சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

துயரைச் சுமக்கும் மரம்

09 நவம்பர், 2011

சித்தாந்தன்

நூறாவது இரவையும்
சுமந்திருக்கிறது இந்த மரம்

அதிதிகளின் தோரணையுடன்
மலைகளில் வழியும் ஒளித்திரவத்தைப் பருகியபடி
பொழுதுகள் போதை கொள்கின்றன

நானோ
குருவிகளின் அலகுகளில் தொங்கித் திரிகிறேன்
வீனான மனப்பிராந்தியுடன்
சாமங்களுடன் தர்க்கம் புரிந்தபடி

மிதக்கும் காற்றின் சலனத்தை
கலகங்களாக வரைகிறேன் சுவர்களில்

சாவகாசமாக அமரும் பொழுதுகளில்
இரவைச் சுருட்டியெடுத்து ஈனத்துடன்
பகலிடம் கையளிக்கின்றேன்

நட்சத்திரங்களின் ஆயுள் ரேகைகளை
நெடுந் தொலைவுகளின் பாதைகளாக்கி
இரவுக்கும் பகலுக்குமிடையில் தாவியபடியிருக்கிறேன்

வானத்திடம் வருவதற்கிடையில்
என் வம்சச் சூத்திரம் நிலைமாறுகிறது
காற்றும் கரையழித்து உட்திரும்பும் கடலும்
மாயத்தனங்களுடன் ஊமையாகின்றன

சாயம் வெளிறிய இரவு
பகலின் சூனியச் சாலையில் ஒளிக்கிறது

இரவினை அருந்திய பகலிடமிருந்து
தப்பிக்கும் நுட்பங்களை அறியாது
சதுரங்கத்தில் தோற்ற அரசானாக
பாதாள விளிம்புகளில் தள்ளாடுகின்றேன்

எனக்கான நூற்றியோராவது இரவையும்
இந்த மரமே சுமக்கின்றது

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்

01 நவம்பர், 2011

கருணாகரன்


காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெருங் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை.

(
செத்தவனின் பிம்பமான நான்)

தெரு மரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.

(
மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித்துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி

(
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்)

மகா ஜனங்கள் அழுதார்கள்
அரசனின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்

(
மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

சித்தாந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான துரத்தும் நிழல்களின் யுகம்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றில் உள்ள அடிகள் இவை. முப்பது கவிதைகளையுடைய இந்த நூலில் பெரும்பாலானவையும் யுத்தக் கவிதைகள் அல்லது யுத்தம் பற்றிய கவிதைகள். அல்லது சித்தாந்தனின் வாழ்க்கைக் கவிதைகளாகவேயுள்ளன. இந்தக் கவிதைகளிலுள்ள பெரும்பாலான அடிகளிலும் யுத்தத்தின் உக்கிரம், சனங்களின் அவலம், இரத்தத்தின் நெடில், வாழ்க்கையின் இழப்பு, அச்சத்தின் பயங்கரம், காலத்தின் துயர் ஆகியனவே இருக்கின்றன. ஆகவே இது ஒரு யுத்தக் கவிதைகளின் தொகுதியாகவே நமது மனதில் பதிவாகின்றது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழக்கவிதைகள் விடுதலை வேட்கையையும், அந்த வேட்கையுடனான போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் இப்போது எழுதப்படும் கவிதைகள் யுத்தத்தின் கொடுமையை, யுத்தத்தின்hல் பாதிகக்கப்பட்ட சனங்களின் அவலத்தை, யுத்தப் பிரபுக்களின் பயங்கர யுகத்தைப் பேசுபவனவாக உள்ளன. இது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம். குhலம் எப்படி உருத்திரிந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமாக இந்தக் கால வெளியின்; படைப்புகளே இருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால ஈழ அரசியற் செயற்பாடுகளின் தீவிரம் தவிர்க்க முடியாமல், எல்லாத் தளங்களிலும் எல்லா அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசியல் சாதாரணமானதாக இருக்கவில்லை என்பதே இதன் பொருள்.

கடந்த முப்பதாண்டு கால அரசியல் என்பது (1980-2010 வரையுமானது) யுத்த அரசியல் அல்லது ஆயுதந்தாங்கிய அரசியல், பயங்கரவாத அரசியல் அல்லது ஜனநாயக மறுப்பு அரசியலாகவே இருந்துள்ளது. ஆனால் இதைச் சனங்கள் விரும்பவும் இல்லை: எதிர்பார்க்கவும் இல்லை: ஏற்கவுமில்லை. ஆனால் இதை எதிர்க்க முடியாமல் எதிர்க்க திராணியற்ற நிலையில் அவர்கள் திணறினர். ஆப்படி அவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர்.

சித்தாந்தனின் கவிதைகள் பெரும்பாலும் இந்தப் பின் புலத்தையே, இந்த உண்மைகளையே சொல்கின்றன. குறிப்பாக அதிகாரத்திற்கெதிரான குரலாக, அதிகாரச் சூழலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமலும் அதேவேளை அது தொடர்பான எச்சரிக்கையோடடும் உள்ள நிலைமையில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இவை தவிர்க்க முடியாமல் தீவிர அரசியற் கவிதைகளாகவே இருக்கின்றன. இந்தத் தீவிரம் என்பது சீரியஸ் என்ற அர்த்தத்தையுடையது.

சித்ததாந்தனின் கவிதைகளிலுள்ள முக்கிய அம்சம் அல்லது சிறப் பென்பது அவரின் வெளிப்பாடாகும். வஸீகரமான மொழிதல், மொழியைக் கையாழ்வதிலுள்ள ஆற்றல், நுட்பமான சித்திப்புக்கள், தீவிரத் தன்மை கொள்ளும் கொந்தளிப்பு இந்த மாதிரியான வெளிப்பாட்டாற்றல் நமது சூழலில் இரண்டு கவிஞர்களிடம் இருக்கின்றன. ஒன்று சித்தாந்தனிடம் இன்னொன்று எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகரிடம் இதைத் தவிர்த்து இன்னொருவரை அடையாளங் காணுவதெனில் அது தானா விஷ்ணு எனலாம் (தானா விஷ்ணுவின் அண்மைய கவிதைகள்)

முக்கியமாக இவர்கள் அதிகாரத்திற்கு ஏதிரானவர்கள். அதிகாரமே இவர்களுக்குப் பிரச்சினை. அதுவும் சகிக்க முடியாப் பிரச்சினை. எனவே அந்தப் பிரச்சினை உருவாக்கும் சினத்திலிருந்து அந்தச் சினம் உண்டாக்கும் கொந்தளிப்பிலிருந்தே இவர்களுடைய கவிதைகள் உருவாகின்றன.அவ்வாறு உருவாகும் கவிதைகளுக்கான மொழியும்கூட அந்தச் சூழலின், அந்த நிலைமைகளின் மொழிதான்.

நெருக்கடிக் காலத்தின் மொழிக்கு எப்போதும் கடும் வீச்சும் சூடும் இருக்கும். தமிழகத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் ஆத்மாநாம், சிரியாவில் நிஸாக் கப்பானி, பலஸ்தினத்தில் மஹ்முத் தர்வீஸ், றிஷீட் ஹுசைன், சமீஹ் அல்காசிம் போன்ற பலர் இன்னும் ஆபிரிக்காவில் கேபிரியேல் ஒகாரா, டேவிட் டியோப், கிறிஸ்தோபர் ஒகிக்போ, செங்கோர், க்வெஸிப்றூ, டெனிஸ்ப் நூற்றஸ் என்று பல அடையாளங்களுண்டு.

சித்தாந்தன் தன்னுடைய காலத்திலன் பயங்கரங்களையும் அவலங்களையும் அச்சுறுத்தல்களையும் சொல்கிறார். ஓன்று இவை குறித்த வெளிப்பாடு, அடுத்தது இவற்றுக்கான எதிர்வினை. ஆகவே பயங்கர நிலை, துயரம், அச்சுறுத்தல்கள் பற்றிய பதிவாகவும் இவற்றுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவும் இந்தக் கவிதைகள் இருக்கின்றன.

