சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மாயத் திரைகளில் வரைபடம் -1

25 அக்டோபர், 2008

அல்பங்களிலிருந்து முகங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
..........................................................................................
சித்தாந்தன்
புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் தெருவில் அலைந்தபடியிருக்கிறார்கள்.கண்ணாடிகளாலான கட்டடங்கள் சூழ்ந்த நகரத்தில் எல்லோருடைய அந்தரங்கங்களும் பரிசோதிக்கப்படுகின்றன.நகரத்தின் கண்காணிப்பாளர்கள் இரவுகளின் சருகுகளை மிதித்தபடி திரிகிறார்கள்.புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் அல்பங்களிலிருந்து முகங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.நேற்றுப் புன்னகையோடு விடைபெற்றவன் காலையில் பிணமாகத் தெருவில் கிடந்தான்.சனங்கள் யார் யாரையோவெல்லாம் சபித்தனர்.
மரணத்தின் குறிப்பேடுகள் ரகஸியங்கள் நிரம்பிய தாள்களாலானவை.ஊகங்களால் மட்டும் புனையப்படும் மரணக்கதைகளை புராதன சரித்திரங்களின் குப்பைத்தொட்டிக்குள்ளிருந்து கொண்டு காலம் வாசிக்கின்றது
முகங்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் அல்பங்கள் எல்லோர் வீடுகளிலும் இருக்கின்றன.அவை கண்ணீரின் சலனத்தில் மிதந்து திரிகின்றன.குருதியின் வெம்மையில் உலர்ந்துபோகின்றன.
குழந்தைகள் வீரிடும் நடு இரவுகளில் யன்னல்களின் பின்னும் கதவுகளின் அருகாமையிலும் கேட்கின்றன காலடிகள். மரணத்தின் மணம் எங்கும் பரவிவருகிறது. நிசப்தங்களால் பூட்டப்பட்ட சாலைகளை பூட்ஸ் கால்கள் உதைக்கின்றன. கனவுகளை வனைந்து கொண்டிருக்கும் பின்னிரவை நொருக்கியுடைக்கின்றன அவலங்கள் நிரம்பிய குரல்கள்.


குழந்தைகள் அல்பங்களுக்குள் என்னத்தைத் தேடுகின்றன?


குழந்தைகள் தயாரித்து வைத்pருக்கும் விளையாட்டு அல்பங்களுக்குள் வரையப்பட்ட பொம்மைகளின் படங்கள் பூக்களின் படங்கள் சாமிகளின் படங்கள்.இன்னும் தான் விரும்பாத நபரையோ விலங்கையோ கோடூரமாக வரைந்து வைத்திருப்பார்கள்.குழந்தைகளின் அல்பங்கள் வளர்ந்தவர்களின் அல்பங்களைக் போன்றிருப்பதில்லை.
நான் சந்தித்தேன் தன் நள்ளிரவுப்பயங்களை அல்பத்தில் வரைந்து வைத்திருக்கும் குழந்தையை.; அவள் தன் அல்பத்தில் தன்னால் குழந்தையாக வாழ முடிந்ததில்லை எனச் சொன்னாள்.தன் தெருக்கள் தனித்துப்போனதை தனது முற்றத்தில் அச்சமூட்டும் காலடிகள் முளைத்துப் பெருகியதை தன் நணபர்கள் வீட்டுக்குவராத நாட்களில் தான் தனித்துப்போக்கிய பொழுதுகளை சில நாட்களுக்கு முன் காணாமற்போன தன் தந்தையின் புன்னகிக்கும் முகத்தை தாயின் கண்ணீர் பெருகிய முகத்தை அல்பத்தில் இட்டு வைத்திருந்தாள்
அவளது அல்பத்தில் இரவுகள் மண்டிக்கிடந்தன சூரியன் ஏதோ தொலைவில் சேற்றிடைப் புதைந்து கிடந்தது.நிலவு வராத வானம் நட்சத்திரங்களையும் இழந்து கிடந்தது. நிலவுருக்கள் சிதறியபடியிருந்தன.
தான் வரைந்த வெள்ளைச் செவ்வரத்தம் பூவின் இதழ்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் படத்தைக் காட்டினாள். அதைத் தன் தாய் என்றாள். தன் மாட்டுத் தொழுவத்தில் காணாமல் போயிருந்த பசு மாட்டை கசாப்புப்புக்கடையில் தோல் உரிக்கப்பட்டு தலைகீழாகத் தொங்குவதாக வரைந்திருந்தாள்.அது தன் தந்தை என்றாள்.
குழந்தைகள் நினைவுகளை அல்பங்களில் சேமிக்கின்றன.கனவுகளின் நிறங்களால் தம் இயலாமைகளையும் சிதறடிக்கப்பட்ட வாழ்வையும் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உலகங்களையும் வரைகின்றன.
குழந்தைகளின் அல்பங்களில் குறுந்தெருக்கள் நெஞ்சாலைகளைக் குறுக்குறுப்பதில்லை.தொலைவுகளை அவர்கள் வார்த்தைகளால்த் தாண்டுகிறார்கள். சொற்களில் உறங்கிக் கொண்டிருக்கும் உலகம் காட்சிகளில் இயல்பு குலைந்தும் வர்ணங்கள் சிதைந்தும் வெளிப்படுகின்றன.
ஒரு அல்பத்துக்கான படங்களை சேகரிக்கத் தொடங்கும் குழந்தைகள் அவற்றை தங்கள் கனவுகளிலிருந்தும் தங்கள் பயங்களிலிருந்தும் வரையத்தொடங்குகின்றன.


