சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மறுபாதி-கவிதைக்கான காலாண்டிதழ்

19 ஆகஸ்ட், 2011

தாமதமும் சில விளக்கங்களும்

சித்தாந்தன்

‘மறுபாதி’-கவிதைக்கான காலாண்டிதழ்- இது வரை ஐந்து இதழ்கள் வெளிவந்துள்ளன.ஐந்தாவது இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக கொண்டுவந்திருந்தோம்.

ஒரு இதழைத் தொடர்ந்து வெளிக் கொண்டுவருவதிலுள்ள அனைத்து நெருக்கடிகளையும் சந்தித்தோம். முதல் இரு இதழ்களிலும் இருந்த நிதி ரீதியிலான நெருக்கடியை மூன்றாவது இதழில் கடந்தோம். தொடர்ச்சியாக இதழைக் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. ஐந்தாவது இதழ் வேலை நடந்து கொண்டிருந்த போது நாம் பதிப்புச் செய்யும் அச்சகம் மூடப்பட்டது. இதனால் இதழை கொண்டுவருவதில் தாமதங்களைச் சந்தித்த போதும் அதனை வெளிக்கொணர்ந்தோம்.

‘மறுபாதி’யை நாம் கொண்டு வருவதற்கான பிரதான நோக்கம் நவீன கவிதை சார்ந்த உரையாடலை வரிந்த தளத்தில் நிகழ்த்த வேண்டும் என்பதே. ஆயினும் அது முழுமையான அளவுக்கு சாத்தியமில்லாது போய்விட்டது. நேரிலே கவிதைகள் சம்மந்தமாகவும் இதழ் சம்மந்தமாகவும் விமர்சனம் செய்பவர்கள் அதனை எழுத்துவடிவாகத் தருவதில் பின்னடித்தார்கள். மூத்த படைப்பாளிகளில் பலரும் குறைகளைச் சொல்பவர்களாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து இதழில் பங்களிக்க மறுத்தனர். இந்தப் பின்னணியில் எம்மால் முடிந்த அளவுக்கு முயற்சித்து படைப்புக்களைத் திரட்டி இதழ்களைக் கொண்டுவந்தோம். பல படைப்பாளிகள் படைப்புக்களைத் தருவதாக கூறி காலங்கடத்தினார்கள். அவர்களுக்குத் தொலைபேசி எடுத்த பணமும் செலவிட்ட நேரமும் இன்னொரு இதழைக் கொண்டுவருவதற்குப் போதுமானதாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். ஐந்தாவது இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. பல படைப்பாளிகளுடன் தொடர்பு கொண்டு மொழி பெயர்ப்புக் கவிதைகளையும் மொழி பெயர்ப்பு சம்மந்தமான கட்டுரைகளையும் பெற்றோம். பலர் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். சிலரிடம் படைப்புக்களுக்காக காத்திருக்க வேண்டியுமிருந்தது. ஆயினும் அவர்களின் பங்களிப்பு எமக்குப் பெரிதும் உதவியது.

உண்மையில் ‘மறுபாதி’யை கொண்டுவருவதில் எமக்கு எந்தவகையிலும் நிதிரீதியான பிரச்சினை இப்பொழுது இல்லை. படைப்புக்கள்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஈழத்திலிருந்து வருகின்ற பிற இதழ்களைப் போல எம்மாலும் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியும். ஆனால் நாம் இதழின் காத்திரத்தையே முதன்மைப்படுத்துகின்றோம். கவிதை பற்றிய உரையாடலை ஓரளவுக்கேனும் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றோம். கவிதை எழுதும் அல்லது கவிதைசார்ந்த படைப்புக்களை எழுதும் அனைத்துப்; படைப்பாளிகளுக்கும் அவர்களின் படைப்பு வெளிவந்த இதழ்களை இலவசமாகவே அனுப்பி வருகின்றோம். இதனை அடிப்படை அறமாக நாங்கள் கருதுகின்றோம். உண்மையில் மறுபாதியின் விலை 30.00 ரூபாய் மட்டுமே ஆனால் இதழை பிற இடங்களுக்கு அனுப்பும் போது இதழின் விலையிலும் அதிகமான செலவுக்கே அனுப்புகின்றோம். ஆனால் இங்கிருந்து வெளிவரும் இதழ்கள் சில படைப்பாளிகளுக்குரிய இதழ்களை இலவசமாக கொடுப்பதில்லை. படைப்பையும் கொடுத்து படைப்பு வெளிவந்த இதழையும் பணத்துக்கே வாங்கி படிக்க வேண்டிய நிலைதானிருக்கின்றது. ஒரு படைப்பாளி படைப்பை எழுதுவதற்கும் அதனை சஞ்சிகைகளுக்கு அனுப்புவதற்கும் ஏற்படும் செலவை சஞ்சிகைகள் நடத்துவோர் சிலர் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. பல படைப்பாளிகள் எம்மோடு இது பற்றிக் கதைத்துக் குறைப்பட்டிருக்கின்றார்கள். நண்பர் யேசுராசா அவர்கள் ‘தெரிதல்’ என்ற இதழை நடத்திய போது அதில் எழுதுவோருக்கு பிரதியை இலவசமாக வழங்கியதோடு ஒரு தொகைப் பணத்தினையும் கொடுத்திருந்தார். இது எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது. ஆதலால் பணம் எங்களால் கொடுக்க முடியாதவிடத்தும் படைப்பாளிகளுக்குரிய இதழ்களை இலவசமாக அனுப்பினோம்.

