூட்டாத பறவையாக
இந்த நிழல்கள் இருந்ததில்லை.
பொய்மையின் அத்தனை அசைவுகளையும்
திரும்பத்திரும்ப நிகழ்த்திக் காட்டியபடி
தொடர்கின்றன.
திருப்பங்களில் பார்வைக்குத் தவறிச்செல்லும்
மனிதர்களைப் புறமொதுக்கிவிட்டு
நிழல்களின் புதர்க்காட்டில்
வீழ்ந்துகிடக்கிறது என் பால்யம்.
சூனியத்திலிருந்து நான் சிறகுகளை அவிழ்க்கிறேன்.
பறவைகளை பழி தீர்த்திடும்
வெறியுடன் கிளர்கின்றன நூறாயிரம்
நிழல்ச் சிறகுகள்.
பார்வைக்கு அகப்படாத
பெரு முற்றத்தில் காத்திருக்கிறது
முட்செடியென ஆகிவிட்ட அத்தனை
வனப்பொளிர்ந்த பொழுதுகளும்.
நானே மீளவும் மீளவும்
நிழல்களுக்கு என்னைப் பலியிடுகிறேன்.
செந்நிறம் படிந்த பலிபீடத்தில்
குறியுரைப்போனின்
வார்த்தை ஜாலங்களை
வாழ்க்கையென உரைக்கம் காலத்தில்
நானோ
பாதைகள் புரியாத பரதேசியாக நிற்கிறேன்.
இந்த நிழல்கள்
மேலும் மேலும் சலிப்பூட்டுகின்றன.
00
இந்த நகரத்தில் மீன்கள் இல்லை
ஒளியிறகுகளிலான அந்தியில்
செங்கடல் வரையும் வானத்திடம்
நான் மீன்களைக் கேட்டேன்
அது நட்சத்திரங்களை
கொட்டியிறைத்துவிட்டு கருங்கடலாயிற்று.
பின்னொருபோது
என் நகரத்தை அவசரமாக மடித்தெடுத்துக்கொண்டு
புறப்பட்டேன்.
காடுகளாலான பாதைகளில்
குறுக்கும் நெடுக்குமாக
மீன்களின் வடிவத்தில்
நூறாயிரம் சருகுகள்
காற்றின் தூண்டில் நுனியில்
துடித்தபடியிருந்தன.
அப்போதும்
என் நகரம் நீர்ப்பெருக்கற்றிருந்தது.
நான் அதை
பின்னும் சிறுசிறு மடிப்புக்களாக்கினேன்.
காற்றும் நுழையா தெருக்களாக
மடிப்பு ரேகைகள் நீண்டபடியிருந்தன.
பெருந்தருணத்தின்
சிற்றிழையென உருக்கொண்ட பொழுதுகளின்
கடைசி கணம்
வான் சிறுத்து நிலம் பருத்த
அந்தக் கணத்தில்
என் நகரத்தில் பெருமழை.
நான் வானத்திடம்
யாதொன்றும் யாசிக்காத போதும்
என் நகரம் ஈரத்தில் மிதந்தது.
சிற்றோடைகளில் நனைந்து நெளிந்தன
என் பாதங்கள்.
இரண்டிலும் மீன்களின் சாயல்கள்.
என் நகரத்தின்
முதல் மீன் நான்.
00
முற்றுப்பெறாத வானத்துக்குத்
தொலைவில்த்தான் நானிருக்கிறேன்.
சமரசங்கள் தீண்டாத என் ஒற்றை நட்சத்திரத்தை
ஒரு பறவையாய்க் காண நேர்கையில்
நான் பறவையாய் இருந்ததை மறந்துபோய்விடுகிறேன்.
இன்னும் நான் தொலைவில்த்தான்.
00
மீண்டும் ஒரு மழைக்காலத்தை
நோக்கிச் செல்கின்றேன்.
//
சுடரழியும் சூரியனின் பொழுதில்
அவிந்தடங்கிய மெழுகுதிரியென இருந்தேன்.
அந்திகளின் மீது
தினம் அழுகிச் சிதையும்
செம்பழுப்புநிற முகில்களை
கடலின் கவிச்சை கவியும் காற்று
என் நாசியின் மீது கொட்டிச் சிந்துகையில்
சாமகானங்களின் பேதத்தை
முதல்முறை உணர்ந்தேன்.
பறவைகள் தீ பிடித்து வானெங்கும் அலைகின்றன.
எனது கானம்
மந்திரச் சொற்களாலானது.
அது மழையைப் போலவே ஈரம் கசிவது.
நான் யாருக்காக
இசைத்தேன் அதை.
எஞ்சிய காலத்தின் சிறகுகளை
அவை தரும் வலியை
இசைக்க முடியாதிருந்த காலத்தில்
சுடரழியாச் சூரியனே வானத்தை
முழுமையும் நிறைத்திருந்த காலத்தில்
வருடா மலரின் நறுமணத்துடன்
எனக்குள் புத்திருந்தன பாடல்கள்.
யாரையும் தீண்டாத வாா்த்தைகளின்
நீள் அடுக்குகளில்
மழை பொழிந்தது.
மழையின் கடைசி இறகும்
கனக்கும் படியாக
மவுனத்தில் விரிந்துகொண்டிருந்தன மலர்கள்.
யாரினதும் மனதையும் வருடாத மலர்கள்.
//
மீண்டும் ஒரு மழைக்காலத்தை
நோக்கிச் செல்கின்றேன்.
