சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

வேட்டையாடும் மிருகம்

31 டிசம்பர், 2010

சித்தாந்தன்

வேட்டையின் போது
கொல்லாதுவிட்ட மிருகம்
என்னைக் கனவில் அச்சுறுத்துகின்றது

மரங்களிடை பதுங்கும்
அதன் கண்களின் குரூரம்
கொலையாளியின் கூரிய ஆயுதங்களாய்
ஒளிருகின்றன

அதன் பஞ்சுடலின் வனப்பில் மயங்கி
தப்பிக்க அனுமதித்துபோதும்
தன் சாதுரியத்தால்
என்னை வேட்டையாட வந்திருக்கின்றது

இலைகளையுண்ணும்
அதன் பற்களில் வழியும் இரத்தத்தில்
நனைகிற என் தேகத்தில்
தன் சிறுவிரல்களால் புலால் நாறும்
சுரங்களை மீட்டுகின்றது

பூச்சியத்தில் சிதறுண்ட
என் தூக்கத்தின் பசிய துளிரை
தன் நகங்களால் கீறும் மிருகம்
எதிர்பாராத பொழுதில்
ஒரு போர்வீரனாய் விஸ்பரூபம் கொண்டு
தன் யுகத்தின் கடைசிப் பிராணியாய்
என்னைப் பாவனை செய்து
அங்கலாய்த்தபடி அமர்ந்திருக்கிறது முன்னால்

நினைவின் வழி கனவுள் நுழைந்த
மிருகத்தின் சிறிய கண்களுக்குள்ளிருந்து
வேட்டை முடித்துத் திரும்பும்
எண்ணற்ற வீரர்களில் ஒருவனாய்
நானும் திரும்புகின்றேன்
தப்பித்தல்களை முறியடிக்கும்
பொறிகளைக் காவிக்கொண்டு
00

மீண்டும் மீண்டும் கொல்லும் நினைவுகள்

13 டிசம்பர், 2010

சித்தாந்தன்

காகங்கள் வந்தமரும் மின்சாரக் கம்பிகளின்
சாமாந்தர வெளியில்
எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது
இன்றைய இரவு

காலடிகள் வற்றிய படிக்கட்டுக்களில்
தொலைந்த நண்பனின் காலடியோசை கேட்டபடியிருக்கின்;றது

இன்னும் உலரவில்லை நேற்றைய இரவு பருகிய
மதுக்குவளைகள்
அறையை நிறைத்திருக்கும் சிகரட்டின் மணம்
தீர்ந்து போகாத கதைகளை நினைவூட்டுகின்றது

நிச்சயமின்மையின் பாதையில் அவன் பயணிக்கையில்
அவனிடமும் நம்பிக்கைகள் இருக்கவில்லை
துரத்தப்பட்ட ஒரு சிறுவனைப் போலவேயிருந்தான்

அவனின் பாதைகளில் யாரேனும்
தொடரவில்லை
கைகளால் எடுத்து தன் கண்களை அவன் குத்திக்கொண்டபோது
ஒரு பகலும் ஓராயிரம் இரவுகளும் குருடாகின

மந்தைகள் இல்லாத புல் வெளியில் வெறுமனே
ஒற்றையாக கைத்தடி இருந்தது
திசைகளை நினைவு கூரத்தயங்கும் எவரும்
அதைப் பொருட்படுத்தவில்லை

மேய்ப்பனின் புன்னகையை தான் கண்டதாகக்கூறும்
வழிப் போக்கன் என்னிடம் வர அஞ்சுகின்றான்
அவன் வராதே இருக்கட்டும்
இந்த இரவை நான்
காலியாகக் கிடக்கும் மதுக்குவளைகளுடனும்
சாம்பலில் புதைந்திருக்கும் சிகரட்டின் அடிக்கட்டைகளுடனும்
கழிக்கின்றேன்
அகற்ற முடியா நினைவை உறைந்த படமாக
சுவரில் மாட்டிவைக்க நான் தயங்குகின்றேன்

வேண்டாம் நினைவுகள்
கொல்லப்பட்டவனை மீண்டும் மீண்டும் கொல்லும்
நினைவுகள்

27.01.2010

ஆத்மாநாம்

15 செப்டம்பர், 2010

கொலைக்கும் தற்கொலைக்குமிடையில் உதிரும் சொற்கள்

சித்தாந்தன்

இன்றென் குற்றவுணர்ச்சியை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்
அது நோயினால் துயருறும் குழந்தையாய்
உன் கைகளிற் துடித்தது

நீ அதிர்ந்துதான் போனாய்

அன்பின் சுனையைப் பருகாத
ஒரு மிருகம் நான் என்றாய்
என் புலன்களை மூடி மலைகள்
வளர்ந்ததாய்ச் சொன்னாய்

இதோ பார் என் கைகளை
பழியுணர்ச்சியின் தடையங்களில்லை
கொலை வெறியின் மிரட்டும் பார்வைகளில்லை

நான் கனவுகளின் எல்லைகளுக்கப்பால்
வீழ்ந்துகிடக்கவே விரும்புகின்றேன்

ஆத்மாநாம்
உன் சுய கொலைக் குறிப்பை
காற்றிடம் நீ கையளித்திருக்கலாம்
மரணம்
மாயத் தொட்டியில் மீனாய் அலைகின்றது

கொலைக்கும் தற்கொலைக்குமிடையில்
எழுதப்படாத எண்ணற்ற குறிப்புக்கள்
சிதறிக்கிடக்கின்றன

மரணத்தை
நுளம்பின் கூர்முனையிற் கூட உணர முடிகிறது

இன்றென் குற்றவுணர்ச்சியை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்

சாவு
என் அறை முழுவதும் தேங்கிக்கிடக்கிறது
தற்கொலை செய்யத்தான் யாருமில்லை

நான் கூட என்னைக் கொலைசெய்ய அஞ்சுகின்றேன்
அவசரமாக அறையிலிருந்து வெளியேறிய போது
எடுத்து வந்தேன் உன் கவிதைகளின் தொகுப்பை
உன்னைக் கொலை செய்யும் வரிகள் எதிலும்
உன்னைக் கவிஞன் என அச்சிடப்பட்டிருக்கவிலை

