சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

துயரைச் சுமக்கும் மரம்

09 நவம்பர், 2011

சித்தாந்தன்

நூறாவது இரவையும்
சுமந்திருக்கிறது இந்த மரம்

அதிதிகளின் தோரணையுடன்
மலைகளில் வழியும் ஒளித்திரவத்தைப் பருகியபடி
பொழுதுகள் போதை கொள்கின்றன

நானோ
குருவிகளின் அலகுகளில் தொங்கித் திரிகிறேன்
வீனான மனப்பிராந்தியுடன்
சாமங்களுடன் தர்க்கம் புரிந்தபடி

மிதக்கும் காற்றின் சலனத்தை
கலகங்களாக வரைகிறேன் சுவர்களில்

சாவகாசமாக அமரும் பொழுதுகளில்
இரவைச் சுருட்டியெடுத்து ஈனத்துடன்
பகலிடம் கையளிக்கின்றேன்

நட்சத்திரங்களின் ஆயுள் ரேகைகளை
நெடுந் தொலைவுகளின் பாதைகளாக்கி
இரவுக்கும் பகலுக்குமிடையில் தாவியபடியிருக்கிறேன்

வானத்திடம் வருவதற்கிடையில்
என் வம்சச் சூத்திரம் நிலைமாறுகிறது
காற்றும் கரையழித்து உட்திரும்பும் கடலும்
மாயத்தனங்களுடன் ஊமையாகின்றன

சாயம் வெளிறிய இரவு
பகலின் சூனியச் சாலையில் ஒளிக்கிறது

இரவினை அருந்திய பகலிடமிருந்து
தப்பிக்கும் நுட்பங்களை அறியாது
சதுரங்கத்தில் தோற்ற அரசானாக
பாதாள விளிம்புகளில் தள்ளாடுகின்றேன்

எனக்கான நூற்றியோராவது இரவையும்
இந்த மரமே சுமக்கின்றது

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்

01 நவம்பர், 2011

கருணாகரன்


காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெருங் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை.

(
செத்தவனின் பிம்பமான நான்)

தெரு மரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.

(
மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித்துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி

(
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்)

மகா ஜனங்கள் அழுதார்கள்
அரசனின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்

(
மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

சித்தாந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான துரத்தும் நிழல்களின் யுகம்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றில் உள்ள அடிகள் இவை. முப்பது கவிதைகளையுடைய இந்த நூலில் பெரும்பாலானவையும் யுத்தக் கவிதைகள் அல்லது யுத்தம் பற்றிய கவிதைகள். அல்லது சித்தாந்தனின் வாழ்க்கைக் கவிதைகளாகவேயுள்ளன. இந்தக் கவிதைகளிலுள்ள பெரும்பாலான அடிகளிலும் யுத்தத்தின் உக்கிரம், சனங்களின் அவலம், இரத்தத்தின் நெடில், வாழ்க்கையின் இழப்பு, அச்சத்தின் பயங்கரம், காலத்தின் துயர் ஆகியனவே இருக்கின்றன. ஆகவே இது ஒரு யுத்தக் கவிதைகளின் தொகுதியாகவே நமது மனதில் பதிவாகின்றது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழக்கவிதைகள் விடுதலை வேட்கையையும், அந்த வேட்கையுடனான போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் இப்போது எழுதப்படும் கவிதைகள் யுத்தத்தின் கொடுமையை, யுத்தத்தின்hல் பாதிகக்கப்பட்ட சனங்களின் அவலத்தை, யுத்தப் பிரபுக்களின் பயங்கர யுகத்தைப் பேசுபவனவாக உள்ளன. இது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம். குhலம் எப்படி உருத்திரிந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமாக இந்தக் கால வெளியின்; படைப்புகளே இருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால ஈழ அரசியற் செயற்பாடுகளின் தீவிரம் தவிர்க்க முடியாமல், எல்லாத் தளங்களிலும் எல்லா அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசியல் சாதாரணமானதாக இருக்கவில்லை என்பதே இதன் பொருள்.