மறுபாதியின் சிறப்பிதழ் வெளிவந்து ஒரு வருடமாகிவிட்டது. நண்பர்கள் பலரும் இதழின் தாமதம் பற்றிக் கேட்கின்றார்கள். அதற்கான பிரதான காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று படைப்புக்கள்தான். இங்கிருந்து எழுதுகின்ற கவிஞர்களில் சிலர் இங்கிருந்து வெளிவரும் இதழ்களுக்கு படைப்புக்களை அனுப்புவதில்லை. தமிழக, புலம் பெயர் சஞ்சிகைகளில் இவர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கின்றார். அவர்களிடம் மீளமீளத் தொடர்புகொண்டு கேட்க வேண்டிய நிலையே இருக்கின்றது. அவர்கள் பங்களிக்காமைக்கான காரணம் என்ன என்பது புரியாமலிருக்கின்றது. உண்மையில் தாங்கள் வாழும் நிலத்திலிருந்து வெளிவரும் இதழ்களின் தொடர்ச்சியான வருகைக்கு பங்களிப்பது என்பது தார்மீகமானது என நினைக்கின்றேன். தம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தம்மோடு வாழும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானது. ஆனால் பலரும் தமிழ்நாட்டு, புலம் பெயர் சஞ்சிகைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக படைப்பை அனுப்பித் தங்களுக்கான அங்கிகாரத்தை அல்லது பிரபல்யத்தை தேட முனைகின்றனர் என்று நம் நண்பர்கள் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை போலத்தான் தோன்றுகின்றது. கருத்துநிலை சார்ந்து மாறுபாடுகள் இருப்பின் அதை தெரிவிப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் எந்தக் காரணங்களையும் சொல்லாது இவ்வாறு புறக்கணிப்பது வேதனைக்குரியதே.

ஐந்து இதழ்கள் வரையிலும் மீள மீள நினைப்பு+ட்டித்தான் பலரிடம் படைப்புக்களைப் பெற முடிந்தது. இந்த நிலையை தொடர்ந்து பின்பற்ற முடியுமா? ஒருவருக்கு எத்தனை முறை தொலைபேசி எடுப்பது,மின்னஞ்சல் அனுப்புவது. இவ்வாறு தொலைபேசி எடுப்பதை,மின்னஞ்சல் அனுப்புவதை அவர்கள் பெருமையாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் மனநெருக்கடிக்குள்ளாகின்றோம். தொடர்ச்சியாக இதனைப் பேணமுடியாது. இந்த நிலையைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு, புலம்பெயர் சஞ்சிகைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவதில்லை பிரச்சினை அதே போல் இங்கிருந்து வரும் இதழ்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்பதையே நாங்கள் சொல்ல வருகின்றோம்.

ஈழத்தில் சிற்றிதழ்களின் வருகையும் தொடர்ச்சியும் மிகக் குறைவான நிலையிலேயே இருக்கின்றது. வாரப் பத்திரிகைளில் வரும் துணுக்குகளைக் கவிதையாகக் கொண்டாடும் நிலையொன்று திரும்பவும் தலையெடுக்கின்றது. எனவே கவிதைக்கான இதழின் தேவை இன்னும் இருப்பதாகவே தோன்றுகின்றது. அதற்கு கவிஞர்கள் படைப்பாளிகளின் ஆதரவு மிக அவசியமானது.

0



சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்