கவிதைக்கும் தற்கொலைக்குமிடையில்
ஏதோவொன்று இருந்துகொண்டுதானிருக்கிறது
உன் தற்கொலையையும்
என் தப்பித்தலையும் நியாயப்படுத்த

துக்கத்தைச் சொல்பவனின் கவிதை

27 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

இப்போது நான் விழித்திருக்கின்றேன்
என் பிடுங்கப்பட்ட மூளையில் விசித்திரமான
முட்செடி நாட்டப்பட்டிருக்கிறது
தயை கூர்ந்து என்னைக் கடப்பவர்கள் அனுதாபம் கொள்ளாதீர்கள்
கொலைக்கருவிகளை விடவும் கூரியன
உங்கள் பார்வைகள்
நீங்களே நிதானிக்க முடியாத இரவை உங்களுக்கு தந்துவிட
விரும்புகின்றேன்
மற்றும் சிறியதான ஒரு துக்கத்தையும் தூக்கத்தையும்

இளமையின் கருகியமணம்
என் பாலிய சித்திரங்களின் மீது
அடர்ந்த வர்ணமாகச் சிதறிக்கிடக்கிறது
புணர்ச்சியின் பின் களற்றி உலரவிட்ட ஆடையாய்
தொங்கவிடப்பட்டிருக்கிறேன் எல்லோர் முன்னும்

மழையின் ஈரித்த திவலைகள்
என் கனவுகளின் சூட்சும அடுக்குகளில் தேங்குகின்றன

நான் ஒரு விறைத்த ஆண்குறி
ஒரு பிளந்த பெண்குறி
இதனைவிட
ஒரு துப்பாக்கி
ஒரு தூக்குக் கயிறு

நீங்கள் கொலைகளைப் பிரகடணப்படுத்துகையில்
நான் கொலையாளியாகவும்
கொலையுண்டவனாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றேன்
இதற்கு மேல் ஒன்றுமில்லை சொல்வதற்கு
வனத்திலிலிருந்து வழி தவறிய விலங்கிடம்
மேலும் சொல்வதற்கு என்னதான் இருக்க முடியும்

உன் இருதயத்தில் கவிந்திருக்கிறது விலக்க முடியாத இருள்

20 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

எண்ணற்ற கால்கள் முளைத்திருக்கின்றன
இந்தச் சுடரிற்கு
ஈரம் வடியும் காற்று உறைந்து பனிக்கட்டியாகியிருக்கிறது

விரைவாய்ப் பறக்கின்றன தொலைவுப் பறவைகள்

நட்பின் கதைகளைப் புறக்கணிப்பவன்
அணிந்திருக்கிறான்
பாதாளச் சிதைவின் முகத்தை

நீ பேசு
முடிச்சுக்களிடப்பட்ட அகாலக் கயிறு
யாரிடமும் இல்லை
எனினும் அவ்வாறு கருதவேண்டியிருக்கிறது

நீ சனங்களைத் தூற்றுகிறாய்
மரணம் முற்றுகையிட்ட வெளியிலிருந்து
தப்பித்தவர்களை வெறுக்கின்றாய்

மேய்ப்பனின் திருநாமம் பூண்ட நீ
சாகசக்காரரின் சதுரங்க ஆட்டத்தின் புதிரை
அவிழ்க்கத் தயங்குகிறாய்

நீயே சொல்
மந்தைகளாய் ஆக்கப்பட்ட சனங்களால்
என்னதான் செய்ய முடியும்
வனாந்தரமெங்கும் நிறைந்துபோயுள்ளது
யுகம் யுகமாய் எழுப்பிய அழுகுரல்

நீ உணரவில்லையா
காலம் சிதைந்து கல்லாயிற்று
கட்டியெழுப்பப்பட்ட மணற்கோபுரம் உடைந்து
பறவைகளையும் மூடிற்று

தீ சூழும் வெறும் வெளியில்
ஒரு குழந்தையின் நொருங்கிய குரல்
பறவைகளையும் துக்கிக்கச் செய்தது

யன்னலினூடாய் யுத்தத்தின் சாகசங்களை
படித்துக் கொண்டிருக்கும் உன்னிடம்
அதன் கோரத்தையும் அவலத்தையும்
ஜீரணிக்க முடிவதில்லை

விசுவாசத்தின் கண்ணாடியில் உன் புன்னகை
சுடரிழந்து தொங்குகிறது

யுத்தச் செய்திகள் உலர்ந்த பத்திரிகைகளில்
நீ தேடிக்கொண்டிருக்கிறாய் சாவுகளை

நீ கொண்டாடும் நிலத்தின் பாளப் பிளவுகள்
காயங்களைச் சேமித்து வைத்திருக்கின்றன

நீ நம்பித்தானாக வேண்டும்
வானத்தைச் தூக்கிச் சென்வர்களே
அதைப் போட்டுடைத்தார்கள் என்பதையும்
பறவைகள் அந்தரித்தபடியே திரிகின்றன

உன் யன்னலை மூடும் இரவை விரட்ட
உன் ஒற்றை மெழுகுதிரியாலாகாது
உன் இருதயத்தின் இருளையும் கூட

ஓளிமங்கும் வட்டங்கள்

10 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

சலனம் முற்றிய மனிதமுகங்கள்
இன்றைய நாட்களை நிறைத்திருக்கின்றன
எப்போதும்
கனவுகளின் இழைகளில் தொங்கும்
சுடரின் திரியை
இழுத்துச் சென்று கொத்துகிறது
ஆட்காட்டிப் பறவை

இரவைப் புணர்ந்த குளிரை
கடித்துக் குதறுகின்றன நாய்கள்

வேண்டாத உரையாடல்களின் உட்புறமாய்
சாவைத் தாங்கிச் சலிப்புற்றவர்களின்
முகங்களின் பின்
ஒளிமங்கும் வட்டங்கள் சூழல்கின்றன

எல்லாவற்றையும் புதைத்தவனின்
பெருத்த வயிறு விஷமூறி வெடித்து
வானமெங்கும் பரவியிருக்கிறது விஷக் காற்று

இரவுகளிலிருந்து அவசர அவசரமாகத்
திரும்பும் மனிதர்கள்
உரசி வீசிய தீக்குச்சிகளிருந்து
புகை கருகி எழுகிறது
உக்கிய சரிரங்களின் மணம்