வளர்ந்தவர்களின் ஆல்பங்கள் அல்லது வரையப்படாத நிழலுருக்கள்


நான் கூறுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனது கனவுகளின் சாயங்கள் பெயரத் தொடங்கிவிட்டன. மலைகள் இல்லாத நிலத்தில் வளர்ந்திருக்கின்றன மாபெரும் கற்சுவர்கள்.நண்பர்களை இழந்த நெடுநிலம் என்னுடையது. பறவைகளுக்கு கூடுகளுமில்லை குரல்களுமில்லை. நிராகரிக்கப்பட்ட வானத்தில் வரையறுக்கப்பட்ட கனவுகளுடன் பறந்து திரிகின்றன.
பறத்தல் என்பது உணவுக்காக அலைதலும் துயிலுக்காக கூடடைதலும் மட்டுமே. நெடுநிலம் சிறகுகளை உறிஞ்சுகிறது.
எனது அல்பங்களை இறந்த காலங்களின் பிணங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். காரணம் நிகழ்காலத்தில் யாரும் கனவு காண்பதில்லை நினைவுகளை சேமிக்கும் மனவெளியும் காயங்களால் நிரம்பிக்கிடக்கின்றது. கண்ணீரால் வரையப்பட்ட சித்திரங்களைப் பார்த்து எரிந்து கொண்டிருப்பவர்களிடம் என்னால் கையளிக்க முடியுமானதெல்லாம் பிணங்களை இட்டு வைத்திருக்கும் மரணத்தின் குறிப்புக்களைதத்தான் அல்பங்களையல்ல

பாழ் வெளியில் தவறிய மூன்று இரவுகள்

17 அக்டோபர், 2008

சித்தாந்தன்
..............................................................................

கனவாய் உதிர்ந்த இரவு

யாரையுமே வருடாத உன் முகத்தை
அந்த இரவுகளுக்குப் பின் காணமுடிந்ததில்லை
நான் உனக்காகக் காத்திருந்தேன்;
நினைவுச் சுவர்ப்பாளங்களில் கண்ணீர் முகத்தோடு
துயரின் குறியீடாய் உறைந்து போயினாய்

எந்தப் பகலும் உன்னுடையதாயில்லை
மினுங்கும் கரிய பிசாசுகளைத் தோளில்
சுமந்து திரியும் மனிதர்களிடம் தோற்றிருந்தாய்
எந்த இரவும் உன்னுடையதாயில்லை
கனவுகள் குலைந்த நாளில் இரவுகளையும் பறிகொடுத்தாய்

நீ பேசாதிருந்த இரவு

கண்கள் முழுவதும் முட்கள்
உனது பார்வைகளிலிருந்து விலக்கப்படுவதை உணர்ந்தேன்
காற்றோ சருகுகளுக்கிடையில் செத்துக்கிடந்தது
ஒரு நாயின் ஊளையை இன்னொரு நாய் தின்று தொலைத்தது
உனது ஒரு சொல்லும் வெளிச்சம் பாய்ச்சுவதாயில்லை
மௌன இடிபாடுகளுக்குள் வார்த்தைகளில் புதர்மண்டிற்று
நான் தூங்காமலே விடிந்த இரவில்
கனவு கண்டு சிரித்தபடியிருந்தாய்

நான் வெளியேறிய இரவு

இதயத்தின் நாளங்கள் அறுந்துபோயின
கடலின் அலைகளில் உருவம் உடைந்த எனது முகம்
அலைந்தபடியிருந்தது
நீ நினைத்தேயிருக்கமுடியாத் தூரத்தில்
நான் பயணித்தபடியிருந்தேன்
முடிவில் நான் கண்டது காடுகளை

இருளில் முகம் தெரியாதவர்களின் வார்த்தைகளைக் கேட்டேன்
நள்ளிரவின் திகிலூட்டும் ஒலிகளுக்கிடையில்
கனவின் ஈரித்த நிறங்களில் ஒளிரும் நாய்களின் கண்கள் கண்டு
பலமுறையும் திடுக்குற்றுத் துயருற்றேன்
இரவின் கால்களுக்கிடையில் அன்று உடைந்து கிடந்த பகலின் ஒளித்துண்டுகளை அதன் பிறகு
ஒரு போதுமே நான் கண்டதில்லை

மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு

03 அக்டோபர், 2008

சித்தாந்தன்
.................................................................................................
அ.