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக் கொண்டு
இராணுவ வாகனங்கள் செல்கின்றன

(
தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்)

இது ஒரு சூழ்நிலையின் பதிவு. உண்மை யதார்த்தம் இந்தக் கவிதை இந்தச் சூழலை

குழந்தைகளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத் தொடங்கிவிட்டன

என மேலும் விவரித்துச் செல்லும் இந்தக் கவிதை சிறுவர்களின் உலகம் பறிக்கப்பட்டதை - சிதைக்கப்பட்டதை வெளிப்படுத்துகின்றது. எளிமையாக

சுண்டல்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஐஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத் திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை
……………………………….
இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய்ப் படிந்திருக்கின்றன

என்கிறது இங்கே பெளிப்படையாக ஒரு முரண் தென்படுகின்றது. சிறுவர்கள் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கம் தெருவில் ஏனையவர்களினதும ஏனையவற்றினதும் நடமாட்டம் இருக்கிறது. வண்டிகள் ஓடுகின்றன, சுண்டல்க்காரன்,ஐஸ்பழ வியாபாரிகள் எல்லோரும் திரிகிறார்கள். ஆனால் சிறுவர்கள் இல்லை. இது முரண் அல்ல. இதுதான் உண்மை, யதார்த்தம் என்று சொன்னோமே அது.

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்குக் காவு கொடுத்த
தாயின் ஒப்பாரி

குழந்தைகள் தெருவுக்கு வர முடியாதபோது எப்படி நிகழும் தெருவில் இராணுவ வண்டியின் கீழ் நிகழும் மரணம்? துவிர இதற்கு முதல் அடிகள் இப்படி அமைகின்றன. குழந்தைகளின் சுவடுகள் அழிந்த தெருக்களில் இராணுவத் தடங்கள் பெருகிக் கிடக்கின்றனஎன

ஆனாலும் சித்தாந்தனின் கவிதைகளின் வெளிப்பாட்டின் நவீனத்துவங்களைக் கொண்டு, நுண்ணம்சங்களையும் துலக்குகின்றன.

காலம்
ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
……………………………
ஒரு கனியை
எம்பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச் சிறகுகளைப்
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்

(
மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

இப்படிக் கவித்துவங்கள் கூடிவரும் இடங்கள் அதிகம். நம் காலத்தின் முக்கியமான கவிஞர்களில்_ கவியாளுமைகளில் சித்தாந்தன் முக்கியமானவர். அவர் இப்படி முதன்மை அடைவது அவருடைய வெளிப்பாட்டினாலும், அவர் கொண்டிருக்கும் கலக மனத்தினாலுமே. குறிப்பாக சனங்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதே சித்தாந்தனின் சிறப்பு. அதுவே அவருடைய அடையாளம். சனங்களில் ஒருவராக இருப்பதன் மூலம் இந்த அடையாளமும் இந்த அடையாளத்திற்குரிய மனநிலையும் அவரை வந்தடைகின்றன.

இல்லையென்றால்,

எல்லப் பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்
(
கடவுளரின் நகரங்களில் வாழுதல்)

என்று எப்படி எழுத முடியும்.

சித்தாந்தன் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவுமில்லை, நியாயப்படுத்தவுமில்லை. அவர் நம்பிக்கை கொள்வதற்கு எந்தச் சமிக்ஞைகளும் தெரியவுமில்லை. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையற்று இருக்கவும் முடியாது. அவருடைய நம்பிக்கைகள் சகமனிதர்களிடம் வரலாற்றிடமுமே இருக்கின்றன. இதே வேளை சனங்கள் தங்களுக்கு முன்னே எழுகின்ற விம்பங்களால் கவரப்படுவதையும் அந்தப் பிம்பங்களாலேயே மக்கள் பலியாவதையும் சுட்டி எச்சரிக்கின்றார்.

மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பப் பழகிவிட்டார்கள்
தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும் நம்பிக்கையூட்டலுக்குரிய
வார்த்தைகள்
அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே

(
மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளில் இருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்ப வேண்டாம்

(
புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்)

பொதுவாகச் சித்தாந்தனின் கவிதைகள் பொய்மைகள், புனைவுகள் குறித்த உலகத்தையிட்ட கசப்புடனும் அதையிட்ட எச்சரிக்கையுடனும் உள்ளதை உணர முடிகிறது. இதற்கு இந்தத் தொகுதியிலுள்ள முப்பது கவிதைகளில் எட்டு, ஒன்பது கவிதைகளின் தலைப்புக்கள் சாட்சி - கவிதைகளில் பெரும்பாலானவையும் ஆதாரம்.

கவிதைகளின் தலைப்புகள்...

1.
பிடாரனின் திகைப்பூட்டும கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கின்றேன்.
2.
இருளுக்குள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்.
3.
புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்.
4.
பாம்புகள் உட்புகும் கனவு.
5.
மெய்யுறங்கும் நாட்களின் கோடை.
6.
புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்
7.
நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்.
8.
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்.
9.
மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு.

இதேவேளை இத்தகைய கவிதைகளுக்கு அப்பாலான பல நல்ல கவிதைகளும் இந்தத் தொகுதியிலுள்ளன.

பசியோடிருப்பவனின் அழைப்பு, தெய்வங்கள் எறிந்த கத்திகள். கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, நிகழ் கணத்தின் வலி, உரையாடலில் தவறிய சொற்கள், பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு போன்ற கவிதைகள் இந்த வகையில் சிறப்படைந்துள்ளன. குறிப்பாக உறவு, தன்னிலை உணர்தல் ஆகியவற்றில். இதில் நிகழ்கணத்தின் வலிமனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவுபடுத்தும் தன்மையுடையது.

பொம்மையுடனான சினேகிதம்
எம்மையும் பொம்iமைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு
…………………………….
எமது அழுகையை
பொம்மைகளின் அழுகை என்றனர்
எமது இரத்தத்தை
பொம்மைகளின் இரத்தம் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்

சித்தாந்தனின் மொழியிலிருந்தும் வெளிப்பாட்டு முறையிலிருந்தும் வேறுபட்டிருக்கும் கவிதையிது. சுpத்தாந்தனின் கவிதைகள் அவருடைய மொழியமைப்பினாலும் வெளிப்பாட்டு முறையினாலும் எபபோதும் தனித்துத் தெரிபவை. கவித்துவம் கூடிய கணங்களை உள்ளம்சமாகக் கொண்டவை.

மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்து கிடந்தது பூச்சாடி

(
குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு)

நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது
………………………………..
நிழல்களின் மௌனம் கொடியது
…………………………’

(
துரத்தும் நிழல்களின் யுகம்)

திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
……………………………..’

இவையே சித்தாந்தனின் அடையாளத்தை காட்டும் மொழிதல், ஆனால் தன்னுடைய முதற் தொகுதிக் கவிதைகளுக்கும் இரண்டாம் தொகுதிக் கவிதைகளுக்குமிடையில் அவரிடம் முதிர்வு உருவாகியுள்ளது. இந்த கவிதைகள் நிகழ்காலத்தைப் பேசுவனவாக இருக்கின்றபோதும் பொது வெளிப் பிரக்ஞையை அதிகம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

சுருக்கமாகச் சொன்னால் தனக்கான திசையினை அவர் கண்டுபிடித்துள்ளார் எனலாம். இந்தக் திசையில் இனித்தொடரும் பயணம் என்னவாக இருக்கும்? இந்தத் தொகுதியின் அட்டையினை றஸ்மி சிறப்பான முறையில் அமைத்துள்ளமை மேலும் நன்றாக உள்ளது.

மகள்

18 அக்டோபர், 2011


(Multiple selerosis நோயால் வருந்தும் சபிதாவுக்கு)

மலையாள மூலம், ஆங்கிலத்தில்- k. சச்சிதானந்தன்

தமிழில்- சித்தாந்தன்


எனது முப்பது வயது மகளை

மீண்டும் ஆறுமாதக் குழந்தையாய்ப் பார்க்கின்றேன்

அவளை நீராட்டுகிறேன்.