கடந்த முப்பதாண்டு கால அரசியல் என்பது (1980-2010 வரையுமானது) யுத்த அரசியல் அல்லது ஆயுதந்தாங்கிய அரசியல், பயங்கரவாத அரசியல் அல்லது ஜனநாயக மறுப்பு அரசியலாகவே இருந்துள்ளது. ஆனால் இதைச் சனங்கள் விரும்பவும் இல்லை: எதிர்பார்க்கவும் இல்லை: ஏற்கவுமில்லை. ஆனால் இதை எதிர்க்க முடியாமல் எதிர்க்க திராணியற்ற நிலையில் அவர்கள் திணறினர். ஆப்படி அவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர்.

சித்தாந்தனின் கவிதைகள் பெரும்பாலும் இந்தப் பின் புலத்தையே, இந்த உண்மைகளையே சொல்கின்றன. குறிப்பாக அதிகாரத்திற்கெதிரான குரலாக, அதிகாரச் சூழலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமலும் அதேவேளை அது தொடர்பான எச்சரிக்கையோடடும் உள்ள நிலைமையில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இவை தவிர்க்க முடியாமல் தீவிர அரசியற் கவிதைகளாகவே இருக்கின்றன. இந்தத் தீவிரம் என்பது சீரியஸ் என்ற அர்த்தத்தையுடையது.

சித்ததாந்தனின் கவிதைகளிலுள்ள முக்கிய அம்சம் அல்லது சிறப் பென்பது அவரின் வெளிப்பாடாகும். வஸீகரமான மொழிதல், மொழியைக் கையாழ்வதிலுள்ள ஆற்றல், நுட்பமான சித்திப்புக்கள், தீவிரத் தன்மை கொள்ளும் கொந்தளிப்பு இந்த மாதிரியான வெளிப்பாட்டாற்றல் நமது சூழலில் இரண்டு கவிஞர்களிடம் இருக்கின்றன. ஒன்று சித்தாந்தனிடம் இன்னொன்று எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகரிடம் இதைத் தவிர்த்து இன்னொருவரை அடையாளங் காணுவதெனில் அது தானா விஷ்ணு எனலாம் (தானா விஷ்ணுவின் அண்மைய கவிதைகள்)

முக்கியமாக இவர்கள் அதிகாரத்திற்கு ஏதிரானவர்கள். அதிகாரமே இவர்களுக்குப் பிரச்சினை. அதுவும் சகிக்க முடியாப் பிரச்சினை. எனவே அந்தப் பிரச்சினை உருவாக்கும் சினத்திலிருந்து அந்தச் சினம் உண்டாக்கும் கொந்தளிப்பிலிருந்தே இவர்களுடைய கவிதைகள் உருவாகின்றன.அவ்வாறு உருவாகும் கவிதைகளுக்கான மொழியும்கூட அந்தச் சூழலின், அந்த நிலைமைகளின் மொழிதான்.

நெருக்கடிக் காலத்தின் மொழிக்கு எப்போதும் கடும் வீச்சும் சூடும் இருக்கும். தமிழகத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் ஆத்மாநாம், சிரியாவில் நிஸாக் கப்பானி, பலஸ்தினத்தில் மஹ்முத் தர்வீஸ், றிஷீட் ஹுசைன், சமீஹ் அல்காசிம் போன்ற பலர் இன்னும் ஆபிரிக்காவில் கேபிரியேல் ஒகாரா, டேவிட் டியோப், கிறிஸ்தோபர் ஒகிக்போ, செங்கோர், க்வெஸிப்றூ, டெனிஸ்ப் நூற்றஸ் என்று பல அடையாளங்களுண்டு.

சித்தாந்தன் தன்னுடைய காலத்திலன் பயங்கரங்களையும் அவலங்களையும் அச்சுறுத்தல்களையும் சொல்கிறார். ஓன்று இவை குறித்த வெளிப்பாடு, அடுத்தது இவற்றுக்கான எதிர்வினை. ஆகவே பயங்கர நிலை, துயரம், அச்சுறுத்தல்கள் பற்றிய பதிவாகவும் இவற்றுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவும் இந்தக் கவிதைகள் இருக்கின்றன.

