சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

22 ஜூன், 2008

சித்தாந்தன்
---------------------------------------------------------


அழகிய எமது நகரத்தில்
பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில்
அவனது ஒளிரும் கண்களில்
உலகம் மின்னுவதாய்
எல்லோரும் நினைத்தார்கள்

பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென
எல்லோரும் பேசிக்கொண்டார்கள்
காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில்
பிடாரன் முதலில் வாழ்ந்தானென
கதைகள் வளர்ந்தென ஊர்கள் முழுவதும்

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்

எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது

எனது அழகிய குடிசையில்
ஒரு முறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்

சபிக்கப்பட்ட காலங்களில்
நான் வாழ்ந்தேன்
நம்பிக்கை மட்டும் ஒரு குளிரோடையாக
எனக்குள் பெருகியபடியிருந்தது

பிறகு வந்த நாட்களிலெல்லாம்
பிடாரனின் புதல்வர்களின்
காலடிகளின் கீழ் பூக்கள் சிதைந்துகிடந்தன
அவர்களின் கைகளில் துப்பாக்கிகள்
புகைநாற்றம் படரும்படியாகவிருந்தன

பிடாரன் நகரம் முழுவதும்
சுவரொட்டிகளில் சிரித்தான்
மிருகங்களின் கடைவாயிதழ்ச் சிரிப்பு
துர்நெடியோடிருந்தது

அவனின் வாசகங்களாக
“இந்தப் பூமியில் தானும்
தனது புதல்வர்களுமே வாழ்வதற்கு
கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும்
நான் பூக்களிலல்ல
துப்பாக்கிகளில் வாழ்பவனென்றும்”
எழுதப்பட்டிருந்தது

சனங்கள் முதலில் நம்பவில்லை
நகரில் பிணங்கள் திடீர் திடீரென முளைத்தபோது
அதிர்ந்து போயினர்

பிடாரன் குறித்த ஆகச்சிறந்த கவிதையை
"பூக்களின் வாசனையற்ற அந்தக் கவிதையை"
கிழித்தெறிந்தனர்

மாயக்கவர்ச்சியில் சிரிக்கும் நகரத்தில்
அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள்
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்

பிடாரனின்
திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து
நான் தப்பிச்செல்கிறேன்
---------------------------------------------

நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்

சித்தாந்தன்

----------------------------------------------------------


துயர்ப் பயணக்குறிப்புகள் 1

நான் யுகங்களின் முடிவிலிருந்து
திரும்பி வந்திருக்கிறேன்
எறும்பூரும் பாதைகளும்
வனாந்திரங்களின் ஒலிகளுமற்றதில்லை
எனது வழித்தடங்கள்

இறுகிய முகங்களின் சர்வகாலத்தினதும்
புகைமண்டிய புன்னகைகளை
எனக்காக விட்டுச்சென்ற
எல்லோரையும் நானறிவேன்

இடியதிர்வின் மின்னல் ஒளியில்
பாதியான என் பாலிய பிராயத்தை
காடுகளின் இலையுறுமல்களுக்கிடையில்
தவற விட்டுவிட்டேன்

குறிகளும் முகங்களுமில்லாத
ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில்
நான் திரும்பி வருவேனென
யாரும் நினைத்திருக்க முடியாது

நான் வந்தேன்
மௌனகாலத்தில் மிதந்த கடல்
முதல் முறை அலையெழுப்பிற்று
வானத்திற்கு அப்பாலான வெளியிலும்
நான் அதைக்கேட்டேன்

கிரகங்களின் ஒளிமுகங்களிலும்
எனது புன்னகை ஒட்டிக்கிடந்தது

தூக்கு மேடைகளும் கயிறுகளும்
நிறைந்த பொழுதுகளில்
ஒரு அந்நியனின் பார்வையழிந்து
இன்னொரு அந்நியன்
தெருக்களில் உலாவந்த நாட்களில்
நான் தெருக்களில் வதைபட்டேன்
உங்களில் எவருமே தெருவுக்கு வரவில்லை

இன்று நான் வந்தேன்
பிரபஞ்சத்தின் கடைசியிரண்டு
கண்ணீர்த்துளிகளும் காய்ந்துபோன பிறகு
நான் வந்தேன்
தெருவில் சயணித்த மனிதர்களின்
ஆழ்ந்த உறக்கத்தின் அலறல்களில்
நான் கழுத்தைத் திருகியெறிந்த
கனவுகளுடன் வந்தேன்
ஆனால்
இன்னும் நீங்கள் தெருக்களுக்கு வரவில்லை
இலைச்சஞ்சாரம்
காற்றில் இல்லாமலே போய்விட்டது
நானே தெருக்களில் அலைகிறேன்
நான் மட்டும் ஒருவனாக
தனி ஒருவனாக

