சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

அவசரம்

29 செப்டம்பர், 2011



அவசரக்காரர்களின் குறும்படம்

சித்தாந்தன்

ஈழத்துத் திரைப்படம் என்னும் தனியான அடையாளமிடல் இன்னும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது. ஈழத்துப்படங்கள் என்று எடுக்கப்படுகின்ற படங்கள் பலவும் தென்னிந்திய தமிழ் சினமாவின் தாக்கத்துடனேயே வெளிவருகின்றன. அந்தளவிற்கு தென்னிந்தியப்படங்கள் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. என்ற போதும் அவ்வப்போது ஈழத்து தமிழ் சினிமாவுக்கான எத்தன முயற்சிகள் பலவும் நடந்து வந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் தமது நிதர்சனம் அமைப்பின் மூலமாக நல்ல பல நீளப்படங்களையும் குறும்படங்களையும் உருவாக்கியிருந்தார்கள். எனினும் அவற்றில் பலவும் அவர்களது தேவைகளின் பொருட்டாக எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தைப் பொறுத்த வரையில் வெகுசன ஊடகங்கள் பலவும் இந்திய தமிழ் சினமாவின் வணிக நிலைப்பட்ட அம்சங்களை உள்வாங்குவதிலேயே தீவிரம் காட்டுகின்றன. வானொலிகளாயினும் சரி தொலைக்காட்சிகளாயினும் சரி இந்த வணிக மாயைக்குள் விழுந்தே கிடக்கின்றன.. செய்திகள் வாசிப்பதிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்புகள் வரை இந்த நிலைதான் தொடருகின்றது. தமக்கான தனித்தன்மையான அடையாளத்தை நிறுவியவர்கள் என்று சிலரைத்தான் குறிப்பிட முடியும். ஈழத்து தமிழ்ப்பாடல்கள் என்று தனியார் வானொலிகளில் போட்டிக்கு ஒலிபரப்பப்படும் பாடல்கள் எந்தளவிற்கு ஈழத்துக்கான அடையாளத்தைக் கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குரியதே. இந்த தனியார் வானொலிகள் பாடகர்களை இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக ஈழத்துக்கான பாடல், இசைமரபுகளைப் புறந்தள்ளியவாறிருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். தனித்தன்மையோடு வெளிவரும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவற்றை பழைய மரபுப்பாடல்கள் என புறமொதுக்கும் நிலையும் காணப்படுகின்றது.


இத்தகைய பின்னணியில் தற்போதைய சூழ்நிலையில் நல்ல முயற்சிகள் சில முனைப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் 3யு அழஎநை என்ற அமைப்பு குறும்படப் போட்டி ஒன்றினை நடாத்தி பரிசில்களை வழங்கியிருந்தது. இதுவொரு பாராட்டத்தக்க முயற்சியாகும். அண்மைக்காலமாக இளைஞர்களிடம் குறும்படங்கள் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டுவருகின்றது. சிலர் நல்ல படங்கள் சிலதைத் தயாரித்திருக்கின்றனர்.
இன்று (29.09.2011) ‘அவசரம்’ என்ற குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக்குறும்;பட அறிமுக விழா மாலை 4.30 மணிக்கு யாழ் கொசி உணவக மண்டபத்தில் நடை பெற்றது. இலக்கிய ஆர்வலர்களும் சினமா ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் சிலரின் முயற்சியினாலும் ஆர்வத்தினாலும் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். பல்வகையான குறைபாடுகளை இக் குறும்படம் கொண்டிருந்தாலும் அவர்களின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது. காதலை முதன்மையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டாலும் இக்குறும்படம் சொல்லும் செய்தி கவனிக்கத்தக்கது.

வழமையான தமிழ்சினமாவினைப் போலவே, ஒரு இளைஞன் பெண்ணொருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவள்தான் தன் வாழ்வு என அலைகின்றான். தன் காதலை வெளிப்படுத்துகின்றான். அவள் மௌனமாகப் போய்விடுகின்றாள். பின்னர் அவளைக் கோயில் ஒன்றில் சந்தித்து தன் காதலை ஏற்குமாறு மீண்டும் கேட்கின்றான். அவள் அவனின் காதலை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக பூ வினைக் கொடுக்கின்றாள். பின்னர் காதல் தொடர்கிறது. இடையில் ஒரு பாடலும் வருகின்றது. நல்ல வேளை தென்னிந்திய தமிழ் சினமாவைப் போல காதலனும் காதலியும் ஆட ஒரு கூட்டமும் சேர்ந்து ஆடவில்லை. மென்மையான பாடலாக அது இருக்கின்றது. பின்னர் ஒரு வில்லன் வருகின்றான். கதாநாயகனை எச்சரிப்பதோடு அவன் போய்விடுகின்றான. பிறகு காதலிக்கு லண்டன் மாப்பிள்ளையினை வீட்டார் பார்க்கின்றனர். இதனால் கதாநாயகியை நாயகன் வீட்டிலிருந்து கூட்டிவந்துவிடுகின்றான். நண்பர்கள் சேர்ந்து எங்கே தங்க வைப்பது என்று ஆராய்கின்றனர். கடைசியில் ஒரு நண்பன் தன் பாட்டியின் வீட்டினைப் பரிந்துரை செய்கின்றான். இதோடு ஒரு கட்டம் முடிந்து விடுகின்றது. அடுத்த கட்டத்தில் காதலி வீட்டில் குந்தியிருந்து அழுதபடியிருக்கின்றாள். கதாநாயகன் அவளை ஏசுகின்றான் அவளைத்திருமணம் செய்ததால் தன்னால் நண்பர்களுடன் சுத்த முடியவில்லை, தண்ணியடிக்க முடியவில்லை என்றும் விருப்பமில்லாவிட்டால் அவளை வீட்டைவிட்டு போகுமாறு கூறுகின்றான். புpன்னணியில் போத்தல்கள் உடைந்து நொருங்கும் சத்தம் கேட்கின்றது. படம் முடிகின்றது. இதுதான் அவசரம் குறும்படத்தின் கதை.