முப்பது வருடத்து

துhசிகளையும் அழுக்குகளையும் கழுவுகின்றேன்.


அவள் இப்பொழுது

ஒளிவிடும் சிறிய அமிச்சைக் கவிதையாய்

சுவர்க்கத்தின் திரவமெனச் சுடருகிறாள்.

சிறிய துவாய்

காலத்தின் ஈரத்தால் நனைகிறது.


பீதோவன்

மேலான தன் மனிதக் கரங்களால்

யன்னல் கம்பிகளை

பியானோ இசைக் குறிப்புகளாக மாற்றுகின்றான்.


எனது மகள்

சிம்பொனி இசையிலிருந்து

தன் மென்மையான றோசாக் கரங்களால்

என்னைத் தழுவ எழுந்து வருகிறாள்.


வெளியே பிஹாக் இசையாய் மழை

கிசோறி அமொன்கர்.

துண்டிக்கப்படும் உரையாடல்கள்

09 அக்டோபர், 2011



செவிகளின் கூர்மை மங்கத்தொடங்கிய பிறகு
நீ கூவியழைக்கத் தொடங்கினாய்

இளஞ்சிவப்பு மலர்ச் செடிகளில்
கள்ளிமுட்கள் மலருகையில்
அதை அற்புதமென பறைசாற்றினாய்

இப்போதெல்லாம்
நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு
எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலாவிலிருந்து வடிகிறது ஒளியாய்

மமதையில் முறுக்கேறிய உனது சொற்களை
நகைத்திடமுடியாமலும்
புறங்கையால் விலக்கிடமுடியாமலும்
மணிக்கட்டின் கடிகாரம் மவுனமாய்க் கரைகிறது

எதையெதைச் சொல்லி உரித்தெறிய கணங்களை

அம்மணமாய் அலையும் சிறுவனின்
சலனமற்ற முகத்தை
பல தடவையும் பொருத்த வேண்டியிருக்கின்றது


எறும்புகளின் இரையாய்
என் சரீரத்தைத் தின்று மெல்லும்
இந்த யுகம் போகட்டும்

வேறென்ன
தோழமையின் நித்தியத்தை
பாசாங்காய் அறிவிக்கும் காலைகளின் ஆரவாரத்தை
‘சூ’ வெனத் துரத்தவியலாது
உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்கள்

மறுபாதி இதழ்-06

04 அக்டோபர், 2011

கவிதைக்கான இதழ்


வைகாசி-ஆவணி 2011


கவிதைகள்


அ.கேதீஸ்வரன்

ந.சத்தியபாலன்

பா.அகிலன்

எம்.ரிஷான் ஷெரீப்

எல்.வஸீம் அக்ரம்

யோகி

தானா விஷ்ணு

சி.ஜெயசங்கர்


மொழிக்கக் கவிதைகள்


கே. சச்சிதானந்தன்

-சித்தாந்தன்

சஜீவனி கஸ்துரி ஆரச்சி

- எம்.ரிஷான் ஷெரீப்

பற்றோமா

- தானா விஷ்ணு

சர்வேஷ்வர் தயாள் சக்ஸெனா

-சோ.பத்மநாதன்


கட்டுரைகள்


மொழி கலையாகும் தருணங்கள்

-ந.சத்தியபாலன்

மறுபாதி இதழ்-05 ஒரு வாசகன் பார்வையில்

-சாந்தன்

எதற்காகக் கவிதை

-கருணாகரன்


பத்தி


திவ்வியா


பதிவுகள்


கவிதை அறிமுகமும் கலந்துரையாடலும்-ஒரு குறிப்பு

-பா.துவாரகன்

மறுபாதி இதழ் 05 வெளியீடும் உரையாடலும்

-தீபச்செல்வன்


புத்தக அறிமுகம்


அனுபவங்களின் அர்த்தங்களால் நிறையும் வெளி

ரவிக்குமாரின் “மழைமரம்கவிதைத் தொகுப்பை முன்வைத்து

-சி.ரமேஷ்


எதிர்வினை


மொழி பெயர்ப்புப் பற்றி ஒரு மறுப்புரை

-சி.சிவசேகரம்


அஞ்சலி


ஏ.ஜி.எம் ஸதக்கா

அவசரம்

29 செப்டம்பர், 2011



அவசரக்காரர்களின் குறும்படம்

சித்தாந்தன்

ஈழத்துத் திரைப்படம் என்னும் தனியான அடையாளமிடல் இன்னும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது. ஈழத்துப்படங்கள் என்று எடுக்கப்படுகின்ற படங்கள் பலவும் தென்னிந்திய தமிழ் சினமாவின் தாக்கத்துடனேயே வெளிவருகின்றன. அந்தளவிற்கு தென்னிந்தியப்படங்கள் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. என்ற போதும் அவ்வப்போது ஈழத்து தமிழ் சினிமாவுக்கான எத்தன முயற்சிகள் பலவும் நடந்து வந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் தமது நிதர்சனம் அமைப்பின் மூலமாக நல்ல பல நீளப்படங்களையும் குறும்படங்களையும் உருவாக்கியிருந்தார்கள். எனினும் அவற்றில் பலவும் அவர்களது தேவைகளின் பொருட்டாக எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தைப் பொறுத்த வரையில் வெகுசன ஊடகங்கள் பலவும் இந்திய தமிழ் சினமாவின் வணிக நிலைப்பட்ட அம்சங்களை உள்வாங்குவதிலேயே தீவிரம் காட்டுகின்றன. வானொலிகளாயினும் சரி தொலைக்காட்சிகளாயினும் சரி இந்த வணிக மாயைக்குள் விழுந்தே கிடக்கின்றன.. செய்திகள் வாசிப்பதிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்புகள் வரை இந்த நிலைதான் தொடருகின்றது. தமக்கான தனித்தன்மையான அடையாளத்தை நிறுவியவர்கள் என்று சிலரைத்தான் குறிப்பிட முடியும். ஈழத்து தமிழ்ப்பாடல்கள் என்று தனியார் வானொலிகளில் போட்டிக்கு ஒலிபரப்பப்படும் பாடல்கள் எந்தளவிற்கு ஈழத்துக்கான அடையாளத்தைக் கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குரியதே. இந்த தனியார் வானொலிகள் பாடகர்களை இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக ஈழத்துக்கான பாடல், இசைமரபுகளைப் புறந்தள்ளியவாறிருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். தனித்தன்மையோடு வெளிவரும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவற்றை பழைய மரபுப்பாடல்கள் என புறமொதுக்கும் நிலையும் காணப்படுகின்றது.


இத்தகைய பின்னணியில் தற்போதைய சூழ்நிலையில் நல்ல முயற்சிகள் சில முனைப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் 3யு அழஎநை என்ற அமைப்பு குறும்படப் போட்டி ஒன்றினை நடாத்தி பரிசில்களை வழங்கியிருந்தது. இதுவொரு பாராட்டத்தக்க முயற்சியாகும். அண்மைக்காலமாக இளைஞர்களிடம் குறும்படங்கள் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டுவருகின்றது. சிலர் நல்ல படங்கள் சிலதைத் தயாரித்திருக்கின்றனர்.
இன்று (29.09.2011) ‘அவசரம்’ என்ற குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக்குறும்;பட அறிமுக விழா மாலை 4.30 மணிக்கு யாழ் கொசி உணவக மண்டபத்தில் நடை பெற்றது. இலக்கிய ஆர்வலர்களும் சினமா ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் சிலரின் முயற்சியினாலும் ஆர்வத்தினாலும் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். பல்வகையான குறைபாடுகளை இக் குறும்படம் கொண்டிருந்தாலும் அவர்களின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது. காதலை முதன்மையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டாலும் இக்குறும்படம் சொல்லும் செய்தி கவனிக்கத்தக்கது.