துயர்ப் பயணக்குறிப்புகள் 2

நண்பனே
சர்வசாதாரணமாக வார்த்தைகளை
உதிர்க்கப்பழகிவிட்டாய்

மொழி தெரியாத ஒரு நகரத்தில்
நான் ஒரு பித்தனாய்த் திரிந்தேன்

வாகனங்களின் நெரிசலுள்ளும்
மனித இடிபாடுகளிலுள்ளும்
வெறும் அலங்கார ஒளிர்வுகளிலுள்ளும்
எனது குரலை மறைத்தபடி திரிந்தேன்

உனது வார்த்தைகளை
இயல்பானதென நீ வாதாடுகிறாய்

நான் வார்த்தைகளை காற்றிலே விட்டெறியாமல்
மிக அவதானமாக உன்னைப் பார்த்தேன்

எந்த இயல்பும் நிரந்தரமானதில்லை
இயல்பில்லாமலும் போய்விடும்

நீ அவதானமாக இருக்க வேண்டும்
உன் இயல்புகளை
இந்த நகரம் பிடுங்கி எடுத்துவிடும்

இந்த வீதிகளில் இயல்பில்லை
கணங்கள் தோறும் இதன் இயல்புகள்
உடைந்து நொருங்குகின்றன

இதனையும்
நீ இயல்பெனக்கருதலாம்
அது நல்லது

ஒரு சிறிய இடைவெளி கொடு
நான் வெளியேறி விடுகிறேன்

தேநீர்க் கடைகளையும்
புத்தகக் கடைகளையும்
நினைவில் வைத்துக்கொள்கிறேன்

என்னைப்போலவே
இன்னும் சில மனிதர்களும்
இங்கு அலைவுறலாம்

பஸ் இலக்கங்களை மறந்துபோய்
அவர்களுக்குத் தெரிந்த
தொலைபேசி இலக்கஙகளைத் தவறவிட்டு
அலையலாம்

இங்கு வாழப்பழகிவிட்ட
வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
எல்லா மனிதர்களுக்கும்
எனது அனுதாபங்கள்

நண்பனே
எந்த இயல்பும் நிரந்தரமில்லை
இயல்பில்லாமலும் போய்விடும்

---------------------------------------------------------------

மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்

15 ஜூன், 2008

சித்தாந்தன்
----------------------------------------------------------

மகா ஜனங்கள் அழுதார்கள்
அரசின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்

அனோஜ்
எனது அழகிய சின்னஞ்சிறு நண்பியே
வெண்கொற்றக்குடை
சிம்மாசனம்
ஆயுதங்கள்
படைவீரர்கள் என எல்லாமே அரசர்களுடையன
எனக்கென்றோ
உனக்கென்றோ எதுவுமேயில்லை

அரசர்கள் வருவார்கள் போவார்கள்
ஒரு அரசன் விட்ட இடத்திலிருந்து
மற்ற அரசன் தொடங்குவான்

இது அரசர்களின் காலம்
மகா ஜனங்களின் கண்ணீர் எவர்க்கு வேண்டும்

அனோஜ்
கனவுகளின் வர்ணங்களால் வாழ்க்கையை வரையாதே
நம்பிக்கையீனங்களின் காலமாகிறது நமது காலம்
நம்பிக்கை தரக்கூடிய
எந்த வார்த்தையும் என்னிடமில்லை

உனது தூக்கங்களில்
துவக்கு மனிதர்கள் வந்து
அச்சமூட்டுவதாய் அழுகிறாய்

இவை
யுத்தத்தினுடைய நாட்கள்
நாட்களை மகாஜனங்கள்
யுத்தத்திற்கு பரிசளித்திருக்கிறார்கள்
நீ
தெளிவாக இருந்தால் போதும்
எல்லலாமே அரசர்களுடையன

உனக்கும் எனக்கும் மரநிழல்கள் போதும்
நிலவின் ஒளிபோதும்
நாம் புலம்பித்திரிய வேண்டாம்