இக்குறும்படத்தை கஜதீபன் கதை திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கின்றார். அபிராமன் இசையமைத்திருக்கின்றார். சித்தார்த் கதாநாயகனாகவும் யாழினி கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் அச்சுதன், சிவா, சௌஜி, கெனெத், செந்தியன் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.
திரைக்கதையை பொறுத்தவரையில் பழகிப்போன கதைதான். ஏன்றாலும் முடிவில் சொல்லப்படும் செய்தி முகியமான ஒன்றாக இருக்கின்றது. காதலுக்கு அப்பால் அது குடும்ப வாழ்க்கை என்ற நிலைக்குவருகின்ற போது- அதிலும் இளம் வயதினர் அவசரத்தில் எடுக்கும் முடிவு எத்தகைய விளைவினை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் சொல்லியிருக்கின்றார். முதற்படம் என்ற வகையில் பல குறைபாடுகளும் இடர்பாடுகளும் இருக்கின்ற போதும். இளைஞர்கள் இவ்வாறும் சிந்திக்கிறார்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியதாகப்படுகின்றது.

இசை அபிராமன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் சில தமிழ் சினமாப் படங்களின் பின்னணி இசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் பாடலின் இசையும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவொரு குறைபாடாகவேபடுகின்றது. உரையாடல் மொழியும் பின்னணியில் கதைசொல்லப்படும் குரலும் சேர்க்கைத்தனமாக அமைந்திருக்கின்றன. ஒரு திரைப்படம் திரைமொழியையும் காட்சியமைவுகளையும் கொண்டமையும் போதே இயல்பானதாக அமையும் நிறைந்த உரையாடல்கள் சலிப்புத் தன்மையினையே ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் பரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்டசம் உரையாடல்களிலாவது கவனமெடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

காட்சிகள் சில தத்ருவமாகப் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் நில அமைவுகளும் தெருக்களும் வயல்களும் சில காட்சிகளில் கஜதீபன் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றார்.

எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். அடுத்தடுத்து வரும் காட்சிகளுக்கிடையிலான இடைவெளி சரியான முறையில் பொருத்தப்படவில்லை. சில இடங்களில் துருத்திக் கொண்டு காட்சிகள் நிற்கின்றன.

அவசரம் குழுவினரே தங்களின் இத்தகைய குறைபாடுகளை ஏற்றுக் கொள்கின்றனர். இதனைத் தங்களின் கன்னி முயற்சி எனத் தெரிவிக்கின்றனர். தமது அடுத்தடுத்த முயற்சிகளில் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக அதன் இயக்குநர் கஜதீபன் அறிமுக நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.

இக்குழுவினரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் போலத் தோன்றுகின்றது.

சிதறுண்ட காலக் கடிகாரம்

07 செப்டம்பர், 2011

சிதறுண்ட காலக்கடிகாரம்
-தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு-

அமரர் தங்கம்மா சரவணை நினைவு வெளியீடு,
புலோலி தென்மேற்கு, புலோலி.
முதற்பதிப்பு – 23.08.2011
தொகுப்பாளர் – சித்தாந்தன்
சி.ரமேஷ்
மருதம் கேதீஸ்
பதிப்புரிமை – தி.ஜீவரட்ணம்
தொடர்புக்கு – sroobanjeeva@ymail.com
siththanthan@gmail.com

தொகுப்பில் பங்களித்துள்ள கவிஞர்கள் -ந.சத்தியபாலன், பெண்ணியா, எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா விஷ்ணு, சித்தாந்தன், பஹீமா ஜஹான், ஒட்டமாவடி அறபாத், வினோதினி,நவாஸ் சௌபி, மைதிலி,அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ.ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஷ், யாத்திரிகன், கோகுலராகவன், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, தபின்,ஆழியாள், ரிஷான் ஷெரிப்.