நினைவுகளைத் திருகி
எறிய முடியாதவனின் குரலில் மிதக்கின்றன
எண்ணற்ற முகங்கள்

எங்கோ
யாருடையதோ அடிவயிற்றில்
பற்றியெரிகிறது நெருப்பு

வலியுணர்தல் -2

03 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

மீந்திருக்கும் சொற்களையும்
மௌனம் தின்று தொலைக்கிறது
ஈரம் கசியும் பால் வெளியில்
இன்னும் பறந்தபடியிருக்கின்றன
இரண்டு பட்டங்கள்
காற்றின் அசைவுகளில் சூழன்று
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றையொன்று முத்தமிடுகின்றன

பாலையாய் எரிகிறது பகல்
புறக்கணிப்பின் உச்சப் பொழுதுகளில்
மணிக்கட்டில் ஊருகிற எறும்பைத்
தட்டுவதைப் போலாகிறது அன்பூறும் கணங்கள்
மோகித்துச் சுடரும் வானத்தின் கீழ்
நிலவைப் புசிக்கிறது இரவு

மூச்சின் அனல் எறிக்கும் தூரம் கூட இல்லை
பாதைகள் தூர்ந்து போயின
சுனைகள் வற்றிவிட்டன
பிணைப்பு நூலின் கடைசி இழையில்
விரல்கள் ஊசலிடுகின்றன
எது மீதமாயிருக்கிறது
நீயும் நானும் பருக

அம்ருதா வரைந்த சிங்கங்களின் புனைவுருக்கள்

13 ஜூலை, 2010


சித்தாந்தன்

நீளமான இரவின் மையத்தில் தலை நீட்டிப்
படுத்திருக்கும் சிங்கங்களைத்
தன் பாலியப் பருவத்திலிருந்து
அம்ருதா வரைந்திருக்கிறாள்

அம்ருதா தன் சிங்கங்களிற்கு
குறிகளை வரைவதில்லை

முன்பனிக் காலத்தில் அவள் வரைந்த
எண்ணற்ற சிங்கங்களும்
புணர்ச்சியைக் கண்டு முகம் சுழிப்பவை

அவளின் நூறாவது சிங்கம்
குறியை வரையக் கேட்டு அடம்பிடித்தபோது
இருநூறாவது தடவை வரைவதற்கிடையில்
குறியை வரையும் நுட்பங்களைக்
கற்று முடிப்பதாகக் கூறினாள்

அம்ருதாவின் வனத்தில்
சிங்கங்களின் கர்ச்சனைகளில்லை
வனத்தின் புதிரும் அடர்வதில்லை

வனங்களைப் புறக்கணிக்கும் சிங்கங்கள்
அவளுக்கு நண்பர்களாயுள்ளன

தன் சூட்சும புத்தியால்
சிங்கங்களின் நகங்களை வெட்டிவிடுகிறாள்
பற்களை பிடுங்கிவிடுகிறாள்

அவள் வனங்களை விட்டு வெளியேறிய
சிங்கங்களின் இராணியாகத் தன்னைப்
பிரகடனப்படுத்தியபடியிருக்கிறாள்

விழிமுட்டும் தூக்கத்தை
அநேகமும் தூங்கியே கழிக்குமவள்
தான் சிங்கங்களை வரைந்த வரைவேட்டை
தலையணைக்கடியில் பத்திரப்படுத்தியிருக்கிறாள்

அம்ருதாவின்
மிருதுவான மூச்சொலியில் தம் பொழுதுகளைத்
தூங்கிக் கழிக்கின்றன சிங்கங்கள்

மண்சிலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறாய்

11 ஜூலை, 2010


சித்தாந்தன்

பிரதிபலிப்புக்களின் கூடமான கலைவெளியில்
இப்போது நீ
யாரின் சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறாய்

சிறகுடைந்த தும்பியொன்றின்
அவலம் மிகும் குரல்
பெயர்ந்தலையும் மரங்களின் கீதமாய்
இன்னும் கேட்கின்றது

நீ மண்சிலைகளை
உடைத்துக் கொண்டேயிருக்கிறாய்
காலபேதம் மறந்த உன்கைகளில்
பிசுபிசுக்கும் இரத்தம்
எனது மண்சிலையினதாய் இருக்கலாமென
அஞ்சுகின்றேன்

சற்றும் அயராத உனதுடலில்
வழியும் வியர்வை
ஒரு நதியாக ஊரத்தொடங்கியிருக்கின்றது

மங்கியுதிரும் பொழுதில்
நீ இப்போது உடைக்கின்ற சிலை உன்னுடையது
பிசுபிசுக்கும் இரத்தமும் உன்னுடையது
ஆனாலும்
கதறியழுதபடி உடைத்தபடியிருக்கிறாய்

கால்களின் கீழ்
உதிர்ந்திருக்கும் உனதுடலின் மண்துகழ்களை
அள்ளிச் செல்லும் யாரோ ஒருவன்
செய்யத் தொடங்கியிருக்கின்றான்
யாரோ எவரினதோ பிரதிபலிப்பான
மண்சிலையை

பெருங்கோயிற் சிதைந்த சிற்பத்தின் வரைபடம்

05 ஜூலை, 2010

சித்தாந்தன்

ஒளிக்குப் புறம்பாக
கட்டி முடிக்கப்பட்ட மண்டபத்தை
சாத்திக் கொண்டிருக்கிறான்
இரவின் சூத்திரதாரி

மண்ணகழ்ந்து வெளியெடுத்த
பெருங்கோயிற் சிதைந்த சிற்பம்
அதன் மூலையில்
சிதிலங்களாகக் குவிக்கப்பட்டிருக்கிறது

முரண்கள் விருட்சங்களாய்
கிளை விரிக்கையில்
மண்டபச் சுவர்களில் மோதிக்
கலைகின்றன புறாக்கள்

மாமிசம் நாறும் வெளியில்
விக்கிரகப் புனைவு விதிகளைக்
கட்டவிழ்க்கிறான் சிற்பி

எல்லாச் சிலைகளிலும்
மிருகங்கள் விழித்துக் கிடக்கின்றன

மந்திரங்களால் ஆக்கப்பட்ட
பெருங்கோயில்
புதையுண்ட காலச்சரிவில்
நிரைநிரையாக முளைக்கின்றன
புத்தம் புதிய விக்கிரகங்கள்