வழமையான தமிழ்சினமாவினைப் போலவே, ஒரு இளைஞன் பெண்ணொருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவள்தான் தன் வாழ்வு என அலைகின்றான். தன் காதலை வெளிப்படுத்துகின்றான். அவள் மௌனமாகப் போய்விடுகின்றாள். பின்னர் அவளைக் கோயில் ஒன்றில் சந்தித்து தன் காதலை ஏற்குமாறு மீண்டும் கேட்கின்றான். அவள் அவனின் காதலை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக பூ வினைக் கொடுக்கின்றாள். பின்னர் காதல் தொடர்கிறது. இடையில் ஒரு பாடலும் வருகின்றது. நல்ல வேளை தென்னிந்திய தமிழ் சினமாவைப் போல காதலனும் காதலியும் ஆட ஒரு கூட்டமும் சேர்ந்து ஆடவில்லை. மென்மையான பாடலாக அது இருக்கின்றது. பின்னர் ஒரு வில்லன் வருகின்றான். கதாநாயகனை எச்சரிப்பதோடு அவன் போய்விடுகின்றான. பிறகு காதலிக்கு லண்டன் மாப்பிள்ளையினை வீட்டார் பார்க்கின்றனர். இதனால் கதாநாயகியை நாயகன் வீட்டிலிருந்து கூட்டிவந்துவிடுகின்றான். நண்பர்கள் சேர்ந்து எங்கே தங்க வைப்பது என்று ஆராய்கின்றனர். கடைசியில் ஒரு நண்பன் தன் பாட்டியின் வீட்டினைப் பரிந்துரை செய்கின்றான். இதோடு ஒரு கட்டம் முடிந்து விடுகின்றது. அடுத்த கட்டத்தில் காதலி வீட்டில் குந்தியிருந்து அழுதபடியிருக்கின்றாள். கதாநாயகன் அவளை ஏசுகின்றான் அவளைத்திருமணம் செய்ததால் தன்னால் நண்பர்களுடன் சுத்த முடியவில்லை, தண்ணியடிக்க முடியவில்லை என்றும் விருப்பமில்லாவிட்டால் அவளை வீட்டைவிட்டு போகுமாறு கூறுகின்றான். புpன்னணியில் போத்தல்கள் உடைந்து நொருங்கும் சத்தம் கேட்கின்றது. படம் முடிகின்றது. இதுதான் அவசரம் குறும்படத்தின் கதை.

இக்குறும்படத்தை கஜதீபன் கதை திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கின்றார். அபிராமன் இசையமைத்திருக்கின்றார். சித்தார்த் கதாநாயகனாகவும் யாழினி கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் அச்சுதன், சிவா, சௌஜி, கெனெத், செந்தியன் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.
திரைக்கதையை பொறுத்தவரையில் பழகிப்போன கதைதான். ஏன்றாலும் முடிவில் சொல்லப்படும் செய்தி முகியமான ஒன்றாக இருக்கின்றது. காதலுக்கு அப்பால் அது குடும்ப வாழ்க்கை என்ற நிலைக்குவருகின்ற போது- அதிலும் இளம் வயதினர் அவசரத்தில் எடுக்கும் முடிவு எத்தகைய விளைவினை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் சொல்லியிருக்கின்றார். முதற்படம் என்ற வகையில் பல குறைபாடுகளும் இடர்பாடுகளும் இருக்கின்ற போதும். இளைஞர்கள் இவ்வாறும் சிந்திக்கிறார்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியதாகப்படுகின்றது.

இசை அபிராமன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் சில தமிழ் சினமாப் படங்களின் பின்னணி இசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் பாடலின் இசையும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவொரு குறைபாடாகவேபடுகின்றது. உரையாடல் மொழியும் பின்னணியில் கதைசொல்லப்படும் குரலும் சேர்க்கைத்தனமாக அமைந்திருக்கின்றன. ஒரு திரைப்படம் திரைமொழியையும் காட்சியமைவுகளையும் கொண்டமையும் போதே இயல்பானதாக அமையும் நிறைந்த உரையாடல்கள் சலிப்புத் தன்மையினையே ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் பரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்டசம் உரையாடல்களிலாவது கவனமெடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

காட்சிகள் சில தத்ருவமாகப் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் நில அமைவுகளும் தெருக்களும் வயல்களும் சில காட்சிகளில் கஜதீபன் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றார்.

எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். அடுத்தடுத்து வரும் காட்சிகளுக்கிடையிலான இடைவெளி சரியான முறையில் பொருத்தப்படவில்லை. சில இடங்களில் துருத்திக் கொண்டு காட்சிகள் நிற்கின்றன.

அவசரம் குழுவினரே தங்களின் இத்தகைய குறைபாடுகளை ஏற்றுக் கொள்கின்றனர். இதனைத் தங்களின் கன்னி முயற்சி எனத் தெரிவிக்கின்றனர். தமது அடுத்தடுத்த முயற்சிகளில் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக அதன் இயக்குநர் கஜதீபன் அறிமுக நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.

இக்குழுவினரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் போலத் தோன்றுகின்றது.

சிதறுண்ட காலக் கடிகாரம்

07 செப்டம்பர், 2011

சிதறுண்ட காலக்கடிகாரம்
-தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு-

அமரர் தங்கம்மா சரவணை நினைவு வெளியீடு,
புலோலி தென்மேற்கு, புலோலி.
முதற்பதிப்பு – 23.08.2011
தொகுப்பாளர் – சித்தாந்தன்
சி.ரமேஷ்
மருதம் கேதீஸ்
பதிப்புரிமை – தி.ஜீவரட்ணம்
தொடர்புக்கு – sroobanjeeva@ymail.com
siththanthan@gmail.com

தொகுப்பில் பங்களித்துள்ள கவிஞர்கள் -ந.சத்தியபாலன், பெண்ணியா, எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா விஷ்ணு, சித்தாந்தன், பஹீமா ஜஹான், ஒட்டமாவடி அறபாத், வினோதினி,நவாஸ் சௌபி, மைதிலி,அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ.ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஷ், யாத்திரிகன், கோகுலராகவன், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, தபின்,ஆழியாள், ரிஷான் ஷெரிப்.

சில வார்த்தைகள்

வாழ்வும் வாழ்பனுபவங்களுமே இலக்கியப்படைப்புக்களின் மையமாக எப்போதும் இருந்துவருகின்றன. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையின் முக்கியமான காலங்களைக் கடந்து கையறுநிலையில் நிற்கின்ற இந்தக் காலகட்டத்தில், கடந்த காலங்களின் மீதான மீள் உரையாடல்களும் மீள் வாசிப்பும் தேவைப்படுகின்றன. தமிழ் பேசும் சமூகங்களின் துயர்படிந்த வாழ்கையை அச் சமூகங்களிலிருந்து வந்த படைப்பாளிகள் பலரும் காத்திரமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பல படைப்பாளிகளின் வெளிப்பாட்டு வடிவமாக கவிதையே இருக்கின்றது. கவிதைகள் பதிவு செய்த அளவுக்கு போர்க்கால வாழ்வை வேறு எந்த இலக்கியப்பிரதிகளும் வெளிடப்படுத்தவில்லை என்பது வெளிப்படை.

தமிழ் கவிதைகளின் தீவிரம் எண்பதுகளில் கூர்மையடைந்தது எனலாம். இனப்பிரச்சினையின் தாக்கம் இலக்கியப்படைப்புக்களிலும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே பின்வந்த காலகட்டத்துக் கவிதைகள் இருந்த போதிலும் கவிதையின் நவீன கூறுகளை அவை பெரிதும் உள்வாங்கியிருக்கின்றன எனலாம். புலப் பெயர்வுகள், இடப்பெயர்வுகள் என யுத்தத்தின் பல்வேறு அவலங்களும் இந்தத் தொடர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது.

இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே இக்கவிதைத் தொகுப்பு வெளிவருகின்றது. இதில் பங்களித்துள்ள கவிஞர்கள் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னரான காலப் பகுதியிலழருந்து எழுதி வருபவர்களாவர்.இத் தொகுதியிலுள்ள கவிதைகளில் அநேகமானவை யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்தியிருக்கின்ற வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனங்களுக்குள் படர்ந்திருக்கும் மென்னுணர்வுகளின் தடங்களையும், கனவுகள், ஏக்கங்களையும் பேசுகின்றன. யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கின்றது. மக்களை அலைவுறச் செய்திருக்கின்றது.கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்புக்கான எத்தன முயற்சியாகவே இத் தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் என்பதே எமது விருப்பாகும். வலிகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நிலையான சமாதான வாழ்வுக்கும் இத்தகைய மீள் வாசிப்பு உறுதுணையாக அமையுமென நம்புகின்றோம்.