சில வார்த்தைகள்

வாழ்வும் வாழ்பனுபவங்களுமே இலக்கியப்படைப்புக்களின் மையமாக எப்போதும் இருந்துவருகின்றன. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையின் முக்கியமான காலங்களைக் கடந்து கையறுநிலையில் நிற்கின்ற இந்தக் காலகட்டத்தில், கடந்த காலங்களின் மீதான மீள் உரையாடல்களும் மீள் வாசிப்பும் தேவைப்படுகின்றன. தமிழ் பேசும் சமூகங்களின் துயர்படிந்த வாழ்கையை அச் சமூகங்களிலிருந்து வந்த படைப்பாளிகள் பலரும் காத்திரமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பல படைப்பாளிகளின் வெளிப்பாட்டு வடிவமாக கவிதையே இருக்கின்றது. கவிதைகள் பதிவு செய்த அளவுக்கு போர்க்கால வாழ்வை வேறு எந்த இலக்கியப்பிரதிகளும் வெளிடப்படுத்தவில்லை என்பது வெளிப்படை.

தமிழ் கவிதைகளின் தீவிரம் எண்பதுகளில் கூர்மையடைந்தது எனலாம். இனப்பிரச்சினையின் தாக்கம் இலக்கியப்படைப்புக்களிலும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே பின்வந்த காலகட்டத்துக் கவிதைகள் இருந்த போதிலும் கவிதையின் நவீன கூறுகளை அவை பெரிதும் உள்வாங்கியிருக்கின்றன எனலாம். புலப் பெயர்வுகள், இடப்பெயர்வுகள் என யுத்தத்தின் பல்வேறு அவலங்களும் இந்தத் தொடர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது.

இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே இக்கவிதைத் தொகுப்பு வெளிவருகின்றது. இதில் பங்களித்துள்ள கவிஞர்கள் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னரான காலப் பகுதியிலழருந்து எழுதி வருபவர்களாவர்.இத் தொகுதியிலுள்ள கவிதைகளில் அநேகமானவை யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்தியிருக்கின்ற வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனங்களுக்குள் படர்ந்திருக்கும் மென்னுணர்வுகளின் தடங்களையும், கனவுகள், ஏக்கங்களையும் பேசுகின்றன. யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கின்றது. மக்களை அலைவுறச் செய்திருக்கின்றது.கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்புக்கான எத்தன முயற்சியாகவே இத் தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் என்பதே எமது விருப்பாகும். வலிகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நிலையான சமாதான வாழ்வுக்கும் இத்தகைய மீள் வாசிப்பு உறுதுணையாக அமையுமென நம்புகின்றோம்.

இது ஒரு முழுமையான தொகுப்பல்ல என்பது வாசிக்கும் அனைவராலும் இனங்காணத்தக்கதே. பலருடைய கவிதைகள் தவறவிடப்பட்டிருக்கின்றன. தவறவிடப்பட்டவை தரமற்ற கவிதைகள் என்ற கணிப்பீட்டை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இத் தொகுப்பு அமரர் தங்கம்மா சரவணையின் நினைவாகவே அவரது குடும்பத்தினரால் வெளியிடப்படுகின்றது. கால அவகாசம் போதாமையும் வரையறுக்கப்பட்ட பக்கத்துக்குள்ளேயே செய்ய வேண்டி இருந்தமையுமே பல நல்ல கவிதைகள் தவிர்க்கப்படக் காரணமாக அமைந்து விட்டது என்பதனை வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். ஆயினும் பறிதொரு சந்தர்ப்பம் வாய்க்கப் பெறும்போது இன்னும் பல கவிஞர்களின் காத்திரமான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இதனைக் கொண்டுவர முடியும். ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதையின் மொழிதலின் மாற்றங்களையும் வளர்ச்சி நிலையையும் இத் தொகுப்பு ஓரளவுக்கேனும் எடுத்துரைக்கும் என நம்புகின்றோம்.

இறந்தவர்களின் நினைவுகளுக்காக கல்வெட்டுக்கள் வெளியிடப்படும் எமது சமூகத்தில் அமரர் தங்கம்மா சரவணையின் குடும்பத்தினர் ஒரு கவிதைத் தொகுப்பை அவர் நினைவாக வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டிற்குரியதே. அமரரின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக நண்பர் தி.ஜீவரட்ணம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மற்றும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கவிதைகளுக்காக அக்கவிஞர்களுக்கும். இத் தொகுப்பின் அட்டைப்படம் இணைய தளத்திலிருந்து பெறப்பட்டதாகும். அத்தளத்திற்கும், இதனை அச்சிட்ட அன்ரா அச்சகத்தினருக்கும் எமது நன்றிகள்.

இத்தொகுப்புப் பற்றிய அனைவரதும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

-தொகுப்பாளர்கள்

20.08.2011


சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்