பாதி விழி மூடிய விக்கிரகங்களில்
சாவைச் சூடிய மகா வாக்கியங்கள்

எல்லாக் கதவுகளையும்
சாத்திவிடுங்கள்
புலன் மேய வந்திருக்கிறது
கற்களாலாய காலம்

பெருங்கோயில்
புதையுண்ட மணற்கரையில்
ஓயாப் பெருங்குரலில்
யாரோ கதறியழுகிறார்கள்

நிர்க்கதியாக்கப்பட்ட
கடைசி மனிதனின் குரலாக அதிருக்கலாம்

நன்றி- மறுபாதி (சித்திரை-ஆனி,2010)

செத்தவனின் விம்பமான நான்

26 ஜூன், 2010


சித்தாந்தன்

நான் கனவு காணத் தொடங்கியிருக்கிறேன்
வானத்தின் நிழலாய்
எனது முகம் வியாபித்துக்கிடப்பதாய்

இந்தக் காற்றின் தொடுகையை
முறித்துவிட்டால் போதும்
மூச்சுக் குழாய்கள் வெடித்து
ஆசுவாசமாய் தூங்கிவிடலாம்

காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெரும் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை

முகங்களின் உலகத்தில்
தனித்தலையும் எனது முகத்தை
புராதன மனிதச்சாயல் விழுந்திருப்பதாய்
நண்பன் ஒருவன் சொன்னான்
அப்போதே நம்பியிருக்க வேண்டும்
நான் செத்தவனின் விம்பம் என்பதை

தலைக்குப் பின்புறம்
வலியெடுத்து மூளையும் குழம்பி
சாவுக் கயிற்று வலையில்
எல்லாக் கற்பனைகளும் மொய்த்திருக்க
நிழலெனத் தொடரும்
காலவானத்தின் உச்சியிலிருந்து
சூரியன் சிரிக்கிறது

சந்நதம்

16 ஜூன், 2010


சித்தாந்தன்

நிதானம் தப்பிய மழையின்
பேரிரைச்சலுடன் சந்நதம் நிகழ்கிறது

கோடுகளால் கிறுக்கப்பட்ட முகத்துடன்
உங்கள் முன் மண்டியிட்டிருக்கின்றேன்
சுடுகாட்டின் சாம்பல்
என்மீது படிந்திருக்கிறது

ஈனத்துடன் ஊர்ந்தூர்ந்து
கடலிலிருந்து கரையேறுகிறது
சிறு புழுவளவான சூரியன்

உங்கள் கனமேறிய கால்களின் ஒலி
விரட்டிச் சென்று குதறும்
என் தனிமைக்கு
காலபேதமும் ஜீவனுமில்லை
பயணவெளியின் காற்றில்
அச்சத்தின் பேருருவாக விழுந்து புலம்புகிறது

என் நண்பனின் ஒரு நூறு கவிதைகளிலும்
மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்
நீங்கள்
அவனைக் கொன்று களித்திருந்த நாளில்
விலங்குகள் மாட்டப்பட்ட வார்த்தைகள்
காற்றில் சுழன்றடித்தன

எல்லாச் சந்நதங்களின் முடிவிலும்
காற்றின் ரகசியப் புலன்களில்
சீழ் கட்டி மணக்கும் மரணங்களின் வலி

பிறகு
மிக இயல்பான புன்னகையுடன்
தேநீர் பருகுவீர்கள்
கொலையுண்டவனின் கதறலையும் கெஞ்சலையும்
வேடிக்கைச் சொற்களால் பேசுவீர்கள்

கொலைக் கருவிகளின் முனைக்கத்திகளால்
குற்றப்பட்டிருக்கின்றன எமது வார்த்தைகள்

பனி பெய்தபடியிருக்கும் இந்த ராத்திரியில்
என் மூச்சில் அலைந்தசைகிற
இந்த கைவிளக்குச் சுடரினடியில்
கடவுளுக்காக என் கதறல்கள் முழுவதையும்
கொட்டிவைத்திருக்கிறேன்
என் கடவுளுக்காக

நன்றி- பொங்குதமிழ்

பூட்டப்பட்டிருக்கும் வெளிகள்

14 ஜூன், 2010

சித்தாந்தன்

அநேகமும் நான் செல்லும் வீடுகள்
பூட்டியேயிருக்கின்றன

கதவுகளுக்குப் பின்னால் உதிர்ந்திருக்கும்
சம்பாஷனைகள்
கதவினைத் தட்டும்போது சிதறிக்கலைகின்றன

சில வீடுகளுக்குள்ளிருந்து
வீணையினதோ வயலினினதோ இசை
மாயமாய்க் கசிந்துகொண்டேயிருக்கின்றன

எல்லா வீடுகளின் முற்றங்களிலும்
காற்றில் உலராமலிருக்கின்றன பாதச்சுவடுகள்

அவசரத்தில் காலுதறிய செருப்புக்கள்
கலைந்துகிடக்கின்றன படிக்கட்டுகளில்

உட்புறமாகத் பூட்டப்பட்ட
கதவுகளின் அதிர்வொலி துக்கத்தை வரவழைக்கிறது

உடமையாளர்களைத் தொலைத்த
வீடுகளின் முன்
தனித்திருக்கின்றன திறப்புக்கோர்வைகள்
ஆயினும் அவை
கதவுகளுக்குப் பொருந்திவருவதில்லை

திறப்புத் துவாரத்தினூடு
கண் சொருகிப் பார்க்கையில்
எங்கிருந்தோ வந்துவிடுகிறது பதட்டம்

பலமுறையும்
என் வீட்டினுள்ளேயே பூட்டப்பட்டிருக்கின்றன
என்னுடையதான வீடுகள்

நன்றி - உயிர்நிழல்

அந்திமத்தின் சாபம்

10 ஜூன், 2010

சித்தாந்தன்

பூதங்களை வரைபவனின் கனவுகளுக்குள்
நுழைந்துகொண்டன தேவதைகள்

கடற்கரையில் மணல்வீடு கட்டிய அவன்
தேவதைகளுக்கான அறைகளை
வர்ணமடித்துச் செப்பனிட்டான்

ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக
வடிவமைக்கப்பட்ட குளியலறைகளுக்குள்ளும்
படுக்கையறைகளுக்குள்ளும்
உள்ளாடைகளைக் காயவிடும்
கொடிகளைக் கட்டினான்