தெருமரங்கள் சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள் நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன
வெளிறிப்போன வானத்தினடியிலிருந்து
நாங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசினோம்
ஒளிரும் சொற்களால் குழந்தமையை நினைவு கூர்ந்தோம்
நட்பின் கதைகளை வரித்து வைத்தோம்
அவற்றில் அச்சமுற என்ன இருக்கிறது

ஆ.

வெளிவர முடியாப்பாதைகளில்
கனவுகள் குலைந்த விம்மலின் குரலை
பெருமூச்சுக்களால் எழுதவேண்டியிருக்கிறது
நம் சந்திப்புக்கான சந்தர்ப்பங்களை
தெருக்கள் அடைத்துள்ளன

வீட்டின் கதவையும் பூட்டி விட்டேன்
அதன் முன்னிருந்த குழந்தையின் பாதணிகளைக்கூட ஒளித்துவைத்துவிட்டேன்

இ.

இன்றைய மாலை சந்தித்தோம்
கவிதைகளைப் பற்றிப் பேசினோம்
மறுக்கப்பட்ட சொற்களின் வலியாய்
இதயத்தில் வெம்மை தகிப்பதாய்ச் சொன்னேன்
நீ பேசமுடியா ஒரு நூறு சொற்களை
என்முன் பரத்தினாய்
எல்லாம் எனது சொற்களாகவுமிருந்தன



சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறது இரவு
வாகனங்களின் இரைச்சல்கனவுகளில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் உதிரத்தின் நெடி தெறிக்கிறது
இந்த இரவை எப்படித் தாண்டப் போகிறேன்
ஆசுவாசப்படுத்த எவருமில்லை
படபடப்புடன் விழிக்கும் மனைவியை அணைக்கிறேன்
ஓலங்கள் பின் தொடரதெருவைக் கடக்கும் வாகனத்தின்
நிறங்குறித்து அச்சமில்லை
அதில் திரிபவர்கள் பற்றிய பயமே நிறைந்திருக்கிறது

உ.

துயில் உரிக்கப்பட்ட எனது கண்களில் வழிவது பயமா
ஆற்றாமையின் வலியா
கையாலாகாத்தனத்தின் கண்ணீரா
புரியாமை என்னைச் சிலுவையில் அறைந்தருக்கிறது
காற்றில் பரவும் செய்திகள்
உருச்சிதைக்கப்பட்டகழுத்து வெட்டப்பட்ட மரணங்கள் பற்றியன
தாய்மையின் கண்ணீரின் வலியுணராதவர்கள்
மரணங்களை நிகழ்த்துகிறார்கள்
மரணத்தின் குறிப்பேடுகளுள் ஓலமாய் கசிகிறது குருதி
எத்தனை தடவைகள்தான்
இறந்திறந்து வாழ்வது

ஊ.

மாலைகள் ஏன் இரவுகளாகின்றன
சந்தடியில்லாத் தெருவின்தனித்த பயணியாகத் திரும்புகிறேன்
பேய்விழி மனிதர்களின் பார்வைகளுக்கு
என் முகத்தை அப்பாவித்தனமாக்குகிறேன்
முதுகை வளைத்து முதிர்ந்த பாவனை செய்கிறேன்
இடையில் வாகனங்கள் ஏதும்வரவேண்டாமென கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்
புறப்படும் போது மனைவியிடம் சொன்னேன்
என் பயணத்தையோ வீடு திரும்புதலையோ
இப்போது தீர்மானிப்பது நானில்லை என

எ.

காத்திருப்பின் கணங்கள் நீண்டு
பாதங்களுக்கிடையில் நீரோடைகளாகின்றன
மறுக்கப்பட்ட உணவுப்பண்டங்களுக்காக
பிணத்தில் மொய்க்கும் ஈக்களாக மனிதர்கள்

கால்கள் கடுக்கின்றனசோர்வுற்றுத் திரும்பிவிடலாம்
பின் பசித்த வயிறுகளை எதைக் கொண்டு நிரப்புவது
குழந்தையின் குழல் மொழியை எப்படிக் கேட்பது
சற்றும் இளைப்பாற விடாமல் துரத்துகின்றன பசித்த வயிறுகள்
உயிரை தின்பவனிடம் உணவுக்காக மண்டியிடும் வேதனை

ஏ.

உன் தோள் மீறிய மகன் குறித்து நீயும்
இன்னும் தவளத்தொடங்காதகுழந்தை பற்றி நானும் கவலையுறுகிறோம்
காலம்ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
சுவாசிப்பை மறுதலிக்கிறது
கனவுகளை நாற வைக்கிறது
ஒரு கனியைஎம் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச்சிறகுகளை
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்