கொலைக்கும் தற்கொலைக்குமிடையில் உதிரும் சொற்கள்

சித்தாந்தன்
இன்றென் குற்றவுணர்ச்சியை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்அது நோயினால் துயருறும் குழந்தையாய்
உன் கைகளிற் துடித்தது
நீ அதிர்ந்துதான் போனாய்
அன்பின் சுனையைப் பருகாத
ஒரு மிருகம் நான் என்றாய்
என் புலன்களை மூடி மலைகள்
வளர்ந்ததாய்ச் சொன்னாய்
இதோ பார் என் கைகளை
பழியுணர்ச்சியின் தடையங்களில்லை
கொலை வெறியின் மிரட்டும் பார்வைகளில்லை
நான் கனவுகளின் எல்லைகளுக்கப்பால்
வீழ்ந்துகிடக்கவே விரும்புகின்றேன்
ஆத்மாநாம்
உன் சுய கொலைக் குறிப்பை
காற்றிடம் நீ கையளித்திருக்கலாம்
மரணம்
மாயத் தொட்டியில் மீனாய் அலைகின்றது
கொலைக்கும் தற்கொலைக்குமிடையில்
எழுதப்படாத எண்ணற்ற குறிப்புக்கள்
சிதறிக்கிடக்கின்றன
மரணத்தை
நுளம்பின் கூர்முனையிற் கூட உணர முடிகிறது
இன்றென் குற்றவுணர்ச்சியை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்
சாவு
என் அறை முழுவதும் தேங்கிக்கிடக்கிறது
தற்கொலை செய்யத்தான் யாருமில்லை
நான் கூட என்னைக் கொலைசெய்ய அஞ்சுகின்றேன்
அவசரமாக அறையிலிருந்து வெளியேறிய போது
எடுத்து வந்தேன் உன் கவிதைகளின் தொகுப்பை
உன்னைக் கொலை செய்யும் வரிகள் எதிலும்
உன்னைக் கவிஞன் என அச்சிடப்பட்டிருக்கவிலை
கவிதைக்கும் தற்கொலைக்குமிடையில்
ஏதோவொன்று இருந்துகொண்டுதானிருக்கிறது
உன் தற்கொலையையும்
என் தப்பித்தலையும் நியாயப்படுத்த