அந்திமத்தில் வந்திறங்கிய தேவதைகள்
வானளவு அறைகளை அவனிடம் கேட்டன

அவன் கைகளை அகட்டி
பூதங்களைப் போல் விரிந்த வானங்களை
வரைந்து காட்டினான்

திருப்தியுறாத தேவதைகள்
அவனை மலடாகும்படி சாபமிட்டன

அவனின் மணல் வீட்டை
இழுத்துச் சென்றுவிட்டது அலை

சபிக்கப்பட்ட அவனின் குறியினுள்
இரைந்துகொண்டிருக்கிறது கடல்

அந்திமத்தின் வர்ணங்களில்
கரைந்துருகுகிறது வானம்

நன்றி- உயிர் நிழல்

புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்

07 ஜூன், 2010

சித்தாந்தன்

என்னுடலின் நெளிவுகளுக்கிடையில்
அவிழ்கிறது ஆடை
புலன்களைத் திறந்தவனின் நிர்வாணத்தை
காற்றின் கண்கள் மேய்கின்றன

கறுத்த இலைகளுடன் சடைத்திருக்கும்
பெரு மரத்தின் கீழ்
விக்கிரகமாய் இறுகியுள்ள கடவுளின் சிலை மேல்
சிறுநீர் கழிக்கும் நாய்
புனிதத்தின் அதியுன்னத இசையை வேட்டையாடுகிறது

பாதையெல்லாம்
தங்கள் முகங்களின் நிர்வாணத்தை
முகமூடிகளால் மறைத்திருக்கும் மனிதரின்
வார்த்தைகளின் அசிங்கம்
உரோமக் கால்களில் எச்சிலாய் வழிகிறது

எதையும் ஜீரணிக்க முடியாது
வீடு திரும்பும் என்னிடமிருந்து
ஆடையை உருவிப் போகிறது எதிர் வீட்டு நாய்

நான் நாயாகவும்
நாய் நானாகவுமாக இருக்கும்
மிகப்பிந்திய நிமிடங்களில்
நாய்களின் அதியுன்னத இசையை
என் புலன்களால் வேட்டையாடத் தொடங்கினேன்

நாய்களைப் போலவே அலைகிறது
என் அதியுன்னத இசை

00

சந்திரபோஸ் சுதாகர்- நினைவுக் குறிப்பு

14 ஏப்ரல், 2010


நெருப்பின் நிழலில் சுடர்கிளரக்கிடக்கிறது
எந்த வார்த்தையுமற்ற மனசு

சித்தாந்தன்

ந்திரபோஸ் சுதாகர் கொலைசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளிலும் ஈழத்தமிழர்களின் வாழ்விலும் அரசியலிலும் பல மாறுதல்களும் தோல்விகளும் ஏற்பட்டிருக்கின்றன. சுதாகர் 90களில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். சமகாலத்தின் நிலைப்பாடுகளையும் பின்னடைவுகளையும் கூர்ந்து அவதானித்தவர். கவிஞன் என்ற அடையாளத்திற்கு அப்பாலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தீவிரமாக இயங்கியவர். தன்னை நோக்கி அதிகாரத்தின் பாஸிச கரங்கள் இருப்பதை உணர்ந்திருந்த போதும் அதிகாரங்களுக்கு எதிராக தன் குரலைப் படைப்புக்களில் பதிவு செய்திருக்கின்றார்.மரணம் என்பது இயல்பான ஒன்று என்பைதை நம்பமறுக்க வைக்கும் ஒரு காலத்தில் சுதாகரின் மரணம் நிகழ்ந்தது. இலங்கை அரசியலிலும் போர்புரி காலங்களிலும் இந்தக் காலம் மிகக் கொடூரமானது என்பதை யாருமே மறந்துவிட முடியாது.
துப்பாக்கிகளால் அச்சுறுத்தப்பட்டிருந்த அந்த நாட்களில் நாங்கள் எத்தனைபேரைத்தான் இழந்துவிட்டோம். அவர்களாலும் இவர்களாலும் இன்னும் இனந்தெரியாதவர்களாலும் என எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. யுத்தத்தின் மீதிருந்த மாயை மக்களிடமிருந்து அகன்றுவிட்டபோதும் போர்புரிபவர்கள் மக்களை யுத்தத்தை நோக்கியே இழுத்துக்கொண்டிருந்தனர். யுத்தத்தின் பொய்யுருவும் அதன் பிம்பமும் அவர்களால் புனிதப் போர்வைகளால் போர்த்தப்பட்டன. யுத்தம் அதிகாரங்களை நிலைநாட்டவும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவும் நடாத்தப்பட்டன.மக்கள் யுத்தத்தின்போதும் அவலங்களையும் வலிகளையுமே சந்தித்தனர். யுத்தம் முடிந்துவிட்டதாய் நம்பப்படும் காலத்திலும் அவலங்களையே எதிர்கொள்கின்றனர். உண்மையில் யுத்தம் மக்களையே குறிவைக்கின்றது. அவர்களின் வாழ்வாதாரங்களையே சூறையாடுகின்றது. அதிகாரத்திலிருப்பவர்கள் மக்களை யுத்தத்தை நோக்கியே துரத்துகின்றனர்.
சந்திரபோஸ் சுதாகரின் கவிதைகளினை வாசிப்பவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவர் அதிகாரங்களை வெறுக்கின்றார். அதனால்த்தான் அதிகாரங்களை நோக்கி குரல் எழுப்புகின்றார்.

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான
நமது இதயங்களைச்
சிலுவையிலறைவதா? என சுதாகர் ‘சிலுவைச் சரித்திரம்’ என்ற கவிதையில் எழுதியிருக்கின்றார்.