இன்னும் நான் நம்புகிறேன்
எங்களது கண்ணீர் மிகவும் வலிமையானது

அரசர்களுக்கு துப்பாக்கிகளைப்பற்றியும்
பீரங்கிகளைப்பற்றியுமே அதிகமாகத் தெரியும்
மகாஜனங்களின் அழுகைகளையோ
துயரம் முற்றிய முகங்களையோ
அவர்கள் அறிந்ததில்லை

நீ இடப்பெயர்வுகளில் தவறிய
பொம்மைகளுக்காக அழுதாய்
அவை உனது பொம்மைகள்
நீ யாருமற்ற பொழுதுகளில்
அவற்றுடன் பேசியிருக்கலாம்
அவற்றிற்கு கற்பித்திருக்கலாம்

நான் அவற்றை பொம்மைகளென்பது
உனக்கு எரிச்சலூட்டும்
அனோஜ்
நான் அறிவேன்
இவை உனது நண்பர்களாயிருந்தன
நீ எனக்கிருப்பது போலவே

நாம் கலங்கத்தேவையில்லை

யுத்தம் எமக்கு பழக்கப்பட்டதாயிற்று
கண்ணீர்
குருதி
துயரம்
மகாஜனங்களின் மொழிகளாகிவிட்டன
சமாதானம் பற்றியெல்லாம்
தெருக்களில் பேச்செழுகிறது
நான் சமாதானம் பற்றியறியேன்

அது ஒரு கனியா
அது ஒரு மலரா
அது ஒரு பறவையா
அது ஒரு நட்சத்திரமா
யாரிடம் கேட்டறிய முடியும்
இல்லை
வெறும் வார்த்தை மட்டுந்தானா

மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பிப்பழகிவிட்டார்கள்

தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும்
நம்பிக்கையூட்டலுக்குரிய வார்த்தைகள்

அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே

2002
-----------------------------------------

உரையாடலில் தவறிய சொற்கள்

சித்தாந்தன்
----------------------------------------------------------

மிகத்தாமதமான குரலில்தான்
உரையாடல் தொடங்கியது
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்
ஓராயிரம் சொற்களைப்பேசிக் களைத்திருந்தோம்

மாயப்புன்னகையில் மலர்ந்து
கத்திகளாய் நீண்ட சொற்கள் வரையிலும்
தந்திரமான மௌனத்தோடு கடல் கூடவந்தது
நிழல் பிரிந்த உருவங்களின் மிதப்பில்
வெளியின் மர்மங்கள் அவிழ்ந்தன
காற்று
சொற்களின் வெற்றிடங்களிலிருந்து திரும்பி
கண்ணாடிக்குவளையுள் நிரம்பித்ததும்பியது

பேசாத சொற்கள் குறித்துக்கவலையில்லை
பேசிய சொற்களிலோ
கண்ணீரோ துயரமோ இருக்கவில்லை
வெறும் புழுதி
வசவுகளாய் படிந்துபோனது

குரல் இறங்கி சரிவுகளில் உருண்டு
தடுமாறிய தருணத்தில்
சில வார்த்தைகளை
அவசரமாக என்கைகளில் வைத்துப்
பொத்தியபடி நீ வெளியேறினாய்
ஒளியும் நிழலுமற்ற வார்த்தைகள் அவை
அர்த்தங்கள் நிறைந்த
ஒரு சோடிச்சொற்களையாயினும்
சாத்தப்பட்ட நகரத்தின் சுவர்களில் எழுதியிருக்கலாம்
ஒருவேளை அவற்றில்
பறவைகள் சில கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம்

எந்தப் பிரகடனங்களுமற்று
தாகித்து அலைந்து சலிப்புறும் போது
இருளில் நச்சுப்புகையாய் சொற்கள் மேலெழுகையில்
நதியொன்றினது உள்ளுற்றிலிருந்து
சரித்திரத்தின் பிணங்கள்
நாம்பேசாத சொற்களைப் பேசத்தான் போகின்றன

அப்போது கடல்
கரையிலிருந்து எம்சுவடுகளை
உள்ளிழுத்துச் சென்றுவிடும்
----------------------------------------------

எரிதலின் வலி

சித்தாந்தன்

----------------------------------------------------------


நெருப்புப்போல எரிகிறது விளக்கு
இப்படித்தான் நீ சொன்னாய்
மாலைப்பிரார்த்தனையில் நீயேற்றும்
தீபங்களின் ஓளியை
தின்றுவிடும் என்ற பயம் எனக்கு
-----------------------------------

தருணம்/2

சித்தாந்தன்
----------------------------------------------------------
நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல
என்குரல் கிடக்கிறது

முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை
நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில்
பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில்
ஈரலித்தது

உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில்
காதல் ததும்பும் நீர்ச்சுனை உள்ளடங்கியிருக்கிறது
மறுதலிப்பின் உதிர்நாழிகைகளில் வாசிக்கத்தொடங்கியிருந்தாய்
காமம் கிளர்ந்தூரும் வரிகளை

என் குறியிறங்கி தலையணைக்கடியில்
சர்ப்பமாய்ச் சுருண்டது
ஓரிரவில் குறியற்றவனாய் வாழ நேர்ந்தது

சுவர்கள் கடலாய்ப்பிரதிபலித்தன
மீன்கள் கலவி நட்சத்திரங்கள் பிறந்தன
நீ சுவர்க்கடலில் பிணமாய் மிதந்தபடியிருந்த என்சடலத்தை
பிய்த்துத்தின்னும் மீன்களை வருடிக்கொடுத்தாய்
அவற்றின் பற்கள் கிழித்த எனதுடலில் வழியும் குருதி
இன்னொரு கடலாவது தெரியாமல்

அலைகள் ஓய்ந்து கடல் வற்றத்தொடங்கிய பிறகு
அவசரத்தில் எழுந்து தலையணையடிலிருந்து
என்குறியை எடுத்தேன்
மீனாய்த்துள்ளி சுவர்க்கடலில் மூழ்கியது

இன்னும் நீ வாசித்தபடியிருக்கிறாய்
குறியற்றவனின் காமம் கிளர்ந்தூரும் சொற்களை.

இரவு 11.26 24.03.2008
------------------------------------------------------------

கருணை வேண்டிக் காத்திருத்தல்

சித்தாந்தன்

----------------------------------------------------------
வலி மிகு இரவுகளை
என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன்
ஆணிகளறையப்பட்;ட இதயத்திலிருந்துவழியும்
பச்சை இரத்தத்தின் வெம்மை
காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது

இரவைப்போல படியும் பனிப்புகாரை
விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத
கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது
அச்சத்தின் கருநிழல்

எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன
ஒரு பயணியின் கைப்பிடிக்குள்ளிருந்து
வழிகின்றன கனவுகள்
மிதமிஞ்சியதான அகோரத்துடன்
வனங்களின் உட்பாதைகளில் மரணங்கள்
காற்றின் இயல்பாய் நடந்;தேறுகின்றன
கம்பிகள் அடித்திறுக்கப்பட்ட சிறைகளுக்குள்ளிருந்து
உயிர் கருகும் நெடி

கையாலாகாதவனின் கண்ணீர் வீழ்ந்து
சமுத்திரங்களில் மூழ்கிறது தீ
மூடுண்ட நகரத்தின் சாட்சியாய் சுவர்களில்
மோதிச்சிதறுகிறது வெளவால்களின் குரல்

இரட்சிப்பின் வார்த்தைகளில் ஈரமுலர்ந்த பின்னும்
சிறைக்கதவை உதைத்து
முகத்தில் எச்சில் உமிழ்பவனிடமிருந்து
இன்னும்
கருணை வேண்டிக்காத்திருக்கிறது மனசு

10.03.2008 இரவு 11.55
------------------------------------------------

தருணம்/1

சித்தாந்தன்
----------------------------------------------------------
யாருமற்ற வீட்டை
அவசரமாக பூட்டிவிட்டு நடக்கிறேன்
உள்ளேயிருந்து யாரும்
அழைத்துவிடுவார்களோ என்ற பதட்டத்துடன்

எப்படியோ ஒரு கடலை உள்விட்டுவந்த பதட்டம்
வந்துவிடுகிறது

நீ கைகளைப்பிசைந்து பாவனைகளுக்குள்
காதலை மூழ்கடித்துக்கொண்டிருந்தாய்
எனது பதட்டம்
யாருமற்ற வீட்டின் கதவுகளுக்குப் பின்னால்
கேட்டுக்கொண்டிருக்கும்
அருபங்களின் உரையாடலில் குவிந்திருந்தது

வீடு திரும்புகையில்
மதுப்புட்டிகள் காலியாகிக்கிடக்கின்றன
கவிதைகளில் ப+ச்சிகள்
காதல் ததும்பும் சொற்களை அரித்துவிட்டிருக்கின்றன
என் தலையணை உறைகளில்
எண்ணை பிசுபிசுப்பு ஒட்டிக்கிடக்கிறது
சமையலறை நீர்க்குழாய் திறந்து விடப்பட்டிருக்கிறது
ஆடைகள் கலைந்துகிடக்கின்றன
சாப்பிட்டுவிட்டு கழுவாமலே கிடக்கும் கோப்பைகளில்
ஈக்கள் மொய்த்தபடியிருக்கின்றன

எனது காலடி மட்டும் கேட்கும் நடையின் பின்னே
மேலுமொருவரின் காலடியோசை
கடலின் அலையடித்தலாய் கேட்டுக்கொண்டிருக்கிறது

துயில் முட்டபடுக்கையில் சரிகையில்
என் போர்வையை யாரோ இழுத்துப்போகிறார்கள்.

