சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

காற்றில் அலைகிற மரணம்

27 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
........................................

யாரோ துப்பிய எச்சிலை
வாங்கிக் கொண்டது என்முகம்
காற்றின் திசைக்கு வளைந்து
கைகள் சோர்ந்து தெருவில் நடக்கும் போதில்
வலமாய் வருபவனின் காலடி ஓசை
நெஞ்சை மிதிக்கிறது
இடமாய் எதிர்ப்படுபவனின் பார்வை
பீதியை வளர்க்கிறது
வலமும் இடமும் விலக்கி
நடுத்தெருவில் நடக்கையில்
பின்னும் முன்னுமாக
இரைச்சலிடும் வாகனங்களுக்கிடையில்
பரிதவிப்பின் உச்சத்தில் நசிபடும் உயிர்

மரணத்தின் அச்சமூட்டலில் இருந்து
தப்பமுடியாத் தெருவில்
தினமும் நடக்கவேண்டியிருக்கிறது
பிறகு
எப்படிக் கேட்க முடியும்
சளிகாறி முகத்தில் துப்பியவனிடம்
ஓரமாய்த் துப்பினால் என்னவென

தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்

21 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
............................................

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன

குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை

குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை

இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது

மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்

மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது

ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை

குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.

08.08.2008 இரவு.9.49

குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு

18 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
.....................................................................................

மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்துகிடந்தது பூச்சாடி
நீ பூக்களின் கனவுகளை
சேகரித்துக்கொண்டிருந்தாய்
உள்ளங்கையினுள் மறைந்துகிடந்தது
குரோதத்தின் கத்தி
எனினும்
புன்னகைக்கும் குழந்தையின் முகத்தை
பொருத்தியிருந்தாய்
இந்த இரவு முழுதும் அந்தரிக்கும்
நிலவு பற்றியஅனுதாபச் சம்பாசனையை
நான் தொடங்கினேன்
காற்றின் குறுக்கு வெட்டு முகத்தில்
தலைசாய்த்துக் கிடந்த நீ
புன்னகையின் விரும்பப்படாத பக்கங்களை
எனக்குக் காட்டினாய்;

வெறுமையும் தனிமையும் உறைபனியாயின
எம் கால்களின் கீழே விழுந்திருந்த
மரங்களின் நிழல்கள் பாறைகளாயின
தொலைவில்
கடலின் அலைமடிப்புக்களில்;
மீளவும் இசைக்க முடியாத கீதமாய்
அலையத்தொடங்கியிருந்தோம்
நீ உனது கத்தியை
என் உள்ளங்கையினுள் திணித்தாய்
அது குரோதத்தின்
விழி சிவந்த பசியை ஊட்டியது
ஆகாயமோ
பறவையின் சிறகளவு குறுகியது
தொன்மங்களின் வனதேவதைகள்
கடவுளரின் தூதுவர்கள்
சாபங்களின் துர்மோகினிகள் எல்லாம் பார்த்திருக்க
ஒரு இடையனின் கைத்தடியளவிலான இரவை
நாங்கள் பகிர்ந்து கொண்டோம்

குரோதத்தின் கத்தி
தொலைந்துபோன அந்தக்கணம்
உடைந்த பூச்சாடியின் சிதறல்களுக்குள்
வெள்ளியாய் மினுமினுப்புடன்
ஏதோ ஊர்ந்துகொண்டிருந்தது

25.07.2008

துரத்தும் நிழல்களின் யுகம்

10 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
-------------------------------
எது எனது நிழல்
எது உனது நிழல்

நிழல்களின் கருமையாய் படர்ந்திருக்கும்
எல்லையற்ற மவுனத்தின் மீது
புழுதியாய் எழும் வார்த்தைகளின் நெடியை
துரத்திவரும் மிருகத்தின் நிழல்
எம் நிழல்களுக்கிடையில்

நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது

நிழல்களின் மவுனம் கொடியது
துர்க்கணங்களாய் நீளும் அனாதரத்தருணங்களில்
சலனமெழுப்பி நுழைந்து பின் இருளாய் உறைகையில்
நிழல்களின் மவுனம் கொடியது

நிழல்கள் துரத்தும் நகரங்களிலிருந்தும்
வனங்களிலிருந்தும் வரும் மனிதர்களின் பின்னால்
ஆயிரம் நிழல்கள் தொடர்கின்றன

நிழல்
நிழல்
பறவைகளின் குரலின் நிழல்
குழந்தைகளின் சிரிப்பின் நிழல்
காலமாகிய மனிதனின் கடைசிச் சொல்லின் நிழல்
எல்லாமே அச்சமூட்டுவன

நிழல்களால் நிறைந்த இவ்யுகத்தில்
ஒரு பூவையோ
பறவையையோ வரைந்திட முடிவதில்லை

நிழல்களின் நிரந்திரத்தின் மேல் அதிர்கின்ற குரல்
நிழல்களை எழுப்பி பெருநிழலாய் வளர்கிறது

மிகவும் கொடியது
உறக்கத்தின் நடுநிசியில் கனவுகளை
உதறியெழ வைக்கும் சப்பாத்துகளின் நிழல்கள்

நிழல்களுக்கிடையில்தான்
நீயும் நானுமாகத் தூங்குகிறோம் நிழல்களோடு

இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்

04 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
....................................................................................

யேசுவே
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது
துயரத்தாலும்
அவமானத்தாலும் தலைகுனிந்தீர்
உமது சிடர்களோ
தாகத்தாலும்
பசியாலும் தலை தாழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்

கல்வாரி மலைக்காற்றைப் பிளந்த
உமது சொற்களில்
இருளின் வலி படர்ந்திருந்தது
சிலுவையில் வழிந்த பச்சைக்குருதியை
நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது
பிறகுதானே
இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி

மனிதர்கள் மறந்துபோன சிரிப்பை
ஏன் விலங்குகளிடம் விட்டுச்சென்றீர்

அலைக்கழிக்கப்பட்ட ஆதாம் ஏவாளிடம்
நின் தந்தையின் வனத்திலிருந்து
சாத்தான் களவாடிக் கொடுத்த கனியில்
உமது பற்களுமிருந்தனவாம்
பார்த்தீரா
காடுகளுக்கிடையில் மூடுண்ட
சரித்திரங்களிலெல்லாம் காய மறுக்கும்
உமது குருதியை

யேசுவே
மனிதர்களேயில்லாத உலகில்
தீர்க்கதரிசனமிக்க
உமது விழிகளை ஏன் ஒளியாக்கினீர்
என்றுமே வற்றாத
கண்ணீர் நதிகளை ஏன் பெருகவிட்டீர்

எதுவுமே வேண்டாம்
யேசுவே
உமது பாவங்களைக் கழுவக்கூட
ஒரு நதியையெனினும்
அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா

மனிதர்களின் மொத்தப் பாவங்களையும்
முதுகுவளைய ஏன் சுமந்தீர்
பாவங்கள் முடிந்து போயினவா
உம்மைச் சூழ்ந்து துரத்துகிற
மனிதர்களின் பாவவினைகளிலிருந்து
நீர் ஒருபோதும்
தப்பிச் செல்லவே முடியாது

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்