00
கரிசனை நிரம்பிய முகத்துடன்
என் முற்றத்துக்குப் பறவைகள் வந்திருக்கின்றன.
நண்பர்களே!
எப்படியெல்லாம் 
ஒரு அற்பமான பண்டமாக புன்னகைகள்
மாறிவிட்டிருக்கின்றன பாருங்கள்.
முன்பு பல முறையும்
இந்தப் புன்னகைகளை நான் கண்டேன்
இதே வார்த்தைகளைக் கேட்டேன்
சலித்துப் போயிற்று என் முற்றம்.
கடவுளே!
வாயற்ற பறவைகளை என் முற்றத்துக்கு அனுப்பு
அல்லது காதற்ற பறவைகளை.
என் துயரங்களை இவைகள் மீளவும் மீளவும்
ஒப்புவிக்கின்றன.
என் சகோதரர்களின் சாவுக் காலத்தின் பாடலை
மீளவும் இசைக்கின்றன.
நான் எதையும் மறக்கவில்லை
இவை ஒப்புவிப்பதுதான்
என்னை எரிச்சலடையச் செய்கின்றன.
என் முற்றத்துக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது இவைகளின் வானம்.
இது பருவ காலம்
சிறகுகளின் ஈரத்தை உலர்த்த
தகிக்கும் என் முற்றத்துக்கு இவை வந்திருக்கின்றன.
நான் அறிவேன் கடவுளே
கைவிடப்பட்ட என் முற்றத்தைக்
கடந்து செல்வதைப் போலவே
இவை என் கனவுகளையும் கடந்து சென்றுவிடும்
இன்னும் சில நாளில்.
ஆனாலும் பருவகாலங்கள்
திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருக்கும்
இதே புன்னகைகளோடும்
இதே வாா்த்தைகளோடும்
இன்னும் எண்ணற்ற இவை போன்ற பறவைகளோடும்.
00
தோற்றடங்கிய காலத்தின் நினைவுகளின் மீது
அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரானே! 
உன் விக்கிரகங்களின் மீது
அப்பிக் கடக்கும் பாசியினடியில்
இன்னும் உன் புன்னகை மீதமிருப்பதாக
நான் நம்புகின்றேன்.
வர்ணங்களால் ஒளியுட்டப்பட்ட அறைகளில்
போதையின் நாற்றத்துடன்
உனது புனிதம் பற்றிய கதைகளை
இன்னும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரானே!
நீர் அவசரப்பட்டு செத்துத்தொலைந்துவிட்டீர்
நீர் இல்லாக் காலத்தில்
எல்லோருமே புதிதாக வால் முளைக்க
தாவித்தாவி உம்புகழ் பாடுகின்றனர்.
பாத்தீரா கடைசியில்
காலம் அழகியதாக்கப்பட்ட
சிறுநீர்த்தொடடிகளில் மிதப்பதை.
நாய்களும் ஓலமிட அஞ்சிய நாட்களில்
மகிமை மாறாத உமது மந்திரங்களினாலான
ஒரு கீதத்தை மலம் நாறும் வெளியென
திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தனர்.
இன்று அவர்களின் வாய்களில்
அக்கீதங்கள் மலர்களாய் கிளைக்கின்றன.
போகட்டும் பிரானே!
உமது நாமத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புதிய பெயர்களுடன் உமது விம்பத்தின்
பிரதி விம்பங்களாக உலாவவருகின்றார்கள்.
பிரானே!
அவர்களை நீர் மன்னிப்பீராக
நீர் விட்டுச்சென்ற பாதையில்
அவர்கள் இன்னும் வழிப்போக்கர்களாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்.
நிச்சயமா
காலம் உம்மை ஒருபோதும் சாகவிடாது.
00
மலைகள் எழுந்து பறக்கும் ஒரு மாலையில்
கடைசியாக அவனைச் சந்திக்கின்றேன்.
மழைத்ததுளியைப் போலவே 
பார்வைகளால் ஈரம் சொட்டுகின்றான்.
நாவெழாத வார்த்தைகளால்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறான்.
கணங்கள்
செம்பழுப்பேறி உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
வானத்துக்கு இடப்படாத கதவு குறித்து
அவன் பலமுறை சொல்லக் கேட்டிருக்கின்றேன்
இக்கணம்
அவனே வானத்தின் மிகப்பெரிய கதவுபோலிருக்கிறான்.
மேகங்களைத் தருவிக்கின்றன
அவனது கண்ணீர்.
காரணம் காணும் ஆவல்
மேலெழுந்து பறக்கவில்லை என்னில்.
மவுனத்தின் சிறகுகளை
மேற்சட்டையாக அணிந்திருக்கிறேன்.
என் கண்களுக்கு ஒளியில்லை
சாபத்தின் கிடங்கில் வெந்துகொண்டிருக்கிறேன்.
கடைசிவரை
நான் பேசக் காத்திருந்தவற்றை
அவன் மவுனத்தால் பேசிக்களைக்கின்றான்.
மவுனத்தின் மொழியின் மீது
நத்தையாக ஊர்ந்து செல்லும் படகில்
நானும் அவனும் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்
எதிரெதிர்த் திசைகளில்த்தான்.
என்றாலும்
வானத்துக்குக் கதவுகளானவனின்
புட்டாகவும் சாவியாகவும்
நான் ஒருபோதுமிருக்க விரும்பவில்லை.
வானத்தை விடவும்
அழகாக இருக்கின்றது அவனது மவுனம்.
00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்