இது ஒரு முழுமையான தொகுப்பல்ல என்பது வாசிக்கும் அனைவராலும் இனங்காணத்தக்கதே. பலருடைய கவிதைகள் தவறவிடப்பட்டிருக்கின்றன. தவறவிடப்பட்டவை தரமற்ற கவிதைகள் என்ற கணிப்பீட்டை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இத் தொகுப்பு அமரர் தங்கம்மா சரவணையின் நினைவாகவே அவரது குடும்பத்தினரால் வெளியிடப்படுகின்றது. கால அவகாசம் போதாமையும் வரையறுக்கப்பட்ட பக்கத்துக்குள்ளேயே செய்ய வேண்டி இருந்தமையுமே பல நல்ல கவிதைகள் தவிர்க்கப்படக் காரணமாக அமைந்து விட்டது என்பதனை வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். ஆயினும் பறிதொரு சந்தர்ப்பம் வாய்க்கப் பெறும்போது இன்னும் பல கவிஞர்களின் காத்திரமான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இதனைக் கொண்டுவர முடியும். ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதையின் மொழிதலின் மாற்றங்களையும் வளர்ச்சி நிலையையும் இத் தொகுப்பு ஓரளவுக்கேனும் எடுத்துரைக்கும் என நம்புகின்றோம்.

இறந்தவர்களின் நினைவுகளுக்காக கல்வெட்டுக்கள் வெளியிடப்படும் எமது சமூகத்தில் அமரர் தங்கம்மா சரவணையின் குடும்பத்தினர் ஒரு கவிதைத் தொகுப்பை அவர் நினைவாக வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டிற்குரியதே. அமரரின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக நண்பர் தி.ஜீவரட்ணம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மற்றும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கவிதைகளுக்காக அக்கவிஞர்களுக்கும். இத் தொகுப்பின் அட்டைப்படம் இணைய தளத்திலிருந்து பெறப்பட்டதாகும். அத்தளத்திற்கும், இதனை அச்சிட்ட அன்ரா அச்சகத்தினருக்கும் எமது நன்றிகள்.

இத்தொகுப்புப் பற்றிய அனைவரதும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

-தொகுப்பாளர்கள்

20.08.2011


கவிஞர் ந.சத்தியபாலனுடன் ஒரு சந்திப்பு

23 ஆகஸ்ட், 2011

விமர்சனம் என்பது ஒரு படைப்புப் பற்றிய இன்னொரு படைப்பே

சந்திப்பு-தாமிரன்

கல்வியங்காட்டை வசிப்பிடமாகக் கொண்ட நடராஜா சத்தியபாலன் எண்பதுகளில் இருந்து கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். ஆங்கில ஆசிரியரான இவர் யுத்தகால வாழ்வு அனுபவங்களையும் வாழ்க்கை பற்றிய பல்வேறு தருணங்களையும் தன்னுடைய படைப்புக்களில் பிரதிபலிக்கின்றார். இவருடைய “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” கவிதைத் தொகுப்பு 2009 இல் வெளிவந்திருக்கிறது. சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்களை தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.


இலக்கிய ஆர்வம் உங்களுக்கு ஏற்றபட ஏதுவாக எவை அமைந்தன?

நான் சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் உடையவனாக இருந்தேன். எங்கள் வீட்டிலும் அதனை ஊக்குவித்தார்கள். விளையாட்டுத்துறைசார்ந்த ஈடுபாடற்றவனாக நான் இருந்ததனால் எனது பெரும்பாலான பொழுதுகள் புத்தகங்கள் வாசிப்பதிலேயே கழிந்தன. பதினைந்து வயதிற்குப் பிறகு எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனை இனங்கண்டு ஊக்குவித்தவர்; எனது தமிழ் ஆசிரியர் திருமதி சண்முகராஜா. எனது எழுத்து நன்றாக இருக்கிறது என என்னைத் தூண்டியவர் அவர்தான். எனது முதலாவது சிறுகதை பி.எச்.அப்துல்ஹமீத் தொகுத்துவழங்கிய ஒலி மஞ்சரி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது.

உங்களுடைய படைப்புக்களைப் படிக்கின்றபோது மென்னுணர்வு சார்ந்ததான அனுபவத்தையே பெற முடிகிறது.அநேகமானோரும் இவ்வாறுதான் கூறுகிறார்கள் இதற்கான அடிப்படை எதுவென அறிந்து கொள்ளலாமா?

நீங்கள் கூறுவது சரி. நான் மென்னுணர்வு கொண்டவன். ஏனக்கு ஒரு வரி ஞாபகமிருக்கிறது. நான் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் இருக்கின்றபோது எழுதிய கவிதை ஒன்றில் “புப்போல மனமிருந்தால் பெரிய துன்பம்” என்று எழுதியிருந்தேன். இப்போதும் அதை எனது நண்பி ஒருவர் குறிப்பிட்டு கதைப்பதுண்டு. எந்த ஒரு சிறியவிடையத்தாலும் தாக்கத்திற்கு உள்ளாகும் இயல்பு என்னிடத்தில் இருக்கிறது. அதை குறை என்று சொல்வதா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடுகின்றதுபோல புறத்தில் நிகழும் சம்பவங்கள் என்னை அதிகம் தாக்குவதுண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு நான்கைந்து நாட்கள் தூங்காமல் சிரமப்பட்டிருக்கிறேன். அப்படியான ஒரு இயல்பு எனக்குள் இருந்ததுதான் நீங்கள் குறிப்பிட்ட மெல்லியல்பிற்கு காரணம் என நினைக்கிறேன்.

பொதுவாக ஈழக்கவிதைகள் யுத்தகாலத்தின் பிரச்சனைகள் பற்றியே அதிகம் பேசின. தற்போது யுத்தம் முடிந்துவிட்ட சூழலில் இதன் பின்னரான கவிதைகள் எவ்வாறு அமையப்போகின்றன. பொதுவாக ஈழக்கவிதைகளின் அடுத்தகட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்.?

யுத்தகாலம், யுத்தத்தின் பாதிப்புக்கள் என்றவாறு கவிதைகள் போக தற்போதும் அதன் தொடர்ச்சியையே அவதானிக்க முடிகிறது. யுத்தம் முடிந்துவிட்டாலும் கூட அதன் பாதிப்புக்கள், யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகள் தருகின்ற தாக்கங்கள், யுத்தத்தில் நாம் அனுபவித்த வாழ்க்கையின் வலிகள் பற்றி கவிதைகள் பேசும். யுத்தத்தின் பின்னர் அதனோடு தொடர்புபட்டதான பல்வேறு தாக்கங்களிற்கு மக்கள் உள்ளாகிறார்கள். சமூகச் சீரழிவுகள், பாலியல் சீரழிவுகள், கலாச்சாரச் சீரழிவுகள் வன்முறைகள் என பலவற்றை நாம் கேட்கின்றோம். யுத்தகாலத்தில் இல்லாதனவாக இவை காணப்படுகின்றன. அவையுத்தத்தின் விளைவோடு தொடர்புபட்டு வந்தவை. இவைகளைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகள் தொடர்ந்து பேசும் என நினைக்கிறேன். வேறு விடையங்களும் கவிதைகளில் பேசப்படும் என நினைக்கிறேன். வேறு விடையங்கள் எனில் வாழ்க்கை பற்றிய தரிசனங்கள் பார்வவைகள் விருத்தியாக வேண்டிய சூழல் இருக்கிறது. இனி எழுதுகிறவர்களின் சிந்தனையைச் சார்ந்ததாக அவை அமையும் என நினைக்கிறேன்.

‘கவிதைகள் புரிவதில்லை’ என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?