எப்போதும் அதிகாரத்தை நிலைநாட்டுபவர்;கள் தங்களை நோக்கி நீளும் விரல்களின் சொந்தக்காரர்;களை வாழ அனுமதிப்பதிப்பதில்லை. ஈழப்போராட்டம் தொடங்கி முப்பதாண்டுகள் முடிந்திருக்கின்ற நிலையில் கொல்லப்பட்ட கவிஞர்கள் பத்திரிகையாளர்;கள் எத்தனை பேர் என்கின்ற பட்டியல் சுருக்கமானதில்லை.யுத்தத்தை புகழுகின்ற யுத்தம் புரிவோரைத் துதிபாடுகின்ற யுத்தத்தை ஊக்குவிக்கின்றவர்களை வீரர்களாகவும் மாறாக யுத்தம் மக்களை வதைப்பதை எழுதுகின்றவர்கள் துரோகிகளாகவும் கருதும் நிலை காணப்பட்டு வந்திருக்கின்றது. இதில் முரண் என்னவென்றால் யுத்தத்தைப்புரிந்தவர்;கள் ஜனநாயகம் பற்றிப்பேசுவதுதான்.
சுதாகரின் ஆநேக கவிதைகளும் அகக் காட்சித் தரிசிப்பக்குரியன. உள்ளார்த்தமான மொழிதலும் படிமச் செறிவும் மிக்கவை. பிற ஈழக் கவிஞர்களிடம் காணக்கிடைக்காத உள்முகத்தரிசனத்தை சுதாகரின் கவிதைகளில் காணமுடியும். கருணாகரன் குறிப்பிடுவதைப்போல “90களில் கவிதை எழுதத் தொடங்கியவர்களில் சுதாகரளவுக்கு மொழியை பயன்படுத்தியவர்;கள் எவருமில்லை” என்றே சொல்ல வேண்டும். சுதாகரின் கவிதைகளின் இயங்குநிலை போர்க்கால அனுபவங்களின் திரட்சியிலிருந்தே தொடங்குகின்றது. அவர் சந்தித்த அனுபவங்கள் உச்சமான சாத்தியங்களை அவரின் கவிதைகளில் ஏற்படுத்தின.
சுதாகர் 2001 அம் ஆண்டில் ஒரு முறை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சில தினங்களின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களின் பின் அவரின் காற்பாதங்கள் பிளந்து பிளந்து நிணம் வழிந்துகொண்டிருந்தது. தனக்கு நேர்ந்த சித்திரவதைகளின் வலியை அவர் என்னோடு பகிர்ந்திருக்கின்றார். அதன் பின்னர்தான் அவரின் நிலம் சஞ்சிகையின் மூன்றாவது இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரிய தலையங்கத்தை “சித்திர வதைகளுக்கும் கைதுகளுக்கும் எதிராக…” என்ற தலைப்பில் எழுதினார். அதில்ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை. இவை குறித்த கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. எனினும் படைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கவிஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தொடர்ந்தும் படைப்பாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். கவிஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவற்றிற்கெதிராக மீண்டும் மீண்டும் குரலெழுப்பவும் போராடவம் வேண்டிய நிலைக்கு ஊடகத்துறையிலும் படைப்புத்துறையிலும் இயங்கிவரும் சகலரும் முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நிலம் சஞ்சியை தொடர்ச்சியாக காத்திரமான கவிதைக் காலாண்டிதழாகக் கொண்டு வரவேண்டுமெனவே சுதாகர் விரும்பினார். எனினும் தொடர்ச்சியாக இதழ்களை அவரால் கொண்டுவர முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களை அவர்; கூறினார். அதில் முக்கியமானது பொருளாதார நிலைதான். ஒரு கவிஞனாக மட்டுமன்றி பத்திரிகையாளனாகவும் சிறுகதையாளனாகவும் இதழ் வடிவமைப்பாளனாகவும் விமர்சகனாகவும் என பல தளங்களில் சுதாகரின் இயங்குதளமிருந்தது. உயிர்நிழல் என்ற பெயரில் இரு பத்திரிகையினைத் தொடங்கும் ஏற்பாட்டிலும் சுதாகர் ஈடுபட்டிருந்தார். அதைப் பதிவு செய்வதிலுள்ள சிரமங்களை சில தடவைகள் என்னோடு பகிர்ந்திருக்கின்றார்.
சுதாகரின் மரணத்தின் ஓராண்டு நினைவாக அவரின் மனைவியினால் சுதாகரின் சில கவிதைகள் தொகுக்கப்பட்டு “கனவுகளின் அழுகையொலி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தொகுப்பில் தவறுதலாக வேறு சிலரின் கவிதைகள் சுதாகரின் கவிதைகளாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. சுதாகர் நிலம் இதழுக்காக பிறரிடமிருந்து பெற்ற கவிதைகளே இவ்வாறு தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் மரணத்தின் நினைவுகூறுதலுக்காக கல்வெட்டுக்கள் அச்சிடப்படும் சூழலில் இத்தொகுப்பின் வெளியீடு மிகவும் முக்கியமானது.
சுதாகரின் கவிதைகளும் பிற படைப்புக்களும் முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும். தன் காலத்தை தன் படைப்புக்களுக்கூடாக வெளிப்படுத்தும் படைப்புக்களவை. இன்று யுத்தம் முடிந்து விட்ட சூழ்நிலையில் போர்க்கால இலக்கியங்கள் என்னத்தைச் சாதித்துவிட்டன என்ற கேள்வியைச் சில புத்திஜீவிகள் முன்வைக்கின்றனர். உண்மையில் போர்க்காலப் படைப்புக்களின் பெறுமானத்தை விளங்கிக் கொள்ளாத சுயலாபங்களை எதிர்பார்க்கின்ற வணிகநிலைப்பட்ட படைப்புக்களை பிரசவிக்கின்றவர்களிடமிருந்து இத்தகைய கேள்விகள் எழுவதில் வியப்பில்லைத்தான். தம்மை முன்னிலைப்படுத்தி தங்களுக்குள் விழாக்களையும் கௌரவிப்புக்களையும் மேற்கொள்வர்களின் படைப்புக்கள் மீதுதான் இத்தகு கேள்விகளை முன்வைக்க வேண்டும். போர்க்காலப் படைப்புக்கள் என்பவை வெறுமனே போரை ஊக்குவிக்கின்ற போரிடுவோரை புகழுகின்ற இலக்கியங்களல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈழத்தின் போர்க்காலத்தில் வெளிவந்த படைப்புக்களில் பலவும் போர்க்காலத்தின் நெருக்கடியையும் அவலங்களையும் பதிவுசெய்திருக்கின்றன. எனவே ஒற்றைப்படையாக போர்க்கால படைப்புக்கள் தோற்றுவிட்டன என புலம்பித்திரிபவர்களின் பின்னுள்ள அதிகாரங்களும் அரசியல் நிலைப்பாடும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டடியவை. சுதாகர் எந்த அதிகாரத்தின் நிழலிலும் ஒதுங்கிக்கொண்டவரல்ல. எந்தக் கருத்துக்களின் பின்னும் ஈர்க்கப்பட்டு அலைந்தவரல்ல. தனக்கான கருத்துநிலைகளை அவர் கொண்டிருந்தார். அதன் வழியில் தன்னைப் பிரக்ஞை பூர்வமாக ஈடுபடுத்திச் செயற்பட்டார். சுதாகரின் படைப்புக்கள் அப்பட்டமாக போரை விமர்ச்சிக்கின்றன. போரிடுபவர்;கள் யாராகவிருந்தாலும் அவர்;கள் மீது கேள்விகளை எழுப்புகின்றன. அவர்களைக் கண்டிக்கின்றன. போர்க்காலத்தின் மனச்சாட்சியாகவும் பதிவுகளாகவும் விளங்குகின்றன. தன்சுயங்களில் நம்பிக்கை கொள்ளும் மனிதனாக அவரிருந்தார் என்பது மிகவும் முக்கியமானது.
‘சுயம்’ என்கின்ற கவிதையில்
என்னைப் பேச விடுங்கள்
உங்களின்
கூக்குரல்களால்
எனது
காயங்கள் ஆழமாக் கிழிபடுகின்றன
எனது
குரல் உங்களின் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச்
சிதைகிறது வேண்டாம், நான் என்னைப் போலவே இருக்கவிரும்புகின்றேன் எப்போதும் …………………………………... …………………………………… ……………………………………
எனது
உடைந்த குரலில் நானும் பாட விரும்புகின்றேன்
அன்பு
நிறைந்த துயரப் பாடல்களை என எழுதியிருக்கின்றார்.