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக் கொண்டு
இராணுவ வாகனங்கள் செல்கின்றன

(
தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்)

இது ஒரு சூழ்நிலையின் பதிவு. உண்மை யதார்த்தம் இந்தக் கவிதை இந்தச் சூழலை

குழந்தைகளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத் தொடங்கிவிட்டன

என மேலும் விவரித்துச் செல்லும் இந்தக் கவிதை சிறுவர்களின் உலகம் பறிக்கப்பட்டதை - சிதைக்கப்பட்டதை வெளிப்படுத்துகின்றது. எளிமையாக

சுண்டல்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஐஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத் திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை
……………………………….
இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய்ப் படிந்திருக்கின்றன

என்கிறது இங்கே பெளிப்படையாக ஒரு முரண் தென்படுகின்றது. சிறுவர்கள் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கம் தெருவில் ஏனையவர்களினதும ஏனையவற்றினதும் நடமாட்டம் இருக்கிறது. வண்டிகள் ஓடுகின்றன, சுண்டல்க்காரன்,ஐஸ்பழ வியாபாரிகள் எல்லோரும் திரிகிறார்கள். ஆனால் சிறுவர்கள் இல்லை. இது முரண் அல்ல. இதுதான் உண்மை, யதார்த்தம் என்று சொன்னோமே அது.

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்குக் காவு கொடுத்த
தாயின் ஒப்பாரி

குழந்தைகள் தெருவுக்கு வர முடியாதபோது எப்படி நிகழும் தெருவில் இராணுவ வண்டியின் கீழ் நிகழும் மரணம்? துவிர இதற்கு முதல் அடிகள் இப்படி அமைகின்றன. குழந்தைகளின் சுவடுகள் அழிந்த தெருக்களில் இராணுவத் தடங்கள் பெருகிக் கிடக்கின்றனஎன

ஆனாலும் சித்தாந்தனின் கவிதைகளின் வெளிப்பாட்டின் நவீனத்துவங்களைக் கொண்டு, நுண்ணம்சங்களையும் துலக்குகின்றன.

காலம்
ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
……………………………
ஒரு கனியை
எம்பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச் சிறகுகளைப்
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்

(
மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

இப்படிக் கவித்துவங்கள் கூடிவரும் இடங்கள் அதிகம். நம் காலத்தின் முக்கியமான கவிஞர்களில்_ கவியாளுமைகளில் சித்தாந்தன் முக்கியமானவர். அவர் இப்படி முதன்மை அடைவது அவருடைய வெளிப்பாட்டினாலும், அவர் கொண்டிருக்கும் கலக மனத்தினாலுமே. குறிப்பாக சனங்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதே சித்தாந்தனின் சிறப்பு. அதுவே அவருடைய அடையாளம். சனங்களில் ஒருவராக இருப்பதன் மூலம் இந்த அடையாளமும் இந்த அடையாளத்திற்குரிய மனநிலையும் அவரை வந்தடைகின்றன.

இல்லையென்றால்,

எல்லப் பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்
(
கடவுளரின் நகரங்களில் வாழுதல்)

என்று எப்படி எழுத முடியும்.

சித்தாந்தன் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவுமில்லை, நியாயப்படுத்தவுமில்லை. அவர் நம்பிக்கை கொள்வதற்கு எந்தச் சமிக்ஞைகளும் தெரியவுமில்லை. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையற்று இருக்கவும் முடியாது. அவருடைய நம்பிக்கைகள் சகமனிதர்களிடம் வரலாற்றிடமுமே இருக்கின்றன. இதே வேளை சனங்கள் தங்களுக்கு முன்னே எழுகின்ற விம்பங்களால் கவரப்படுவதையும் அந்தப் பிம்பங்களாலேயே மக்கள் பலியாவதையும் சுட்டி எச்சரிக்கின்றார்.

மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பப் பழகிவிட்டார்கள்
தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும் நம்பிக்கையூட்டலுக்குரிய
வார்த்தைகள்
அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே

(
மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளில் இருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்ப வேண்டாம்

(
புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்)

பொதுவாகச் சித்தாந்தனின் கவிதைகள் பொய்மைகள், புனைவுகள் குறித்த உலகத்தையிட்ட கசப்புடனும் அதையிட்ட எச்சரிக்கையுடனும் உள்ளதை உணர முடிகிறது. இதற்கு இந்தத் தொகுதியிலுள்ள முப்பது கவிதைகளில் எட்டு, ஒன்பது கவிதைகளின் தலைப்புக்கள் சாட்சி - கவிதைகளில் பெரும்பாலானவையும் ஆதாரம்.

கவிதைகளின் தலைப்புகள்...

1.
பிடாரனின் திகைப்பூட்டும கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கின்றேன்.
2.
இருளுக்குள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்.
3.
புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்.
4.
பாம்புகள் உட்புகும் கனவு.
5.
மெய்யுறங்கும் நாட்களின் கோடை.
6.
புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்
7.
நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்.
8.
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்.
9.
மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு.

இதேவேளை இத்தகைய கவிதைகளுக்கு அப்பாலான பல நல்ல கவிதைகளும் இந்தத் தொகுதியிலுள்ளன.

பசியோடிருப்பவனின் அழைப்பு, தெய்வங்கள் எறிந்த கத்திகள். கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, நிகழ் கணத்தின் வலி, உரையாடலில் தவறிய சொற்கள், பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு போன்ற கவிதைகள் இந்த வகையில் சிறப்படைந்துள்ளன. குறிப்பாக உறவு, தன்னிலை உணர்தல் ஆகியவற்றில். இதில் நிகழ்கணத்தின் வலிமனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவுபடுத்தும் தன்மையுடையது.

பொம்மையுடனான சினேகிதம்
எம்மையும் பொம்iமைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு
…………………………….
எமது அழுகையை
பொம்மைகளின் அழுகை என்றனர்
எமது இரத்தத்தை
பொம்மைகளின் இரத்தம் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்

சித்தாந்தனின் மொழியிலிருந்தும் வெளிப்பாட்டு முறையிலிருந்தும் வேறுபட்டிருக்கும் கவிதையிது. சுpத்தாந்தனின் கவிதைகள் அவருடைய மொழியமைப்பினாலும் வெளிப்பாட்டு முறையினாலும் எபபோதும் தனித்துத் தெரிபவை. கவித்துவம் கூடிய கணங்களை உள்ளம்சமாகக் கொண்டவை.

மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்து கிடந்தது பூச்சாடி

(
குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு)

நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது
………………………………..
நிழல்களின் மௌனம் கொடியது
…………………………’

(
துரத்தும் நிழல்களின் யுகம்)

திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
……………………………..’

இவையே சித்தாந்தனின் அடையாளத்தை காட்டும் மொழிதல், ஆனால் தன்னுடைய முதற் தொகுதிக் கவிதைகளுக்கும் இரண்டாம் தொகுதிக் கவிதைகளுக்குமிடையில் அவரிடம் முதிர்வு உருவாகியுள்ளது. இந்த கவிதைகள் நிகழ்காலத்தைப் பேசுவனவாக இருக்கின்றபோதும் பொது வெளிப் பிரக்ஞையை அதிகம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

சுருக்கமாகச் சொன்னால் தனக்கான திசையினை அவர் கண்டுபிடித்துள்ளார் எனலாம். இந்தக் திசையில் இனித்தொடரும் பயணம் என்னவாக இருக்கும்? இந்தத் தொகுதியின் அட்டையினை றஸ்மி சிறப்பான முறையில் அமைத்துள்ளமை மேலும் நன்றாக உள்ளது.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்