கவிதையைப் புரிந்துகொள்வது என்பதை நான் எப்படி கருதுகிறேன் என்றால் படைப்பாளன் எத்தகைய உட்தாக்கத்திற்கு உட்பட்டதன் விளைவாக அந்தக் கவிதையைப் படைத்திருப்பான் என்ற அனுபவத்துடனான புரிதலோடு அந்தக் கவிதையை நாம் விளங்க எத்தணிக்கவேண்டும். குறிப்பாக பாருங்கள் நகுலனுடைய ஒரு கவிதை “என்னுடையதென்று ஏதுமில்லை நான் உட்பட” அந்தக் கவிதை புரியவில்லை என்கிற சிந்தனை எங்கே நிற்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். கவிதை புரியவிலை என்று கூறுவதைவிட முதலில் புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன என்று நாம் பார்க்கவேண்டும். பா.அகிலன் சொல்லுவார் “கவிதையை விளங்கிக்கொள்வது என்பது பதவுரை கொள்வது அல்ல” என்று கவிதைக்கு ஒரு சொல்லைச் சொல்லி விளங்க வைப்பது அல்ல கவிதை. கவிதை ஒரு அனுபவம். என்னைப் பொறுத்தவரை கவிதையை விளங்கப்படுத்துவது என்பதே ஒரு பாவனைதான். ஓர் அனுபவத்தை முடிந்தவரை சொல்லிற்குள் கொண்டுவர முயற்சிக்கின்ற ஒரு எத்தனம்தான் கவிதை. இதைப் புரிந்துகொள்வது என்பது இன்னொருவர் பெறுகின்ற அனுபவம். பொதுவாக ஒருவருடைய கவிதையை வாசிக்கின்றபோது அவா; எதைக் கூறவந்தார் என்பதை நான் விளங்கிக்கொள்கின்றபோதே அதை அவர் கண்டு கொள்கின்றார். அவரும் நானும் அந்த உணர்வைப் பகிர்ந்துகொள்கின்றோம். இவ்வாறு கவிதைகளை வாசிக்கின்றபோது அதைப்புரிந்துகொள்வது என்னவென்றால் அதன் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது. ஏந்த நிலையில் இருந்துகொண்டு அவர் சொன்னாரோ அதை அடையாளம் காணும்போதுதான் அந்தப் புரிதல் நிலவும். “அன்பிலார் எல்லாம் தமக்குரியா” என்பதை வைத்துக்கொண்டு நாள் முழுக்கக் கதைக்கலாம். அது திருக்குறளின் பதவுரை அல்ல. அது வள்ளுவன் சொல்லிய அனுபவம் பற்றிய என்னுடைய அனுபவ வெளிப்பாடு.

பொதுவாக படைப்பாளியின் அனுபவத்தைத்தான் வாசகனும் பெறவேண்டும் என்று கூறப்படுகின்ற கருத்துப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

படைப்பாளியின் அனுபவத்தை அச்சொட்டாக வாசகன் பெறமுடியாது. ஆனால் அதை அண்மிக்கமுடியும். அல்லாவிடின் அதை ஒத்த வேறு ஒரு அனுபவத்தைப் பெற முடியும். ஏனக்கு அந்த அனுபவம் வந்திருக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் ஒரு கவிதையைச் சொல்லியிருப்பேன் படிப்பவர் வேறு ஒரு நிலையில் இருந்துகொண்டு அதைப் புரிந்திருப்பார். என்னைவிட அவரது விளக்கம் நன்றாக இருக்கும். கவிதைக்கு பல்பரிமானத் தன்மை இருக்கிறது என்று கூறுவார்கள். பல்பரிமானத் தன்மைகொண்ட கவிதைகளின் புரிதல் என்பது அப்படிப்பட்டதுதான். அது ஒரு கோணத்தில் மட்டும் புரிந்துகொள்வதல்ல. மிகச்சிறந்த ஆழமான கவிதை பல்பரிமானத் தன்மையுடையதாக இருக்கும் என்பதுதான் உண்மை.

யுத்தம் முடிந்தபின் சில மூத்த எழுத்தாளர்கள் கூறிக்கொள்கிறார்கள் ‘போர்க்கால இலக்கியங்கள் தோற்றுப்போய்விட்டன’ என்று இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இலக்கியங்கள் தோற்பது, இலக்கியங்கள் வெற்றிபெறுவது என்பது குறிப்பிட்ட ஒரு வரைவிலக்கணத்துக்குள் அமைவதா என்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. போர்க்கால அனுபவங்கள், அதன் வலிகள், துன்பங்கள் என்பவை எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன உண்மையானவை. போர்க்கால இலக்கியங்கள் தோற்றுப்போய்விட்டன என்று ஏகோபித்த முறையில் கூறிவிடுவது முற்றுமுடிவான விடையமாக இருக்க முடியாது. இலக்கியத்தின் வெற்றியை ஒரு நூலாக அல்லது படைப்பாக வைத்துப்பார்ப்பது அந்த இலக்கியத்தின் தன்மையைப் பொறுத்தது. போர்க்கால இலக்கியங்கள் என்று ஒரு வட்டத்துக்குள் எல்லா இலக்கியங்களையும் கொண்டுவந்துவிட்டு அவை தோற்றுப்போய்விட்டன என்று கூறுவது சட்டம்பித்தனமானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போரின் வெற்றி பற்றிப் பாடிய இலக்கியங்களின் நிலை?

போரின் வெற்றி பற்றிப் பாடினார்கள். வெல்லவேண்டும் என்று பாடினாH;கள், வென்றதைப் பாடினார்கள், போர் ஒரு வாழ்வைக் கொண்டு வரும் என்று பாடினார்கள் அந்தக் கனவு சிதைந்துபோய்விட்டது. அந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புக்களும் நிகழாது போய்விட்டது. அதை எப்படி இலக்கியத்தின் தோல்வியாக பார்ப்பது? இலக்கியப் படைப்பாக அவை தம்முடைய நிலையில் நின்றுகொண்டிருக்கின்றன. இலக்கியம் தோற்றுவிட்டது என்று கூறுவதாயின் இலக்கியம் வெல்வது என்றால் என்ன? ஒரு படைப்பாளி அந்தக்காலத்தில் அனுபவித்ததும் கண்ட கனவுகளும் வாழ்ந்ததும் தோற்றுவிட்டதாக அH;த்தமில்லை.

இந்தியக் கவிஞர் ஒருவர், ஈழத்துக் கவிதைகளை ‘தீபாவளித்தின்பண்டங்கள்’ என்று கூறியதாக அறிந்திருந்தோம். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

மென்போக்காகக் கருத்துக் கூறுபவா;களை நான் கணக்கில் எடுப்பதில்லை. இந்தியக் கவிஞர்களில் ஈழத்துக் கவிதைபற்றி புரிதல் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை தூர தள்ளிநின்று ஐந்தாம் வகுப்பு மாணவனின் கருத்தை உயர்தரமாணவன் விமார்சிப்பபோல கதைத்துவிட்டுப்போகிறவர்களும் இருக்கிறார்கள். அன்றிலிருந்து சிறந்த கவிதைகளை முன்வைக்கும் ஈழத்துக் கவிஞர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆதலால் இத்தகையவர்களின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

உங்களுடைய மொழிபெயா;ப்பு முயற்சிகள் பற்றிக் கூறுங்களேன்?

நான் ஆங்கில ஆசிரியன். தமிழ் ஈடுபாடு என்னை ஆங்கிலத்துக்குள்ளும் ஈடுபடுத்தியது. எனக்கு கற்பித்த ஆங்கில ஆசிரியர் மிஸ்ரர் றஹீம். மன்னாரைச் சேர்ந்தவர். அவர் காலமாகிவிட்டார். அவர்தான் எனக்கு ஆங்கில இலக்கியத்தின் ருசியைக் காட்டியவர். மனதை நெகிழ்த்தும் ஒருகவிதையை அவர் சொல்லும்போது கண்கள் கசியும். ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்ற ஆசையை அவர்தான் எனக்கு ஊட்டினார். அதனுடைய தொடர்ச்சியாக ஒருகட்டத்தில் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். நான் மொழிபெயர்த்து வெற்றிகரமாக அமைந்தது ஆன்ரணசிங்கவின் பிளீற்மேபி. மொழிபெயர்ப்பு பலசந்தர்ப்பங்களில் எனக்கு சந்தோசத்தைத் தருகிறது. அதேவேளை சிலசமயங்களில் சவாலாகவும் அமைந்துள்ளது. கவிதைகள் தவிர சிறுகதைகளும் மொழிபெயர்த்துள்ளேன்.