அதிகாரத்தின் பின்னால் மறைந்துள்ள கைகளும் கத்திகளும் துப்பாக்கிகளும் கதியற்றுப் போயுள்ள எண்ணற்ற மனிதர்களின் துயரங்களை எழுதிய கவிஞனைத் தின்றிருக்கின்றன. சுதாகரின் மரணத்தின் மிகக்குரூரம் அவர் அவரின் மகனின் முன்னிலையில் கொல்லப்பட்டதுதான். சுதாகர் தன் மகனில் அளவற்ற பாசமிக்கவர். கொலையாளிகளின் கைகளுக்கும் ஆயுதங்களுக்கும் ஒரு தந்தையின் பரிவையோ பாசத்தையோ புரிந்து கொள்ளும் வலிமையிருந்திருக்க வாய்ப்பில்லைதான். கொலைகளைச் சாதாரண நிகழ்வுகளாக்கி அதைச்செய்பவர்களின் சாகசங்களை விதந்து போற்றுகின்ற சூழலில் ஒரு கவிஞனின் மரணம் அதுவும் எந்த அமைப்புக்களையோ அதிகாரவர்க்கத்தையோ சார்ந்து செயற்படாத ஒரு கவிஞனின் மரணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்.
o

வலியுணர்தல்-1

08 ஏப்ரல், 2010

சித்தாந்தன்
.........................................................................

சரி செய்யப்படாத பிரச்சினைகளால்
நிறைந்திருக்கும் அறையில்
நீயும் நானும் தனித்திருக்கின்றோம்

புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலைக்கண்ணாடி
பலமுறையும் புறக்கணிக்கிறது என் விம்பத்தை

முழுமையும் சிதறிய குளிர் நீர்
ஆவியாகத் தொடங்கிவிட்டது
உஷ்ணமான மூச்சால் நிறைகிறது அறை

நீ சூசகமாய்த் தவிர்க்கும்
என்னுடலின் தவிப்பைத் தின்று தொலைக்கின்றன
சுவரில் புணரும் பல்லிகள்

உனது ஆழ்ந்த உறக்கத்தின் மூச்சொலி
துரத்திச் செல்கிறது
விடுபட்ட நாட்களின் வார்த்தைகளை

அறையை மூடியிருக்கிறோம் நாம்
அல்லது
நம்மை மூடியிருக்கிறது அறை

சாவித் துவாரத்தின் வழி
வெளியேறிச் செல்கிறது காற்று

புணர்ந்து களைத்து நகர்ந்த பல்லிகளின்
வெறுமையினிடத்தில்
தெறித்து வழிகிறதென் சுக்கிலம்

புறக்கணிக்கப்பட்டவர்களின் முறைப்பாடு

12 மார்ச், 2010

சித்தாந்தான்
................................................................

ஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி
இசையை மூழ்கடிக்கிறது
அதன் கதவுகளை மூடி
சுரங்களை இருளடையச் செய்கிறது


பூர்வத்தின் அதிபுனைவுக் கதைகளை
இசையாக வாசிப்பவர்கள்
பிணங்களைப் புணருகிறார்கள்
நிணத்தைப் பருகுகிறார்கள்
மலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்
உண்மையிலவர்கள்
காற்றின் நறுமணத்தை முகர்வதில்லை

நண்பனே
இலைகளாயும் கனிகளாயும்
உதிர்ந்துள்ள
உன்னையும் என்னையும் பற்றி
இசையின் துளியாக யாரும் பேசவில்லை
மலைகளில் உறைந்திருக்கிறது சரித்திரம்
சூரியனோ
பல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது

நம்மில் யார்
காலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்
ஆழ்வேர்ச் சுனையைத் திறப்பது

ஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை
ஒரு வேளை உணவை பாதைகளை
குழந்தைகளுக்கான தாலாட்டை
நிலாவெழும் வானத்தை
விதியென முள்வலைக்கு இரையாக்கிவிட்டு
மறுக்கப்பட்ட சொற்களின் வலியறியாது
மனிதர்கள் அலைகிறார்கள்

நண்பனே
கடவுளின் பானத்தில் சிதறிய துளியை
அவரின் உணவின் பருக்கையை
நீயோ நானோ உண்ணவில்லையாயினும்
சரித்திரம் உண்மையைத் தின்றுவிட்டது

வானம் விரியும் மையத்தில்
அலகு குத்தும் பறவை
சரித்திரத்தைக் குருதியென உறிஞ்சுகிறது
தாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது

நன்றி-எதுவரை (பெப்- மார்ச் 2010)

தூர்ந்துபோன சுனையூற்றின் அடியில் உக்கியிருக்கும் புன்னகை

28 பிப்ரவரி, 2010

சித்தாந்தான்
........................................................................

திறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை
நீயோ புறக்கணித்துத் திரும்புகின்றாய்

யன்னல் கண்ணாடிகள் உடைந்து
சில்லுகளாய்ச் சிதறியிருக்கும் வீட்டின்
உட்புறமாய்
இன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை

எதற்காக
என் கைகளை விடுவித்தாய்
புழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்
தேகத்தில்

மனந்திறக்காத வீட்டின் வரைபடத்தில்
தொங்கும் தூக்குக் கயிற்றில்
சுருக்கிடப்பட்டிருப்பது
நீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்

பருதி தாண்டாத சில பொழுதுகளை
சுமந்திருந்தோம் தோள்களில்

முடிவற்ற பேருந்துப் பிரயாணத்தில்
யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த
என்முகத்தல் அறைந்த காற்று
பரிசுத்தமற்ற மனத்தின் இழைகள்
அறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது

நீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை
கருணையின் கடலளவு வலியை

நான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்
புன்னகை செய்கிறேன்
என் தெருவில் நடந்து செல்கிறது
யாரோ வளர்க்கும் நாய்

நன்றி-எதுவரை (பெப்- மார்ச் 2010)

பெயரும் விம்பவெளி

04 பிப்ரவரி, 2010

சித்தாந்தன்
...............................................................
எனது கனவை
ஒரு பூச்சியின் சிறகிலிருந்து அவிழ்க்கின்றேன்
யார்யாரினதோ வீடுகளுக்குள்ளிருந்து
பெயர்ந்து வந்த நிலைக்கண்ணாடிகள் சூழ்ந்த
இந்த மாயவெளியில்
சிதிலமான என் மனதின் விம்பத்தை
கோடிமுறையும் கண்டு சலிப்படைகின்றேன்

பிறாண்டும் நகங்களோடுஒரு காலம்
என் கன்னத்தில் முத்தமென
பொய்யுருக்கொண்டு சிதறுகிறது
காயங்களின் மீது பெய்யும் மழையோ
வலியாய்ப் பெருகியோடுகிறது

கண்ணாடி வெளி முழுவதிலும்
காற்றின்; அலையும் சுவடுகள்

நிலைமறுக்கும் சகுணங்களை நிகழ்த்தி
விலகும் எல்லா முகங்களையும் கடந்து
வீடு திரும்பிப் படுக்கையில் சரியும் தருணம்
ஆறிப்போன மழையின் தூறலாய்
காதலின் குளிர்மை

கதவண்டை அசையும் நிழலுருக்களில்
குரோதங்களின் மனப்பிரதிமைகள்

எனதறையின் நிலைக்கண்ணாடிக்கும்
எனக்குமிடையில்
பெயரறியாத மனிதர்களின் மனச்சிதறல்கள்
பல்லுருவாகி விரிகையில்
கண்ணாடியிலிருந்து இறங்கி
வெளியேறத் தொடங்கிவிடும் என் விம்பம்

சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்

29 ஜனவரி, 2010

சித்தாந்தன்
.........................................................
ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி


துவைத்துக் காயவிட்ட சட்டைப் பையினுள்
நனைந்திருந்த கடதாசித்துண்டில்
எவனோ ஒருவனின்
மரணம் பற்றிய வாக்குமூலம் எழுதப்பட்டிருந்தது

காலையில் புறப்பட்டு
மாலையில் என் பிணத்தை நானே காவியபடி
வீடு திரும்புகிறேன்

எதிர்பாராத யாரோ ஒருவனின் வெறித்த பார்வையில்
நள்ளிரவு நாய்களின் குரைப்பில்
நிச்சயிக்க முடியாத் தருணத்தில்
ஏதோ ஒன்று உடைந்து சிதறுகையில்
உறக்கத்தில் யாரேனும் தட்டி எழுப்புகையில்
பலமுறையும்
நான் கொல்லப்பட்டு விடுகிறேன்

மரணங்கள் அச்சிடப்பட்ட பத்திரிகைகளில்
இரத்தத்தின் மணம் வீசுகிறது

எல்லோருடைய சொற்களுக்குள்ளும்
ஓளிந்துகிடக்கிறது மரணம்
எனது சொற்களில்
எனக்கான மரணம் சொருகப்பட்டிருக்கிறது

இப்போதும்
நான் படித்து மூடிவைத்த
புத்தகத்திலிருந்து
மரணத்தின் மொச்சை அடிக்கிறது

பிணக்காட்டிலிருந்து திரும்பும் அரசன்

10 ஜனவரி, 2010

சித்தாந்தன்
....................................................
தொண்டை கிழியக் கத்தி ஓயந்தவன்
வந்திருக்கிறான் சபைக்கு
சன்னங்களாலான அவன் குரலில்
பிணங்கள் மணக்கின்றன

ஏக தொனியில் கட்டளையிட்டவனின்
முன்னால்
புலன்கள் செத்த மனிதர்கள் முண்டியடிக்கிறார்கள்
சாவுகளால் வனையப்பட்ட
மட்பாண்டத்தின் வாய்வழியாக
நுரைத்தெழுகின்றன கனவுகள்

பிச்சை கேட்பவனின் முகத்தை அணிந்தபடி
வந்திருக்கின்றான் தெருவுக்கு
கபாலங்களாலான மாலையில்
பூக்களைச் சூடியிருக்கிறான்

கனிவைச் சாயமாகத் தடவிய
வாக்குறுதிகள் மரங்களாய் வளர்கின்றன
வாய்பிளந்து காத்திருக்கின்றனர் மனிதர்

கட்டளைகளால் நிரம்பும் அவன் மூளையில்
முளையிடுகின்றன எண்ணற்ற பொய்கள்

அழிவுகளைப் பதட்டமில்லாமல்
பார்த்திருந்த நாட்களுக்கு
தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்

செவிகள் யாவும்
அவனை நோக்கிக் குவிந்திருக்கின்றன
தோரணங்கள் தொங்கும் வீதிகளில்
கபாலத்தைத் தொலைத்த மனிதருக்காக
கொட்டுகிறான் புன்னகைகளை

தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்
மட்பாண்டத்தில்
நோதித்து நாறுகின்றன
பழக்கப்பட்ட வாக்குறுதிகள்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்