காலை 5.51 26.03.2008
------------------------------------------------------

காற்றில் இசைப்பவனின் கனவு இசை

சித்தாந்தன்
----------------------------------------------------------
காற்றுக்கு புல்லாங்குழல் வாசிப்பவன்
இசையின் உச்சக்கதவுகளைத் திறந்து
அம்மணமாய் தெருவில் ஓடுகிறான்

அவன் கையில் காலவதியான கபாலத்தினது
தாறுமாறான ரேகைகள்

புதிர்க்கோடுகளாலான அவனது கோட்டு;ப்படத்தில்
பிறாண்டும் புனைகளின் கால்த்தடங்கள்

காற்றை பொருட்டாக கொள்ளாத விரல்களில்
இசையின் நரம்புகள் விம்மி முறுகுகின்றன

இசையின் பொருக்கு வெடித்திருக்கும்
அவனது உதடுகளில்
ப+த்திருக்கின்றன மலர்கள்
சொர்ப்பனத்தில் வெளியேறிய
ஸ்கலிதத்தின் பிசுபிசுப்போடு
--------------------------------------------------

சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின் குரல்

சித்தாந்தன்
---------------------------------------------------------------

இலைகளையிழந்த வனத்தின் புதிர்ப்பாதைகளிலும்
சுவடுகளை உறிஞ்சும் பெரும் பாலையிலுமாக
பயணிக்க நேரிட்டது.

கழுதைகளை விடவும் அதிகம் சுமக்கப்பழகிவிட்டோம்
அல்லது அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்
நண்ப,
துப்பாக்கிச் சன்னங்கள் அலையும் தெருக்களில்
கத்திகளாய்முளைத்திருக்கும் பார்வைகளுக்குமிடையிலும்
நீ பேசிக்கொண்டிருந்தாய்
கைதுகளை
சித்திரவதைகளை
காலத்திற்கும் அகாலத்திற்குமிடையில்
ஒளி அவிந்து உருகும் வாழ்வை
சலனமற்ற இரவுகள்
நாய்களின் ஊளையால் நடுங்குவதை
தெருவின் கடைசிப்பயணியாய்
வீடு திரும்புதலின் நிச்சயமின்மையை

உன்னை சிலந்தி வலையில்
சிக்கித் தவிக்கும் பூச்சியாய் உணர்ந்தபோதும்
பாறையின் வேர்ஆழத்துள்ளிருந்து
உனது சொற்களை உருவாக்கினாய்

வன்முறையையையும் அதிகாரத்தையும்
கடைசிவரையிலும் எதிர்த்துக்கொண்டேயிருந்தாய்
நண்பனே
உனது பயணத்தின் சாட்சியாய் நீயே இருந்தாய்
உனது கவிதைகளின் அர்த்தமாய் நீயே இருந்தாய்
கடைசியில்
எரியும் காலத்தின் புகை உன்மீது படிந்தது
அவர்கள் வன்முறையின் உச்சக்குரலில் பேசினார்கள்
நீயோ
அதிகாரத்தின் குருதி முகத்தில் காறி உமிழ்ந்தாய்
முடிவில் உன்னைக் கொன்றார்கள்

ஓரு பறவையின் குரலை இழந்த துயரம்
எங்களில் படிந்து போனது
நீ அற்பமான காலத்தின் மகா கவிஞன்
அப்படித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
நண்ப,
உன் சொற்களுக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் பெருநதியில்
வாழ்வின் துர்க்கனவுகளுடன் கவிதைகள் மிதக்கின்றன.

---------------------------------------------------------------------


00குறிப்பு: சந்திரபோஸ் சுதாகர்

எஸ்போஸ், போஸ் நிஹாலே என அறியப்பட்ட 90 களின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராவார். 16.04.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் அவரின் மகனின் முன்னாலேயே வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்