கவிதை மொழிபெயர்ப்பிற்கும் சிறுகதை மொழிபெயர்ப்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு?

கவிதை மொழிபெயர்ப்பு கொஞ்சம் சிரமமான காரியம். கவிதையின் உள்ளிட்டைப் புரிந்துகொண்டு கவிஞன் எதைச் சொல்லவந்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டு அவரது கருத்து சிதையாவண்ணம் ஒரு மொழிபெயர்ப்பைக் கொடுப்பதற்கு ஒரு உள்ளார்ந்த உழைப்பு தேவைப்படுகிறது. சிறுகதைக்கும் உள்ளரர்ந்த உழைப்பு தேவைப்படினும் அது பரந்த தளத்தில் அமைவதால் அதற்கு ஒரு அடிப்படையான மொழிபுரிதல் இருந்தால் போதும். அதைப் படைப்பாற்றலாகக் கொண்டுவரும்போது உயிர்த்துவம் கெடாமல் எழுதுவது சொந்த மொழியின் படைப்பாற்றலைப்பொறுத்தது.

சிறுகதையின் அண்மைக்காலப்போக்கில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது அந்த மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ?

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்று கூறுவார்கள். மாற்றங்கள் வரவேற்கக்கூடியது. நாங்கள் பழகிப்;போன தடத்திலேயே இருக்கவேண்டும் என்பதில்லை. இலக்கியம் அப்படி இருப்பதுமில்லை. நாம் ஆரம்பததில் படித்த கவிதைக்கும் தற்போதுள்ள கவிதைக்குமிடையில் மாற்றம் இருக்கிறது. அதுபோல சிறுகதையிலும் மாற்றம்வர சாத்தியம் இருக்கிறது. அதேநேரத்தில் புதிதாக வருகின்ற பின்நவீனத்துவத்தின் பெயரால் வருகின்ற எழுத்துக்கள் பற்றி விமர்சனங்களும் உண்டு வரவேற்புக்களும் உண்டு. ஒருவர் தனது மொழியில் தனக்கு கைவருகிற முறையினை ஒரு படைப்பிற்கு பயன்படுத்த முடியும் நவீன போக்கில் ஈடுபாடு காட்டும் ஒருவர் அந்த முறையில் சிறுகதையை ,கவிதையைப் படைத்துக்கொள்வதில் தவறில்லை. வரவேற்கப்படவேண்டியது. அதில் ஈடுபட முடியாதவர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஒன்றைக் கூறலாம் புதிதாக வருகின்ற போக்கு வில்லங்கத்திற்கு வருமாயின் அது யோசிக்கப்படவேண்டியதுதான். சிலர் பாண்டித்துவத்தைக் காட்டுவதற்காக புதுமை எனும் பெயரில் செய்யும்போது கொஞ்சம் யோசிக்கவேண்டித்தான் இருக்கிறது. நான் நவீனத்துவத்தில் முயற்சிக்கவில்லை. என்னைப்பொறுத்தவரை பழகிப்போன முறையிலேயே அழகாகக் சொல்ல முயற்சிக்கிறேன்.

ஈழத்தில் படைப்புக்களின் தரத்திற்கு ஏற்ற விமா;சனம் இருக்Pறதா? படைப்பாளிகளை வெறுமனே தடவிக்கொடுப்பது போல பலரின் விமா;சனங்கள் இருப்பதாக உணரமுடிகிறதே?

விமர்சனங்கள் வெறுமனே தடவிக்கொடுப்பதாகவும் இருக்கக்கூடாது.அதேவேளை ஒரேயடியாக அடித்து விழுத்துவதுபோலவும் இருக்கக்கூடாது. விமர்சனம் என்பது ஒரு படைப்பு என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு படைப்புப் பற்றிய இன்னொரு படைப்பாகத்தான் விமர்சனம் என்பது இருக்கும். நான் விமா;சனம் என்று ரசித்துப் படித்தபல விடையங்கள் இன்னொரு இலக்கியமாகத்தான் எனக்குப் பட்டிருக்கிறது. சில கவிதைகள் பற்றி விக்கிரமாதித்தியனின் கட்டுரைகள் படித்திருக்கிறேன். அவருடைய விமா;சனம் கவிதையில் காணப்படும் உச்சமான சிறப்புக்களை அழகாகச் சொல்லும். அதில் வரும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இவற்றைத் தவிர்த்தால் மிகச்சிறப்பாக இருக்கும் என முடிப்பார். அது ஒரு விதமான வகை என்று நினைக்கிறேன். அதேவேளை ஒரு படைப்பை விமர்சிப்பவர் ஒரேயடியாககப் புகழ்கிறார் என்றால் அது எழுதிய விதத்திலேயே விளங்கும் அது விமர்சனமா? புகழச்சியா? என்று. விமா;சனம் தேவையானது. ஆனால் நேர்மையானதாக இருக்கவேண்டும். காய்தல் உவத்தலற்று இலக்கியத்தின் மீதான விமர்சனமாக அமையவேண்டும். விமா;சனங்களைக் கண்டு ஒதுங்கிப்போய்விடவேண்டியதில்லை. எழுதுவதற்கு எழுத்;தாளனுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை வாசகன் விமா;சிப்பதற்கும் இருக்கிறது. வாசகன் ஒரு படைப்புப் பற்றிய தாக்கத்தை விதந்துரைக்கவும் முடியும் கண்டிக்கவும் முடியும்.

(இவ் நேர்காணல் “இருக்கிறம்“ இதழுக்காகச் செய்யப்பட்டது. அவ்விதழில் -22.08.2011- இதன் சுருக்கமான வடிவமே பிரசுரிக்கப்பட்டிருப்பதால் முழுமையான வடிவம் இங்கு பகிரப்படுகிறது)

கடல்வெளி

21 ஆகஸ்ட், 2011



தீரா அலையெழுப்புகிறது கடல்வெளி

சாத்தானும் கடவுளும்
அறியாத் தொலைவில் செல்கிறது
திசையற்றவர்களின் படகு

கடவுளே சாத்தானாகவும்
சாத்தானே கடவுளாகவும்
உருமாறிய தருணங்களை
அலையுமிழும் கடல்
அறிந்திருக்க நியாயமில்லை

தன் மடிநிறைந்திருக்கும்
குழந்தைகளை அது
அழைத்திருக்கவுமில்லை

அறியா முகங்ளை
அறியா தரையை
சென்றடையும் ஒரு நாளில்
அது தன் வயிற்றிலிருந்து
உதிர்க்கக் கூடும்
எண்ணற்ற பிணங்களை

சாத்தானோ கடவுளோ
கடலைத்தான் நம்பியிருக்கின்றனர்

கடலே சாத்தான்
கடலே கடவுள்

கடவுளும் சாத்தானும் உறங்கிய பின்னர்
கடலே காவு கொள்கிறது
கைவிடப்பட்டவர்களை

கடவுளோ சாத்தானோ
இல்லா பிரபஞ்ச வெளியை
கடல் வெளியே உட்கொள்ளும்

கவனம்
கடவுளும் சாத்தானும்
சபிக்கப்பட்டவர்களும்

மறுபாதி-கவிதைக்கான காலாண்டிதழ்

19 ஆகஸ்ட், 2011

தாமதமும் சில விளக்கங்களும்

சித்தாந்தன்

‘மறுபாதி’-கவிதைக்கான காலாண்டிதழ்- இது வரை ஐந்து இதழ்கள் வெளிவந்துள்ளன.ஐந்தாவது இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக கொண்டுவந்திருந்தோம்.

ஒரு இதழைத் தொடர்ந்து வெளிக் கொண்டுவருவதிலுள்ள அனைத்து நெருக்கடிகளையும் சந்தித்தோம். முதல் இரு இதழ்களிலும் இருந்த நிதி ரீதியிலான நெருக்கடியை மூன்றாவது இதழில் கடந்தோம். தொடர்ச்சியாக இதழைக் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. ஐந்தாவது இதழ் வேலை நடந்து கொண்டிருந்த போது நாம் பதிப்புச் செய்யும் அச்சகம் மூடப்பட்டது. இதனால் இதழை கொண்டுவருவதில் தாமதங்களைச் சந்தித்த போதும் அதனை வெளிக்கொணர்ந்தோம்.

‘மறுபாதி’யை நாம் கொண்டு வருவதற்கான பிரதான நோக்கம் நவீன கவிதை சார்ந்த உரையாடலை வரிந்த தளத்தில் நிகழ்த்த வேண்டும் என்பதே. ஆயினும் அது முழுமையான அளவுக்கு சாத்தியமில்லாது போய்விட்டது. நேரிலே கவிதைகள் சம்மந்தமாகவும் இதழ் சம்மந்தமாகவும் விமர்சனம் செய்பவர்கள் அதனை எழுத்துவடிவாகத் தருவதில் பின்னடித்தார்கள். மூத்த படைப்பாளிகளில் பலரும் குறைகளைச் சொல்பவர்களாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து இதழில் பங்களிக்க மறுத்தனர். இந்தப் பின்னணியில் எம்மால் முடிந்த அளவுக்கு முயற்சித்து படைப்புக்களைத் திரட்டி இதழ்களைக் கொண்டுவந்தோம். பல படைப்பாளிகள் படைப்புக்களைத் தருவதாக கூறி காலங்கடத்தினார்கள். அவர்களுக்குத் தொலைபேசி எடுத்த பணமும் செலவிட்ட நேரமும் இன்னொரு இதழைக் கொண்டுவருவதற்குப் போதுமானதாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். ஐந்தாவது இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. பல படைப்பாளிகளுடன் தொடர்பு கொண்டு மொழி பெயர்ப்புக் கவிதைகளையும் மொழி பெயர்ப்பு சம்மந்தமான கட்டுரைகளையும் பெற்றோம். பலர் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். சிலரிடம் படைப்புக்களுக்காக காத்திருக்க வேண்டியுமிருந்தது. ஆயினும் அவர்களின் பங்களிப்பு எமக்குப் பெரிதும் உதவியது.

உண்மையில் ‘மறுபாதி’யை கொண்டுவருவதில் எமக்கு எந்தவகையிலும் நிதிரீதியான பிரச்சினை இப்பொழுது இல்லை. படைப்புக்கள்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஈழத்திலிருந்து வருகின்ற பிற இதழ்களைப் போல எம்மாலும் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியும். ஆனால் நாம் இதழின் காத்திரத்தையே முதன்மைப்படுத்துகின்றோம். கவிதை பற்றிய உரையாடலை ஓரளவுக்கேனும் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றோம். கவிதை எழுதும் அல்லது கவிதைசார்ந்த படைப்புக்களை எழுதும் அனைத்துப்; படைப்பாளிகளுக்கும் அவர்களின் படைப்பு வெளிவந்த இதழ்களை இலவசமாகவே அனுப்பி வருகின்றோம். இதனை அடிப்படை அறமாக நாங்கள் கருதுகின்றோம். உண்மையில் மறுபாதியின் விலை 30.00 ரூபாய் மட்டுமே ஆனால் இதழை பிற இடங்களுக்கு அனுப்பும் போது இதழின் விலையிலும் அதிகமான செலவுக்கே அனுப்புகின்றோம். ஆனால் இங்கிருந்து வெளிவரும் இதழ்கள் சில படைப்பாளிகளுக்குரிய இதழ்களை இலவசமாக கொடுப்பதில்லை. படைப்பையும் கொடுத்து படைப்பு வெளிவந்த இதழையும் பணத்துக்கே வாங்கி படிக்க வேண்டிய நிலைதானிருக்கின்றது. ஒரு படைப்பாளி படைப்பை எழுதுவதற்கும் அதனை சஞ்சிகைகளுக்கு அனுப்புவதற்கும் ஏற்படும் செலவை சஞ்சிகைகள் நடத்துவோர் சிலர் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. பல படைப்பாளிகள் எம்மோடு இது பற்றிக் கதைத்துக் குறைப்பட்டிருக்கின்றார்கள். நண்பர் யேசுராசா அவர்கள் ‘தெரிதல்’ என்ற இதழை நடத்திய போது அதில் எழுதுவோருக்கு பிரதியை இலவசமாக வழங்கியதோடு ஒரு தொகைப் பணத்தினையும் கொடுத்திருந்தார். இது எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது. ஆதலால் பணம் எங்களால் கொடுக்க முடியாதவிடத்தும் படைப்பாளிகளுக்குரிய இதழ்களை இலவசமாக அனுப்பினோம்.

மறுபாதியின் சிறப்பிதழ் வெளிவந்து ஒரு வருடமாகிவிட்டது. நண்பர்கள் பலரும் இதழின் தாமதம் பற்றிக் கேட்கின்றார்கள். அதற்கான பிரதான காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று படைப்புக்கள்தான். இங்கிருந்து எழுதுகின்ற கவிஞர்களில் சிலர் இங்கிருந்து வெளிவரும் இதழ்களுக்கு படைப்புக்களை அனுப்புவதில்லை. தமிழக, புலம் பெயர் சஞ்சிகைகளில் இவர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கின்றார். அவர்களிடம் மீளமீளத் தொடர்புகொண்டு கேட்க வேண்டிய நிலையே இருக்கின்றது. அவர்கள் பங்களிக்காமைக்கான காரணம் என்ன என்பது புரியாமலிருக்கின்றது. உண்மையில் தாங்கள் வாழும் நிலத்திலிருந்து வெளிவரும் இதழ்களின் தொடர்ச்சியான வருகைக்கு பங்களிப்பது என்பது தார்மீகமானது என நினைக்கின்றேன். தம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தம்மோடு வாழும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானது. ஆனால் பலரும் தமிழ்நாட்டு, புலம் பெயர் சஞ்சிகைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக படைப்பை அனுப்பித் தங்களுக்கான அங்கிகாரத்தை அல்லது பிரபல்யத்தை தேட முனைகின்றனர் என்று நம் நண்பர்கள் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை போலத்தான் தோன்றுகின்றது. கருத்துநிலை சார்ந்து மாறுபாடுகள் இருப்பின் அதை தெரிவிப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் எந்தக் காரணங்களையும் சொல்லாது இவ்வாறு புறக்கணிப்பது வேதனைக்குரியதே.

ஐந்து இதழ்கள் வரையிலும் மீள மீள நினைப்பு+ட்டித்தான் பலரிடம் படைப்புக்களைப் பெற முடிந்தது. இந்த நிலையை தொடர்ந்து பின்பற்ற முடியுமா? ஒருவருக்கு எத்தனை முறை தொலைபேசி எடுப்பது,மின்னஞ்சல் அனுப்புவது. இவ்வாறு தொலைபேசி எடுப்பதை,மின்னஞ்சல் அனுப்புவதை அவர்கள் பெருமையாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் மனநெருக்கடிக்குள்ளாகின்றோம். தொடர்ச்சியாக இதனைப் பேணமுடியாது. இந்த நிலையைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு, புலம்பெயர் சஞ்சிகைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவதில்லை பிரச்சினை அதே போல் இங்கிருந்து வரும் இதழ்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்பதையே நாங்கள் சொல்ல வருகின்றோம்.

ஈழத்தில் சிற்றிதழ்களின் வருகையும் தொடர்ச்சியும் மிகக் குறைவான நிலையிலேயே இருக்கின்றது. வாரப் பத்திரிகைளில் வரும் துணுக்குகளைக் கவிதையாகக் கொண்டாடும் நிலையொன்று திரும்பவும் தலையெடுக்கின்றது. எனவே கவிதைக்கான இதழின் தேவை இன்னும் இருப்பதாகவே தோன்றுகின்றது. அதற்கு கவிஞர்கள் படைப்பாளிகளின் ஆதரவு மிக அவசியமானது.

0



சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்